Friday, 25 November 2011

ஜாதகப்படி நோய் தீருமா...?

பொதுவாக ஜோதிடத்தின் நம்பிக்கை இல்லாதவர்கள் எங்கோ வெகுதொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும் இன்னொறுவனுக்கு தீமையும் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் அந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும் 

ஆனால் ஒருவிஷயத்தை மிக சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம் பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம் 

பூமியில் உள்ள தாவரங்கள் ஒளி சேற்கையினால் தங்களது உணவை தாங்களே சமைத்து கொள்வதை விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிறுபித்து காட்டுகிறது சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ அதற்கு எந்தவிதமான சக்தி தாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற்றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது 

அப்படி பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து பல காரியங்களை செய்கிறது செய்விக்கிறது சரி அப்படி செய்வதாக இருக்கட்டும் எதனால் இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் செய்ய வேண்டும் அதன் மூல காரணம் என்ன என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும்பும் 

இந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு மெய்ஞானத்தை நாட வேண்டும் உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம் அதாவது நன்மை செய்தால் நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப்படையாகும் 

மனிதன் தனது வாழ்நாளிலும் வாழ்வுக்கு முந்தைய நாளிலும் நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான் அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான் அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும் தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும் அந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என்கிறான் நாத்திகன் இயற்க்கை என்கிறான் 

நீதிபதியின் தீர்ப்பை செயல்வடிவம் படுத்த சில புறக்கருவிகள் வேண்டும் அதே போலவே கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டுவந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைபடுகிறது இந்த் இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான் 

இதன் அடிப்படையில் பார்க்கும் போது மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும் கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் காரணமாக இருக்கிறது அதாவது மனிதனுக்கு நோய் வருவதற்கும் விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம் 

சின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும் இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்துதான் மாண்டிருக்க வேண்டும் அந்த காலகட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனுபவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம் அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும் வறுமையாலும் துன்பப்படுவது 

திருமதி மைதிலி சுப்ரமணியன் குழந்தை அனுபவீக்க்ம் வேதனைக்கும் இது தான் காரணம் என்று ஜாதகம் சொல்கிறது குழந்தையின் ஜனன ஜாதகத்தின் சந்திரன் வலுவிழந்து மாந்தியால் பார்க்க படுகிறான் இதனால் தான் சீதள சம்பந்தமான நோய் அந்த குழந்தையை வாட்டி வதைக்கிறது மேலும் அதன் ஜாதகப்படி வரப்போகும் குரு பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்க இருப்பதினால் கர்மாவினால் ஏற்பட்டிருக்கும் இந்த நோய் இன்னும் மூன்று மாதத்திலிருந்து படிப்படியாக குறையத்துவங்கி விடும் 

]இருந்தாலும் குழந்தை தற்போது அனுபவிக்கும் வேதனையிலிருந்து விடுபட ஒரு எளிய வழிமுறை இருக்கிறது அந்த வழிமுறை நமது சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டதாகும் அதை பின்பற்றினால் குழந்தையின் கஷ்டம் ஓரளவு குறைய ஆரம்பிக்கும் 

அதாவது நூறு கிராம் ஓமத்தை லேசாக இடித்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும் அது நூறு மில்லி அளவு வற்றியவுடன் வடி கட்டி அரைலிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி பதம் வந்ததும் இறக்கி வைத்து ஐம்பது கிராம் கற்பூரத்தை பொடிசெய்து கலக்கி வைத்து கொள்ள வேண்டும் 



குழந்தைக்கு மூச்சிறைப்பு மற்றும் சளி தொல்லை ஏற்படும் போது மேலே நான் சொன்ன எண்ணெயை மார்பிலும் முதுகிலும் போட்டு நன்றாக அழுத்தாமல் அனல் பறக்க தேய்த்துவிட வேண்டும் இது உடனடியாக நல்ல பலனை தரும் மேலும் இந்த எண்ணெய் ஆஸ்துமா நெஞ்சுவலி முதுகுவலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரக்கூடியது 

சித்தர்கள் குறிப்பிட்ட இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பாருங்கள் இப்போது கிரகங்கள் நல்ல நிலையில் வர ஆரம்பித்து இருப்பதினாலும் இந்த மருந்தின் வேகத்தாலும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Friday, 21 October 2011

நகரத்தின் வயது 5 கோடி!




ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் எப்படி எல்லைகளை தீர்மானிக்க முடியாதோ, அதேபோல் தேடல்களுக்கும் எல்லைகள் கிடையாது. ஏதாவது ஒரு எல்லையை தொட்டுவிட மாட்டோமா.. என்ற தேடல்கள் ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதனை பிழைக்க வைக்க ஆயிரம் ஆயிரம் மருந்தை தேடிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களின் அடுத்த இலக்கு மனிதனுக்கு சாவு என்பதே ஒன்று இருக்கச் செய்யும் சாகா வரத்தை நோக்கித்தான். அது முடியுமா..? ஏன் முடியாது.. முனிவர்களும் சித்தர்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக புராணம் சொல்லியிருக்கிறதே.. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை இறப்பை தொடாமல் இருக்க அவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? அவர்கள் இப்போதுள்ள ஆராய்ச்சியாளர்களைவிட வல்லமையும், அறிவியலும் தெரிந்தவர்களா? என்ற தேடலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மனிதனின் சக்தி எப்படிப்பட்டது.. விண்கற்களில் இருந்து விழுந்த பூமிப்பந்தில் மனிதன் எப்போது உருவானான் என்ற தேடலின் ஒரு பகுதிதான் இது..
ஸ்காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் விரிந்த பரப்பு அது. மிகப்பெரிய ஆராய்ச்சிக் கப்பல். கப்பலின் மேற்பரப்பில் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த ஆராய்ச்சியாளர் நிக்கி வைட் தனது சகாக்களுடன் நின்றுகொண்டிருந்தார். இந்த குழுவின் முக்கிய நோக்கம், கடலின் ஆழ்பரப்பில் உள்ள எண்ணெய் வளங்கள், பூமி அடுக்கில் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்வதுதான். இதற்காக கப்பலின் தனி அறையில் ஆழ்கடலின் தன்மைகளை மீ ஒலி மற்றும் அதிநவீன எக்கோ ஒலிக்கருவிகளின் உதவிகளோடு ஆய்வு நடத்தி, அட்லாண்டிக் கடல் அடிப்பரப்பின் தன்மைகளை அறிக்கையாக அளிப்பதே இக்குழுவின் பணி.
அன்றும் அப்படித்தான் அவர்களின் பணி இருந்தது. பரந்து விரிந்த அட்லாண்டிக் கடல் பரப்பு இவர்கள் பயணிக்கும் கப்பலின் சத்தமும், தண்ணீர் கிழித்துச் செல்லும் சத்தத்தைத் தவிர எதுவும் இல்லை. ரம்மியமான மாலை மயங்கும் நேரம். ஆராய்ச்சிக் குழுவினர், அதிநவீன எக்கோ ஒலிக்கருவிகள் மூலம் அட்லாண்டிக் கடல் பரப்பின் ஆழத்தின் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் ஆழத்தில் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பாறைகளின் தன்மைகள், மணல் படிமங்களின் தன்மைகள் பொறுத்து எக்கோ ஒலிக் கருவிகளின் வழக்கமாக கேட்கும் ஒலியின் தன்மைகள் சற்றே வித்தியாசமாய் இருந்தது அன்று. ஒலியின் வித்தியாசம் கருவியின் கோளாறாய் இருக்கும் என்று சந்தேகித்துக்கொண்டிருக்க, கடலடியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் எக்கோ கருவியுடன் பொருத்தியிருந்த காமிரா, கப்பல் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த திரையில் படங்களை அனுப்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஆராய்ச்சிக் குழுவினருக்கு, தங்கள் கண்களால் பார்ப்பது கனவா அல்லது நனவா என்றே நம்ப முடியவில்லை. ஏனெனில் அவர்கள் கடல் அடியில் கண்டது மிகப்பெரிய மாநகரத்திற்கான தடயங்கள்.. கொஞ்சம் கூட தாமதிக்காமல், சில ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் பாய்ந்தார்கள்.
கடலுக்குள் குதிக்கும்வரை, ஏதோ எரிமலை வெடித்து அது பாறையாக பல மீட்டர் தூரத்திற்கு பரவியிருக்கலாம் என்பதுதான் அவர்களின் கணிப்பு. ஆனால், அத்தனையும் தகர்த்தது, அவர்கள் அப்போது கண்ட காட்சி. இதுகுறித்து, நிக்கி வைட் கூறும்போது அவரின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
எங்கள் குழு கொஞ்சம் கூட நம்பவில்லை அந்த காட்சியை. கிட்டத்தட்ட 10 ஆயிரம் சதுர கி.மீட்டர் தூரம் வரை நீண்டு கிடந்தது நாங்கள் கண்ட அந்த நிலப்பரப்பு. கண்டிப்பாக அது எரிமலையின் சாம்பல் படிவம் இல்லை. அது மிகப்பெரிய நகரம்தான். அதனுடைய சில பாகங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பினோம். நாங்கள் கணித்தது சரிதான். கார்பன் வயது கணிப்புப் பஐ, கிட்டத்தட்ட 5 கோடியே 60 லட்சம் ஆண்டுக்கு முந்தைய நகரமாக அது இருக்கும் என்று ஆராய்ச்சியில் கணித்திருக்கிறார்கள். அந்த நிலப்பரப்பு, மேற்கு ஆர்க்னே நகரத்தில் இருந்து ஷெட்லேண்ட் தீவு வரை விரிந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இதனுடைய பெரும்பகுதி ஸ்காட்லாந்தின் ஒரு பகுதியில் ஆரம்பித்து நார்வே வரையிலும் இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் திட்டமிட்டு மிக நாகரிகமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த நகரம், ஒரு வரைபடம் போலவே காட்சியளிக்கிறது. அந்த நிலப்பரப்பு படிமத்தில் கிட்டத்தட்ட 8 நதிகள் ஓடிய தடயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். புதைந்து கிடக்கும் நகரத்தின் எஞ்சிய சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, 5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஆழ்கடலில் புதைந்து கிடக்கும் நகரத்து மக்கள் மிகவும் நாகரிகமாகவும் அதே நேரத்தில் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கக்கூடும் என்று நம்புகிறோம். இப்போது நினைத்தாலும் புல்லரித்துப் போகிறது என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர் நிக்கி வைட்.
ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், கண்டுபிடிப்புகள், சில வீர வரலாறுகள் அட்லாண்டிக் கடலில் எப்படி மூழ்கி போயிருக்கும்..? ஒரே சுனாமியில் அழிந்து போயிருக்குமா..? அல்லது புவி வெப்பமயமாதல் போன்ற ஏதேனும் ஒரு பிரச்சினையால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழிந்து போயிருக்குமா..? ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு விடை தேட ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசைகள், கனவுகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த நகரம்.. 2 கி.மீ. கடல் அடிப்பரப்பில் புதைந்துபோய் இருக்கிறது என்றால், இன்னும் 5 கோடி ஆண்டுகள் கழித்து பூமிப்பந்தில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிக்கும் பல்வேறு நகரங்களும் இதேபோல்தான் காணாமல் போகுமா..? இன்று புவிவெப்பமயதாலால் சர்வதேச நாடுகளே அச்சம் கொண்டு தங்களை பாதுகாக்க பல்வேறு காரணிகளைத் தேடிக்கொண்டிருப்பது பனிப்பாறைகள் உருகி.. கடல் மட்டம் உயர்ந்து மிகப்பெரிய அழிவை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகத்தானா..? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒருவேளை மனித நாகரிகமும், மனிதனின் பிறப்பு ரகசியமும் அட்லாண்டிக் கடலடி பரப்பில்தான் ஒழிந்து கிடக்குமா.. என்ற கேள்விக்கான பதிலையும் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். விடை கிடைக்குமா...?

Thursday, 20 October 2011

பேய்களுக்கு கால்கள் உண்டா?



சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம்,பிராணமயகோசம்,ஞானமய கோசம்,என்று மூன்று வகைப்படும்

கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது  அதாவது சதை,எலும்பு,ரத்தம் சம்பந்தப் பட்டது

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது

ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது

இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல

அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன

எனவே பேய்களுக்கு கால் உண்டு

பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்

நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

Thursday, 15 September 2011

புவிவெப்பமயமாதல் ஓர் அமானுஷ்யம்!






வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது, தற்போது நடந்துகொண்டிருப்பது பிரமிப்பாக இருக்கும். நாம் எதுவெல்லாம் நடந்திருக்காது. இருந்திருக்காது என்று நினைக்கிறோமோ அதெல்லாம் அப்போது நடந்திருக்கிறது என்பதே பிரமிப்பான விஷயம்தான்.
அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் இப்போது படிக்கப் போகிறீர்கள். சமூக ஆர்வலர்கள் ஆரம்பித்து எல்லோர் வாயும் முணுமுணுக்கும் வார்த்தை சுற்றுப்புற சீர்கேடு. அதிலும் குறிப்பாக குளோபல் வார்மிங் என்ற வார்த்தையை சொல்லாதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். குளோபல் வார்மிங் என்றால், பூமி கட்டுங்கடாங்காத வெப்பம் சூழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். சுருக்கமாக புவி வெப்பமயமாதல். குளோபல் வார்மிங் பிரச்சினையால் பச்சை வீட்டு வாயு அதிகளவில் வெளியேறுவதால் ஓசோன் படலம் ஓட்டை விழுந்து புற ஊதாக் கதிர்களும், அகச்சிவப்பு கதிர்களும் நேரடியாக பூமியைத் தாக்கும். இதனால், மனிதர்களுக்கு தோல் புற்றுநோய்கள் ஆரம்பித்து, வித்தியாசமான உயிர்க்கொள்ளி நோய்கள் எல்லாம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள்.
புவி வெப்பமயமாதல் எப்படி ஏற்படுகிறது? இந்தக் கேள்விக்கு கண்டிப்பாக உங்களுக்கும் பதில் தெரியும். இருந்தாலும் கூடுதலா தெரிஞ்சு வச்சிக்கோங்க. வீடு, அலுவலகங்கள், கார், பஸ்களில் பயன்படுத்துகிற ஏ.சி., பிரிட்ஜ் சாதனங்களில் இருந்து வெளிவரும் குளோரோ புளுரோ கார்பன் என்னும் வாய்வுதான் இந்த புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம்னு சொல்றாங்க. பூமியைப் பாதுகாக்கும் படலத்துடன், இந்த வாயு வினைபுரிந்து அதை ஓட்டை விழச் செய்கிறது. அதனால், கட்டுக்கடங்காத வெப்பம் பூமியைத் தாக்குகிறது. இந்த வெப்பத்தின் அளவு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால், துருவத்தில் உள்ள ஐஸ் மலைகள் உருகும். கடல் நீர்மட்டம் உயரும். இதனால், பல்வேறு கண்டங்கள் அழிந்து போகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவான சுனாமி கூட புவி வெப்பமயமாதலால்தான் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உலக நாடுகள் , மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு மின்சாரத்தை வழங்குவதற்காக, அணு உலைகளை அமைத்து வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கார்பன் துகள்கள், பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்கள், எந்திரங்களில் இருந்து வெளியேறும் கார்பன் துகள்களால்தான் புவிவெப்பமயமாதல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த புவி வெப்பமயமாதல் வாகனப் பெருக்கம், அணு உலைகள் பெருக்கம், குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினால்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க, அதெல்லாம் சுத்தமாய் பொய் என்று சொல்லும் அளவிற்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இருக்கிறது.
1799 ஆம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் என்பவர் அமெரிக்க செனட்டில், புவி வெப்பமயமாதல் குறித்த பிரச்சினையை கிளப்புகிறார். பூமியில் கட்டுக்கடாங்காத கார்பன் வாயுக்களால் பூமிப் பந்து வெப்பத்தால் கட்டுண்டு கிடக்கிறது. இதனால், துருவங்களில் இருக்கும் பனிச் சிகரங்கள் உருகி அமெரிக்காவிற்கு ஆபத்து நேர்ந்துவிடும். எனவே இந்தப் பிரச்சினையை அரசு உடனடியாக கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அமெரிக்க அதிபராய் பதவி வகித்தது, ஜான் ஆடம்ஸ். தாமஸ் ஜெபர்சன், 1779 முதல் 1781 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் மூன்றாவது அதிபரும் அவர்தான். இவ்வளவு முக்கிய நபரான தாமஸ் ஜெபர்சன் வெளியிட்ட இந்த செய்திக் குறிப்பு கண்டிப்பாக பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், பூமி வெப்பமயமாதலுக்கு காரணம் என்று நாம் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறோமே... அணு உலைகள், குளிர்சாதனங்கள், மற்றும் பெட்ரோல், டீசலால் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள். அவைகள் எல்லாம் 1799ஆம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் அறிக்கை வெளியிடும்போது பயன்பாட்டிலேயே கிடையாது என்பது ஆச்சர்யமான விஷயம்.
ஆம்.. உண்மைதான். மின்சாரத்திற்காக மட்டும் நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அணு உலைகள், உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது 1954ஆம் ஆண்டுதான். அதேபோல குளோரோ புளோரோ கார்பனை வெளியேற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என்று சொல்வதைவிட குளிர்சாதனப் பெட்டி குறித்த யோசனையை முதன்முதலில் 1758ஆம் ஆண்டு பெஞ்சமின் பிராங்க்ளின்தான் வெளியிட்டார். அவர் அப்போது அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியராக இருந்தார். அவரும் குளிர்சாதனப் பெட்டிக்கான கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாரே தவிர முழுமையாக வடிவமைக்கும் பணியில் அவர் ஈடுபடவே இல்லை.
ஆனால் அதற்குப் பிறகு 1820ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் மைக்கேல் பாரடே என்னும் அறிவியல் விஞ்ஞானிதான் அம்மோனியாவை பயன்படுத்தி குளிர்விப்பானை உருவாக்கலாம் என்று யோசனையை சொன்னதுடன், அதன் வடிவமைப்புப் பணிகளிலும் முதன்முதலாக ஈடுபட்டார். இருப்பினும் குளிர்சாதனப் பெட்டி, மற்றும் குளிர்சாதனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்னவோ 1880ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் என்று வரலாறு சொல்கிறது. அதேபோல 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வதேச அளவில் கார்கள், வாகனங்கள் எல்லாமுமே நீராவியில்தான் ஓடியிருக்கிறது. முதல் முறையாக எண்ணெயை பயன்படுத்தி நீராவியால் ஓடும் கார் 1815ஆம் ஆண்டுதான் பயன்பாட்டிற்கு வந்தது. பெட்ரோலை பயன்படுத்தி ஓடும் வாகனம் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது 1838ஆம் ஆண்டுதான்.
மேற்சொன்ன கண்டுபிடிப்புகளும், அதன் காலங்களையும் வைத்துப் பார்க்கும்போது, 1790ஆம் ஆண்டுகள் என்பது பெட்ரோல், குளிர்சாதனப் பெட்டி, அணு உலைகள் எதுவுமே பயன்பாட்டிலேயே இல்லாத காலகட்டம். ஆனால், 1799ஆம் ஆண்டு புவி வெப்பமயமாதல் குறித்து மிகவும் பயங்கரமான ஒரு அறிக்கையை முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சான் தாக்கல் செய்திருக்கிறார் என்றால், இப்போது புவிவெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களாக விஞ்ஞானிகள் சொல்லும் காரணிகள் பொய்யா? அல்லது 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் அல்லது அதற்கும் முந்தைய மக்கள் பூமிப்பந்தை தாக்கும் அளவிற்கு வெப்பத்தை கிளர்ச்சியடைய செய்யும் அளவிற்கு மாறுபட்ட கருவிகளை பயன்படுத்தி இருந்தார்களா? றஎவைதான் உண்மை... அல்லது 1700ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் விஞ்ஞானத்தில் நம்மைவிட விஞ்சியவர்களா? விந்தையான பல கேள்விகள்.. நம்மை துளைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு வைக்கப்பட்டிருக்கும் கேள்விகள் குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

Friday, 19 August 2011

முன்னோர்கள் விட்டுச்சென்ற டாட்டூஸ்!






இந்த பிரபஞ்சம் முழுவதும் விசித்திரம் நிறைந்து கிடக்கிறது. இன்று எதெல்லாம் புதுமை, கண்டுபிடிப்பு என்று தலையில் வைத்துக்கொண்டாடுகிறோமோ அதெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்திருக்கிறது. அப்படியானால், நம்மைவிட முன்னோர்கள் திறமையானவர்களா, இன்று நமக்கு கிடைக்கும் அத்தனை வசதிவாய்ப்புகளும் அவர்களுக்கும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகமும் நம் முன்னால் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
நம் தாத்தாப் பாட்டிக் காலங்களில் பச்சைக் குத்துவது என்பது சர்வ சாதாரணம். அது அப்படியே நாகரிகம் கருதி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது. ஆனால், இன்று மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் இளைஞர்களும், இளைஞிகளும் கை, கால் ஆரம்பித்து உடம்பில் சகல இடங்களிலும் டாட்டூஸ் வரைந்துகொள்கின்றனர். இன்று நம் இளைஞர்கள் எது பேஷன் என்று கலர் கலராய் உடலில் வரைந்துகொள்கிறார்களோ, அதே டாட்டூஸ் 5000 ஆண்டுகளுக்கு முன், ஒரு இனத்தின் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினரை தனியே பிரித்துக் கண்டறியும் ஒரு அடையாளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொன்னால்... அது வியப்புக்குரிய விஷயம்தானே!.
பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் ஜோன் பெட்ச்சர். ஜோனுக்கு மனித நாகரிகம் பற்றிய வளர்ச்சியை தெரிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல்தான். அதனால், பல்கலைக்கழகத்துக்கு வருவது என்னவோ சொர்ப நாள்கள்தான். பெரும்பாலான நாட்கள் தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஊர் ஊராக சுற்றுவதுதான் அவருக்கு வேலை. அப்படித்தான் அன்றும் நடந்தது. 1991ஆம் ஆண்டு. இத்தாலிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பனிக்கொட்டும் ஆல்ப்ஸ் மலை அது. அந்த மலைதான் ஜோனுக்கு மனித நாகரிகத்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி இடமாக இருந்தது. மலைகளின் பல இடங்களில் தோண்டிப் பார்த்தாகிவிட்டது. கிடைத்தது என்னவோ, மலை ஆடுகளின் எலும்புகளும், விலங்குகளின் படிமங்களும்தான். ஆனால், அந்தப் படிமங்கள் அனைத்தும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துகிடந்த படிமங்கள்தான். இருந்தாலும் மனம் தளரவில்லை ஜோன். அந்தப் பனிப் பிரதேசத்தின் ஒரு மூலையில் விசித்திரமான ஒரு ஐஸ்கட்டி பாறைகளுக்கு இடையில் கிடந்ததைப் பார்த்தார். அந்த விசித்திர ஐஸ் கட்டியை எப்படியாவது உடைத்துப் பார்த்துவிட வேண்டும். அதில் நம் தேடலுக்கான விடை கிடைக்கலாம் என்பது ஜோனின் எண்ணம். பாறைகளுக்கு ஊடே சிக்கிக் கிடந்த அந்த விசித்திர ஐஸ் கட்டியை பெரும் பாடுகளுக்கு இடையே ஜோன் தன் மாணவர்களுடன் உதவியுடன் எடுத்தார்.
ஐஸ் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அது பல ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஒரு மனிதன் என்று. ஜோனுக்கு ஒருபுறம் அதிர்ச்சி என்றாலும், மனிதனின் கலாசாரத்தை சொல்லப்போகும் ஒரு பொக்கிஷமாக அந்த சடலம் தெரிந்தது ஜோனுக்கு. பாதுகாப்புடன் தன் சோதனைக் கூடத்திற்கு அந்த சடலத்தை எடுத்து வந்தார். கூடிப்போனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனிதனின் சடலமாக இருக்கலாம் என்பதுதான் ஜோனின் கணிப்பு. கார்பன் வயது சோதனைக்கு அந்த சடலத்தை உட்படுத்தியபோது, அந்த சடலம் கிட்டத்தட்ட 5,200 ஆண்டுகளுக்கு முட்பட்டது என்பது தெரிய வந்தது.
5200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சடலம் அப்படியே கிடைத்தது, ஜோனுக்கு ஆச்சர்யம். சடலத்தில் முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால், மூட்டு பகுதிகளில் கறுப்பு நிறத்தில் புள்ளிகள் தொடர்ச்சியாய் வட்டமாகவும் கோடாகவும் தெரிந்தது. என்ன என்று தொடர் ஆராய்ச்சியில் ஜோன் ஈடுபட்டபோதுதான் அது டாட்டூஸ் என்பது தெரிய வந்தது. இந்த ஆய்வை ஜோன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தபோது, அக்குபஞ்சர் மூலம் நோய்களை எப்படி தற்காலத்தில் குணப்படுத்துகிறார்களோ அதேபோல ஒரு வைத்தியமுறையாக டாட்டூஸை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்கள். ஆனால், அதுவல்ல உண்மை. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து மம்மிக்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தபோது, ஒரு சில பெண் சடலங்களில் இதேபோல டாட்டூஸ் ஓவியங்கள் காண முடிந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை அவர்கள் வாழ்ந்திருக்கவில்லை. அதனால், அந்த இனத்தில் சில பெண்களுக்கு பால்வினை நோய் வந்திருக்கலாம். அதனால், அந்தப் பெண்களை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே கைகளிலும் கால்களிலும் அவர்கள் பச்சைக் குத்தியிருக்கலாம். அதன்மூலம் மற்ற ஆண்கள் அவர்களை நெருங்காமல் இருந்திருக்கலாம் என்பது மற்றொரு தரப்பின் ஆராய்ச்சி.
பச்சைக் குத்தும்முறை முற்றிலும் எகிப்திய காலத்தில்தான் உருவானது. எகிப்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது மம்மிக்களுடன் கிடைத்த சில நுண்ணிய ஊசிப் போன்ற பொருள்கள், முற்றிலும் டாட்டூஸ் வரைவதற்கான கருவிதான் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் வரைந்து வைத்திருந்த பெண் ஓவியங்களில் கூட டாட்டூஸ் வரையாமல் விட்டுவைக்கவில்லை. மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில் கர்ப்பம் தரித்த பெண்கள் பிரசவ காலத்தில் பிரசவ வலியை குறைப்பதற்காகத்தான் இந்த டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றியிருக்க வேண்டும். ஏனெனில் கிடைத்த மம்மிக்கள் சடலங்களில் தொடை மற்றும் அடிவயிறு, மற்றும் மார்பகங்களிலேயே அதிகளவில் டாட்டூஸ் வரையப்பட்டிருக்கிறது என்று இன்னொறு ஆராய்ச்சி சொல்ல, இல்லவே இல்லை பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் எகிப்திய காலத்தில் டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் ஓவியம், சிற்பம் வடிப்பதில் கைத் தேர்ந்தவர்கள், அவர்களின் கலை ரசனைக்கான ஒரு அடையாளம் மட்டுமே இந்த டாட்டூஸ் என்கிறது இன்னொரு ஆராய்ச்சித் தரப்பு.
எகிப்து ஆரம்பித்து அதன்பின் கிரீன்லாந்து, சைபீரியா மற்றும் நியூசிலாந்து போன்ற அகழ்வாராய்ச்சியிலும் 1000 ஆண்டுகளுக்கு முன் டாட்டூஸ் வரையப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1700 ஆம் ஆண்டுகள் வாக்கில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக மக்கள் அடிமைகளாகவும், நாடோடிகளாகவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மூலமாகவே டாட்டூஸ் கலை பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. அதுமட்டுமல்லாமல், இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் அது. தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டி மலைகளில் ஏராளமான கல்லறைகள். அந்தக் கல்லறையில் சடலங்களாக அடைப்பட்டுக் கிடந்தது மன்னர் குலத்து தளபதிகள். கல்லறைகள் முழுவதும் உறைந்த பணியால் முழுவதும் மூடிக்கிடந்தன. அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு கல்லறைகளை தோண்டினார்கள் அகல்வாராய்ச்சியாளர்கள். அந்த சடலங்களில் பெரும்பாலான சடலங்களில் விளையாட்டு மற்றும் விலங்குகளைக் குறிக்கும் டாட்டூஸ் வரையப்பட்டிருந்தது என்கிறது வரலாறு.
வாணிபம், போர், உள்நாட்டுக் கலவரம் ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இன்று நாம் கொண்டாடும் டாட்டூஸ் வரையும் பழக்கம் பரவியுள்ளது. ஒவ்வொரு ஆராய்ச்சித் தரப்பும் டாட்டூஸிற்கு ஒவ்வொரு காரணங்களை முன்வைத்தாலும், டாட்டூஸ் தோன்றியது எகிப்தில்தான் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. அப்படியானால், மனித இனத்தின் நவீன ம், பொழுதுபோக்கு, கலைகள் எல்லாவற்றுக்குமே எகிப்துதான் முன்னோடியா...? ஆராய்ச்சிகள் நீள்கிறது!


Tuesday, 2 August 2011

விசித்திர குள்ள மனிதர்கள்!



விடைதெரியாத விஷயங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. மனிதர்கள் இப்பூமியில் வாழ்ந்ததற்கான அளவுகோலாக ராமர், யேசு, முகமது நபி, புத்தர் காலங்களை வைத்தே கணக்கிட்டு வருகிறோம். அதனால்தானோ என்னவோ, நம் எண்ணங்கள் குறைந்தபட்சம் 2500 லிருந்து 3000 ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ்ந்திருப்பார்களா என்ற உண்மையை நம்ப மறுக்கிறது. அப்படி நம்பினாலும் அதை ஏதோ கட்டுக்கதையாகவோ, ஒரு அமானுஷ்யமாகவோதான் பார்க்கத் தோன்றுகிறது.
பல லட்சம் ஆண்டுகளாக இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. இன்று மனிதர்கள் வாழும் அமைப்பாக இருக்கும் நகரங்கள் அனைத்தும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் பரப்பாகவும், நதியாகவும் இருந்திருக்கிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய நகரங்களாக இருந்த பரப்பு இன்று கடல் பரப்பாகவும் மாறி இருக்கிறது. பூமி வரைபடத்தை மாற்றி எழுதும் ஆழிப் பேரலையான சுனாமி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. அந்த அலைகள் மூலம் கண்டம் விட்டு கண்டம் கூட மனிதர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு கண்டத்தில் இருக்கும் மனிதர்கள் குட்டையாகவும், மற்றொரு கண்டத்தில் இருக்கும் மனிதர்கள் நெட்டையாகவும் இருக்கிறார்கள் என்று கூட ஆராய்ச்சிகள் கூறுகிறது. விஞ்ஞானம் ஆராய்ச்சிகளை நம்புபவர்கள்தானே நாம். அப்படியென்றால் மேற்சொன்ன விஷயங்களையும் நம்பித்தான் ஆக வேண்டும். இனி சொல்லப்போகும் விஷயங்களையும் நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்தோனேஷியக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் புளோரஸ் எரிமலைத் தீவில் கூட 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 3 அடியில் மனிதர்கள் வாழ்ந்ததர்கான ஆதாரங்களை இப்போது ஆராய்ச்சிகள் கண்டுபிடித்து கூறியிருக்கின்றன.
இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் புளோரஸ் என்ற ஒரு தீவு. இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர்தான் நெல்லிஸ் குயா. இவர் தன் சந்ததிகளுக்கு தனது மூதாதையர்கள் கூறியதாய் சொன்ன விசித்திர கதை இதுதான்.
புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்கள் பெரிதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியும், மற்றவர்கள் புரியாத மொழியும் பேசுவார்கள். இவர்கள் கிராமத்திற்குள் அடிக்கடி புகுந்து, பயிர்கள், உணவுப் பொருள்கள், பழங்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் குள்ளர்களை எபுகோகோ என்று அழைப்பார்கள் என்றும் கதை சொல்வார். இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் 2003ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பு.
இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் இருந்திருக்கிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறும் அதே சமயத்தில், புளோரஸ் தீவு நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கின்றன. முக்கியமாக பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றார்கள் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே குழப்பம் நீடிக்கிறது.
ஆனால், அறுநூறு அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கருவிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்றிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதன் பிறகு கடல் மட்டம் அறுநூறு அடி உயர்ந்ததற்கு நிலத்தின் மேல் இருந்த பனி உருகிக் கடலில் கலந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் நாலாயிரம் அடி வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் கற்கால மனிதர்கள் எப்படி சென்றார்கள் என்ற கேள்விக்கு புளோரஸ் தீவிற்கு கற்காலக் குள்ள மனிதர்கள் பாலி தீவில் இருந்து சுனாமி அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக் கிளைகள் மூலம் வந்திருக்கலாம் என்கிறார் டிம்வைட் என்ற ஆராய்ச்சியாளர்.
ஆனால், ஆசியக் கண்டத்திலிருந்து நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்தில், இருக்கும் புளோரஸ் தீவிற்கு குள்ள மனிதர்கள் எப்படி சென்றிருப்பார்கள் என்ற கேள்விக்கு, நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியப் பகுதியில் கடல்மட்டம் நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருக்கும். ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கும்.அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருப்பார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கும்.அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால், தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இறந்துபோயிருப்பார்கள். என்று குள்ள மனிதர்கள் குறித்து யூகமாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள், ளிவில்லாத ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் கதைக்கான முழுவடிவம் இன்னும் ஆராய்ச்சிக்குள்தான் இருக்கிறது. விடை கிடைக்குமா?