Saturday 11 September 2010

மயங்கி கிடக்கும் மனிதன்

 



     ண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து முடித்த பிறகு இறைவன் மனிதனை படைத்தான் தனது கடேசி படைப்பு மனிதன் என்பதனால் அவனை சிருஷ்டிப்பதில் மட்டும் அவன் தனிக்கவனம் செலுத்தினான் அதனால் தான் மனிதர்கள் அனைவரும் ஏறக்குறைய இறைவனை போலவே இருக்கிறார்கள். கடவுளிடம் இருக்கும் ஒரே ஒரு சக்தி மட்டுமே மனிதனிடம் இல்லை மனிதன் நீரில் மிதக்க படகினை கண்டான் வானில் பறக்க விமானம் கண்டான் பூமியை அகழ்ந்து பார்க்க சுரங்கம் கண்டான் அன்னை பூமியில் சாதித்தது போதுமென்று வானமண்டலத்தை அளக்க துவங்கினான் சந்திரனில் மிதித்து செவ்வாயை எட்டிபிடித்திருக்கும் மனிதன் இதுவரை பெறாத ஒரே சக்தி புதிய உயிர்களை படைப்பது மட்டுமே படைக்கும் தொழிலை மட்டும் மனிதன் கண்டறிந்து விட்டால் அவனும் இறைவனும் ஒன்றாகி விடுவார்கள் இது நடக்குமா? நடக்க முடியுமா? என்ற வாதங்கள் தொன்றுதொட்டு வருகின்றன அவைகள் நமக்கு வேண்டாம். நாம் அறிந்து கொள்வது மனிதனாகிய நாம் சாதாரண பிறவிகள் இல்லை சற்றேற குறைய இறைவனுக்கு நிகரான பிறவிகள் என்பதை உணர வேண்டும்.

மனிதனை விட நரி தந்திரமானது மனிதனை விட புலியும் சிங்கமும் வீரம் பொருந்தியது அப்பாவி மான் கூட மனிதனை விட அதிவேகமாக ஓட கூடியது. யானையின் பலத்தின் முன்னே மனிதன் ஒரு சிறு துரும்பு இப்படி பலம் பொருந்திய மனிதனை விட பல தகுதிகள் வாய்ந்த விலங்குகள் எதுவுமே மனிதனை அடிமைபடுத்திவிட முடியாது. காரணம் அவைகள் எவற்றிடமும் இல்லாத அறிவு பலம் மனிதனிடம் மட்டும் தான் உள்ளது. இந்த அறிவை வைத்து மனிதன் தன்னை விடவும் பல மடங்கு சக்தி மிகுந்த எதை வேண்டுமென்றாலும் அடக்கி விடுவான் அடிமையாக்கி விடுவான். அப்படி பட்ட அறிய படைப்பான மனிதன் எப்படி இருக்கிறான்? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

காட்டு விலங்குகள் ஒருபருவ காலம் மழை பொய்த்து விட்டாலும் குடிக்க தண்ணீர் இல்லாமலும் உண்ண ஆகாரம் இல்லாமலும் போய்விட்டாலும் வருத்தபடுவது இல்லை மரணம் கண்ணுக்கெதிரே தெரிந்தாலும் கூட அவைகள் அஞ்சுவது இல்லை ஆனால் மனிதன் அப்படி அல்ல பத்து வருடம் பஞ்சம் ஏற்பட்டாலும் காலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை சேகரித்து கொள்ள அவனால் முடியும். கொடிய நோய் வந்தாலும் ஆக்ரோஷமான இயற்க்கை சீற்றம் வந்தாலும் தனது அறிவை வைத்து முடிந்த வரையில் தப்பித்து கொள்ள இயலும் ஆனாலும் மனிதன் விலங்குகளை போல மகிழ்ச்சியாக இல்லை அது ஏன்?

ஒரு சமயம் ஏசுநாதர் தனது சீடர்களை நோக்கி வானத்து பறவைகளை பாருங்கள் அவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை ஆனாலும் அவைகள் மகிழ்வோடு பறக்கின்றன என்று சொன்னார். இதன் அர்த்தம் என்ன? தனது வாழ்நாளை நாளைக்கும் நடத்தி செல்ல எதாவது வேண்டுமே என்று சேமித்து வைக்காத பறவைகள் கூட ஆனந்தமாக பறக்கின்றன. ஆனால் எல்லாம் இருந்தும் அற்ப மனிதனே நீ ஏன் துன்பம் என்ற இருண்ட காட்டில் கிடந்தது தவிக்கிறாய் என்பது தான். மனிதன் மனிதனாக படைக்க பட்டதனுடைய மூலகாரணமே அவன் துன்பம் இல்லாதவனாக இன்ப மயமானவனாக இருக்க வேண்டும் என்பதே ஆனால் மனிதன் தன்னிடமுள்ள மிதமிஞ்சிய அறிவால் சந்தோசத்தை தொலைத்து விட்டு மூலையில் கிடந்தது அழுகிறான்.

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் எதை எதிர் பார்க்கிறான்? தனது படைப்பின் நோக்கமான தனது பிறவியின் இயல்பான இன்பத்தையே எதிர்பார்க்கிறான் ஆனால் பாவம் அவனுக்கு எப்போதும் அழிவில்லாத ஆனந்தத்தை தருவது எது நீர் குமிழி போல நிரந்தரம் இல்லாதது அழிந்து போகும் ஆனந்தம் எது என்று தெரியவில்லை ஒருவன் நினைக்கிறான் மலையளவு பணத்தை பெற்றால் தனக்கு இன்பம் கிட்டுமென்று வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்து நிறைய பணத்தை சம்பாதித்து குவித்து வைத்து விட்டு பார்க்கிறான் ஆகா இவ்வளவு பணத்தை சம்பாதித்து விட்டேனா? என்று ஆனந்த ஊற்று பெருக்கெடுத்து ஓட துள்ளி குதிக்கிறான்.

அந்த குதிப்பும் கும்மாளமும் ஒரே ஒரு நொடி மட்டுமே நீடிக்கிறது அடுத்த கணமே இந்த பணத்ததை யாரவது நம்மிடமிருந்து பிடுங்கி விடுவார்களோ என்று பயப்படுகிறான் அதனால் துக்கம் பணத்தை பாதுகாக்க ஆள் அம்பு படை வேண்டும் அவைகளை தருவது அதிகாரமிக்க பதவியே என்று முடிவு செய்து பதவியை நோக்கி நடக்கிறான் அதையும் பெற்று விட்டால் தன்னை போன்று பதவி ஆசை உடையவர்கள் அதை பிடுங்கி விடுவார்களோ என்று உறக்கம் வராமல் தவிக்கிறான் அதனாலும் துக்கம். பணம் பதவி இரண்டும் இருக்கிறது கூடவே பொறமை குணம் கொண்ட எதிரிகளும் கூடி விட்டார்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க தனது சொந்த பந்தங்களை அருகில் வைத்து கொள்ள வேண்டுமென்று அவர்களை நாடுகிறான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வித விதமான ஆசைகள் அவைகளை நிறைவேற்ற முடியாமல் மீண்டும் துடிக்கிறான் அதனாலும் துக்கம்.

பட்டம், பதவி, பணம், சொந்தபந்தம், அந்தஸ்து இப்படி எல்லாமே நிரந்தரம் இல்லாதது ஆனால் மனிதன் இவைகள் தான் நிரந்தரம் என்று நினைக்கிறான். அதற்கு காரணம் என்ன? கண்ணால் காண்பது இன்பம், காதுகளால் கேட்பது இன்பம், நுகர்வது இன்பம், சுவைப்பது இன்பம், பரிசம் செய்து பார்ப்பது இன்பமென்று புலனுக்கு கட்டு படுகின்ற வஸ்துக்கள் மட்டுமே நிஜமென்று நினைக்கிறான். இதனால் தான் ஆனந்தமாக இருக்க வேண்டிய மனிதனின் வாழ்வு துக்கமாக இருக்கிறது. நிரந்தரம் என்பது கண்களுக்கு தெரிவது மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ள பொருள்களும் நிரந்தரம் தான். அன்பு, கருணை, நிறைவு, திருப்தி, சாந்தி இவைகள் எதுவுமே கைகளால் தொட்டு பார்க்க கூடியது அல்ல ஆனால் நமது உணர்வுகளால் அவைகளை நுகர முடியும்.

நம் முன்னால் ஒருவன் நடந்து வருகிறான் அவன் கைகளில் எதுவோ இருக்கிறது அது இன்னவென்று நமக்கு தெரியாது அவன் அருகில் வரட்டும் வந்த பிறகு அது என்னவென்று பார்ப்போம் என்று காத்திருக்கிறோம் அவனும் வருகிறான் வந்தவன் நம்மை கண்டவுடன் தன் கைகளில் இருப்பதை மறைத்து கொள்கிறான் அவன் தூரத்தில் வந்த போதும் அருகில் வந்த போதும் அவனிடம் இருப்பது என்னவென்று நமக்கு தெரியாமலே போகிறது இதனால் அதை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது ஆவல் விரிந்து விரிந்து கடேசியில் துக்கமாக மாறி விடுகிறது. இதை போலவே நிரந்தரமாக நமக்கு சந்தோசம் தருவது எது என்று தேடி தேடி அடையாளம் தெரியாமலே அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம். நம்மில் பெருவாரியானவர்கள் இதை போலவே வாழ்நாளை கழித்து விடுகிறோம்.

பலபேருடைய வாழ்க்கையானது எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு சாம்பலை போல இருந்த அடையாளமே இல்லாமல் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. இதனால் அவர்களின் பிறந்த பலனை அவர்களால் அறியமுடியமலே போய்விடுகிறது. எவனொருவன் தான் எதற்க்காக பிறந்தோம் என்பதை தெள்ள தெளிவாக தெரிந்து கொள்கிறானோ அவனே சாதனையாளனகவும் இருக்கிறான் சரித்திர ஏடுகளில் மறையாமல் நிரந்தரமாக இடம்பிடித்து விடுகிறான். உண்மையில் நாம் அனைவருமே சாதிக்க பிறந்தவர்கள் அதற்காக தான் இறைவன் நம்மை படைத்திருக்கிறான். ஆனால் நாம் அதை தெரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறோம். நாம் யார்? நாம் பெற வேண்டியது என்ன? நிரந்தரமான நித்தியமான மகிழ்ச்சி என்பது எது என்று இன்றுமுதல் ஆராய துவங்குவோம். சற்று முயற்சி செய்தாலே பல ரகசிய கதவுகளை கடவுள் நமக்காக திறந்து விடுவான். வாருங்கள் அந்த வாசல் வழியாக சென்று நம் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

Friday 30 July 2010

7 ஜூன் 1893, இரவு நேரம்!



சில நாட்கள், சில மணித்துளிகள், சில விநாடிகள் வரலாற்றில் எப்போதும் மறக்க முடியாது. அத்தகைய மிகப்பெரும் வரலாற்றைப் பெற்றுத் தந்த நாள்தான் 7 ஜூன் 1893.
இந்தியாவின் தேசப்பிதா என்று சொன்னவுடன் டக்கென்று நம் நினைவுக்கு வரும் பெயர் மகாத்மா காந்தி. சாதாரன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை தேசப்பிதா மகாத்மா காந்தியாக இந்தியாவிற்கு பெற்றுத் தந்த அந்த நாள்தான் 7 ஜூன் 1893.

அகிம்சை முறையில் இந்தியாவிற்கு சுதந்தரத்தைப் பெற்றுத் தந்த அந்த மாபெரும் மனிதர், தன் வாழ்நாளில் 25 சதவீதம் வாழ்ந்த இடம் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர். காந்தி வாழ்ந்தது மொத்தம் 79 ஆண்டுகள். இங்கிலாந்து நாட்டில் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் கல்வி நிலையத்தில் பெற்ற பாரீஸ்டர் பட்டத்துடன் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் மகாத்மா காந்தி காலடி வைத்தபோது அவருக்கு வயது 24. அதிலிருந்து 20 ஆண்டுகள் அவர் வாழ்ந்தது டர்பன் நகரில்தான்.
அங்குதான் அவர் முதன்முதலில் நிறவேற்றுமையின் கொடுமையும் அடிமை வாழ்க்கையின் அவலத்தையும் கண்முன் கண்டார். 1893ம் வருடம், தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள தாதா அப்துல்லா என்ற வியாபாரியின் வழக்கு விஷயமாகத்தான் இந்தியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்றார் காந்தி.
காந்தியின் விருப்பத்தின்பேரில், பிரெட்டோரியா நகரத்தின் வட பகுதிக்குச் செல்வதற்காக, காந்திக்கு முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருந்தார் தாதா அப்துல்லா. அந்த லோகோமோட்டிவ் என்ஜின் பொருத்திய அந்த ரயில் புறப்பட்டது. ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் ஒரு ஐரோப்பியன் காந்தி பயணம் செய்துகொண்டிருந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வருகிறார். வெள்ளையர் அல்லாத எவரும் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யக்கூடாது என்று காந்தியின் உடைமைகளை வெளியே எறிந்து, காந்தியை வெளியேற்றுகிறார். அந்த ரயில்நிலையம் பீட்டர்மேரீட்ஸ்பெர்க். அன்று ஜூன் 7ம் தேதி.
அந் ஒரு சம்பவம்தான் காந்தியை நிறவேற்றுமைக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிக்கொணர உதவியது. அதற்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாநகரில் காந்தி வசித்தது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள். இந்த விஷயங்களை எல்லாம் காந்தியே தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நாள்தான் அகிம்சை முறையில் என்னை போராட வைத்தது என்ற வாசகத்துடன் எந்த ரயில் நிலையம் அமைந்திருந்த பீட்டர்மேரிட்ஸ்பெர்க் நகரத்தில் இன்றும் அவர் சொன்ன வாசகத்துடன் அந்த சிலை கம்பீரமாக அந்த நகரின் பிரதான சாலையில் நிற்கிறது.
இந்தியாவின் 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடே தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இருபது ஆண்டுகள் டர்பன் நகரில் வாழ்ந்த அந்த மகாத்மாவின் வீடு எப்படி இருக்கிறது தெரியுமா? எந்த நபரும் செல்ல முடியாத ஒரு பகுதியாக, சமூக விரோத குற்றங்கள் நிகழும் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது என்று, தன் நெஞ்சக் குமுறல்களை நம் முன் வைக்கிறார் சென்னை பிரசிடன்சி கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் ஏழுமலை.
நான் சில மாதங்களுக்கு முன் டர்பன் நகரில் உள்ள டர்பன் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்காக சென்றிருந்தேன். அங்கு சில வாரங்கள் நான் தங்க வேண்டியிருந்தது. டர்பன் பல்கலைக்கழகத்தின் கூடுதல் சிறப்பு என்ன தெரியுமா? இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பேத்தி ஈலா காந்திகாந்திதான் (காந்தியின் இரண்டாவது மகன் மணிலாலின் மகள்) அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.
பார் போற்றும் அந்த உத்தம தலைவரின் வாரிசை நேரில் சந்தித்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. ஈலா காந்திக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர் அச்சு அசப்பில் காந்தியைப் போலவே. ஈலா காந்தி என்னை அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். விருந்து உபசரணைகளுக்கு நடுவே தன்னுடைய தாத்தா இந்தியாவில் வாழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி பேசி நெகிழ்ந்தார். அவர் குடும்ப புகைப்படத்தை என்னிடம் காட்டினார். அதோடு, கெட்டதைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே, தீயவற்றைக் கேட்காதே என்று சொல்லும் காந்தியி பயன்படுத்திய அந்த மந்திரச் சொல்லின் அடையாள குரங்கு பொம்மைகள் நமக்குத் தெரியும். ஆனால், காந்தி தன்னுடைய வீட்டில் தன் மேஜையில் வைத்திருந்த பொம்மையை இன்னும், ஈலா காந்தி தன் வீட்டு வரவேற்பறையில் வைத்திருந்தார்.
அப்போது காந்தி வாழ்ந்த வீட்டை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களிடம் கூறியபோது, வேண்டாம் அது ரொம்ப டேஞ்சரான இடம் என்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பலரிடம் விசாரித்தபோதும் அதே பதில்தான். என்னுடைய ஆர்வம் இன்னும் அதிகரித்தது. அவர் வாழ்ந்த இடத்தில் என்னதான் பிரச்னை? கடைசியாக அங்கு பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு கார் டிரைவர் என்னை அங்கு அழைத்துச் செல்வதாக கூறினார். ஆனால், அதுவும் நிபந்தனையின் பேரில்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் வீட்டின் வெளிப்புறத்தை படம் எடுக்க முயற்சிக்காதீர்கள் உயிருக்கே வினை வந்துவிடும் என்று எச்சரித்தார் அந்த கார் டிரைவர். அதோடு, மிகவும் சமூக விரோத செயல்கள் நடக்கும் அந்த இடத்தில் பத்து நிமிடத்திற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக உயிரோடு திரும்ப வர முடியாது என்றும் மறுபடியும் எச்சரித்தார் அவர்.
ட ர்பன் நகரில் இருந்து கிட்டத்தட்ட இருபது கிலோ மீட்டர் துõரத்தில் இருந்தது. காந்தி செட்டில்மென்ட் என்ற அந்தப் பகுதி. காந்தி வாழ்ந்த வீடு மற்றும் அந்தப் பகுதியை அவ்வூர்வாசிகள் அப்படித்தான் சொல்கிறார்கள். வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் அந்தப் பகுதிக்கு ஆண்கள் எவரேனும் நுழைந்தால், கையில், பையில் வைத்திருக்கும் பணத்தை பிடுங்கிக்கொண்டு அடித்து அனுப்பிவிடுவார்கள். இல்லை கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்களாம். அந்நிய பெண்கள் அங்கு நுழைந்தால் கற்பு சூறையாடப்படும். அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான பகுதியாம் அது. கார் அந்தப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. காந்தி இருந்த வீட்டைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், மனம் என்னவோ திக்திக் என்றே இருந்தது.
வீட்டிலிருந்து கிட்டத்தட்ட நூறு அடி தொலைவில் காரை நிறுத்தினார் டிரைவர். காந்தியின் வீடு சாதாரணமாய் இருந்தது. அவர் வீட்டைச் சுற்றிலும், குடிகாரர்களும், போதைப் பொருள் விற்பவர்களும் என்று அவர் வீட்டைச் சுற்றியுள்ள பகுதி சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பால் நிறைந்து கிடந்தது.
கேமராவை இப்போ வெளியே எடுத்தா பிரச்னை என்று நினைத்து, மெது மெதுவாய் நகர்ந்து ஒருவழியாய் அவர் வீட்டை அடைந்தேன். காந்தியின் நினைவிடமாக இருக்கும் அந்த வீடு, எந்த ஒரு பாதுகாப்பு வசதியுமின்றி யார் வேண்டுமானாலும், உள்ளே சென்று வரலாம் என்பது போல்தான் இருந்தது. காந்தி வாழ்ந்த அந்த வீட்டின் வெளிப்புறம் முகம் சுழித்த அளவிற்கு வீட்டின் உள்புறம் இல்லை. வீட்டை யாரோ தினமும் சுத்தம் செய்வார்கள் போலிருக்கிறது. வீட்டின் உள்புறம் கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. என் கேமராவால் காந்தி இருந்த வீட்டை படம் பிடித்துவிட்டு, அங்கிருந்து பிழைத்தால் போதும் என்று ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டேன்.
நம் நாட்டின் தேசப்பிதா வாழ்ந்த இடம் அன்றைய பொழுது இந்தியர்கள் பலர் வாழ்ந்த இடமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்று சாதாரண மனிதர்கள் கூட நுழைவதற்கே அச்சம் நிறைந்த பகுதியாக அந்தப் பகுதிய மாறியிருப்பதை நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இவ்வளவிற்கும் டர்பன் நகரில் இந்திய தூதரகம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் ஏன் இன்னும் இந்தப் பகுதியை செப்பனிட்டு, அவரின் நினைவிடத்தை பாதுகாப்பாக்க முயற்சிக்கவில்லை என்ற கேள்வி மட்டும் என்னுள் எழுந்துகொண்டே இருந்தது.
தேசப்பிதா மகாத்மா காந்தி பெற்றுத் தந்த சுதந்திர காற்றை 65வது ஆண்டாக சுவாசிக்கப்போகும் நமக்கு, அவர் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் அந்த வீட்டை செப்பனிடுவது நமது இந்திய அரசின் கடமை அல்லவா?


Monday 12 July 2010

தண்ணீரில் எரியும் விளக்கு.!


யோக மார்க்கத்தில் உள்ள சில பயிற்சிகளை சிரத்தையோடு தொடரச்சியாக செய்யும் போது ஒவ்வொரு சாதகனுக்கும் சித்துக்கள் என்ற இயற்கையை கட்டுபடுத்தும் ஆற்றல் இயல்பாக கிடைக்கிறது. அப்பாடி சித்துக்களை பெற்ற எவரும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அனாவசியமான வேளையில் அதை பயன்படுத்துவது கிடையாது காரணம் இறைவனை அடைவது ஒன்றே யோக மார்க்கத்தின் குறிக்கோள் என்பதனால் சித்துக்கள் மாயா சக்தி என்றும் சாதனையாளர்களை தவறான பாதையில் வழிநடத்தும் என்றும் கருதப்பட்டு அவைகள் ஒதுக்கபடுகின்றன நிறைநிலை அடைந்த ஞானிகள் சித்துக்களை மலம் என்றே அழைக்கிறார்கள் எனவே நாம் தவம் செய்து பெறுகின்ற சித்துக்களை இங்கு பேச வேண்டாம் சாதாரண மனிதர்கள் சுயலாபத்திற்க்காக பயன்படுத்தும் சித்துக்களின் ரகசியத்தை சிறிது ஆராய்வோம்

உலகில் எந்த நாட்டு மூலிகைக்கும் இல்லாத சிறப்புகளும் சக்திகளும் தமிழ்நாட்டு மூலிகைகளுக்கு நிறையவே உண்டு இந்த மூலிகைகளின் ரகசியங்களை நமது முன்னோர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார்கள். மூலிகைகளில் உள்ள ரகசிய சக்திகளை எப்படி பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. தாங்கள் கற்ற பாடுபட்டு பெற்ற ரகசியங்களை பல ஏடுகளில் ஆவணங்களாக எழுதிவைக்கவும் செய்திருக்கிறார்கள். அவற்றை படிக்கும் போது நமக்கு வியப்பு மட்டுமல்ல இப்படியெல்லாம் கூட இருக்குமா என்ற மலைப்பும் ஏற்படுகிறது.

நீங்கள் தெருவோரங்களில் மோடிமஸ்தான்கள் செய்கின்ற வித்தைகளை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் அந்த வித்தைகளில் மிக முக்கியமாக சிறிய கிண்ணத்தில் விதைக்கப்படும் கம்பம்புல் சில நிமிட நேரத்திலேயே வளர்ந்து கதிர்சாய்வதை பார்க்க தவறியிருக்க மாட்டீர்கள் ஒரு விதை முளைத்து பயிர் தர வேண்டுமென்றால் குறைந்தது மூன்றுமாத காலமாவது ஆகவேண்டும். ஆனால் சில நிமிட நேரங்களில் மோடிமஸ்தான்கள் பயிர் வளர வைப்பது மந்திர சக்தியால் இருக்கலாமோ? என்று எண்ண தோன்றும். ஆனால் உண்மையில் இதற்கு மந்திரம் வேண்டாம் மூலிகைகளால் தந்திரம் செய்ய கற்றிருந்தால் போதும்

மிக சாதாரணமாக கிடைக்கும் நாட்டு கோழி முட்டையில் கம்பம்புல்லை மூன்று நாட்கள் ஊறவைத்து அதை வித்தை காட்டும் மைதானத்தில் மண்ணில் புதைத்து சில ஒழுங்கு முறைப்படி வெளிச்சம் படும்மாரும் இருட்டு சூளுமாரும் மூடி மூடி திறந்தால் பருவநிலை மாற்றம் போன்ற நிகழ்வு விதைக்கு ஏற்பட்டு அது சில நிமிடங்களில் வளர்ந்து கதிர் தள்ளிவிடுகிறது இதை சோதனைக்காக நீங்கள் கூட செய்து பார்க்கலாம் இதை போலவே பச்சை தவளையின் நெய்யை எடுத்து கைகளில் பூசி கொண்டால் கொதிக்கும் எண்ணெயில் கூட கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கையை முக்கி எடுக்கலாம்.

சில மந்திர வாதிகளும் சாமியார்களும் பஞ்சு திரி போட்டு எண்ணெய்க்கு பதிலாக பச்சை தண்ணீர் ஊற்றி விளக்கெரிப்பதை அறிந்த்ருப்பீர்கள் இந்த காலத்தில் கடைகளில் கிடைக்கும் எண்ணெய் கலப்படமாகி விட்டதனால் அவற்றை ஊற்றி கூட தீபம் ஏற்றுவது மகா சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் தண்ணீர் விட்டு தீபம் ஏற்றுவது கற்பனை கூட செய்துபார்க்க முடியாத காரியமாக தெரியலாம். சற்று பொறுமையும் கூர்மையான அறிவு இருந்தால் உங்களால் கூட தண்ணீரில் விளக்கேற்ற முடியும்.

அத்தி பழத்தை பிய்த்து பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று ஒரு பழமொழியை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கலாம் பூக்களே பூக்காமல் பழங்களை பழுக்கும் அதிசய மரம் அத்தியாகும். இந்த அத்திமர வேரில் அதிகாலை வேளையில் கத்தியால் கீறினால் ஒருவித நீர் சுரக்கும் இதை அத்திபால் என்று சொல்வார்கள். அத்திபாலில் பருத்தி திரியை ஊறவைத்து பிறகு வெயிலில் உலர்த்தி பத்திரபடுத்தி கொள்ளவும் பிறகு விளக்கில் தண்ணீரை ஊற்றி இந்த திரியை போட்டு தீபம் ஏற்றினால் மிக அருமையாக விளக்கு எரியும்.

களிமண்ணையும் செம்மண்ணையும் பிசைந்து சிவலிங்கம் செய்வதை பார்த்திருப்போம் ஆற்றுமணலில் சிவலிங்கம் செய்ய முடியும் என்று யாரவது சொன்னால் அவனை அறியாத பிள்ளை அல்லது அறிவு வளராத ஜென்மம் என்று கேலி பேசுவோம். நிஜமாகவே ஆற்றுமணலை மட்டுமல்ல கடல் மணலை கூட பிசைந்து சிவலிங்கம் செய்யலாம் அதற்கு தேவையானது தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற ஒரு வித மூலிகையே இப்படி எவ்வளவோ விஷயங்கள் மறைந்து போய் சிலபேருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கிறது இதை பலபேரும் அறிந்துகொள்ளும் படி செய்தால் பல சங்கடங்களை விலக்கலாம் அதற்கு தேவை உழைப்பும் ஆர்வமும் பொறுமையும் இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் கூட அதிசயங்களை நிகழ்த்தலாம்.

Saturday 10 July 2010

வரவு செலவை கற்றுக்கொண்டால் நாடும் உயரும்!




கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிருந்து சரியாக 13 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது அருமநல்லூர் என்ற கிராமம். ராகவன் பிள்ளை வீடு எது என்று கேட்டதுமே, மரியாதையோடு வழிகாட்டுகிறார்கள் கிராம மக்கள். அவரைப் போலவே கம்பீரமாக தோற்றமளித்தது அவருடைய வீடும். பாரம்பரியம் மாறாத அந்த வீட்டில் ஏதோ ஒன்றை டைரியில் எழுதிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். பெயர் ராகவன் பிள்ளை. வயது 74.
அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே இருந்த அலமாரியில் வரிசையாய் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது டைரிகள். எல்லாமுமே ஒரே வடிவில், அவர் கையிலும் அதே மாதிரியான டைரி. ஆனால், அது இந்த வருடத்திலானது.
எங்களைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் என்று சைகை காட்டிவிட்டு மறுபடியும் எழுத ஆரம்பித்தார். ஒரு பத்து நிமிஷம் கழிந்திருக்கும், டைரியை மூடிவிட்டு, பேச ஆரம்பித்தார் ராகவன் பிள்ளை.
இப்படி எழுத ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 54 வருஷம் ஆகுது. பெருசா ஒன்னும் எழுதல. வீட்டுப் பிரச்னைகள், வீட்டு வரவு செலவு கணக்கு, எங்க ஊருக்கு வந்த அரசியல் தலைவர்கள். முக்கியமான உலக நடப்புன்னு எழுதிக்கிட்டு இருக்கேன். ஒருநாள் எழுதலைன்னா அன்னிக்கு முழுசும் தூக்கமே வராது.
எப்போ எழுது ஆரம்பிச்சீங்க எப்படி எழுத ஆரம்பிச்சீங்க.
முறைப்படி டைரி எழுத ஆரம்பிச்சது 1954ம் வருஷத்துல. ஆனா, அதுக்கு முன்னாடியிருந்தே எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ ஒரு நோட்டுல வீட்டுல உள்ள வரவு செலவு கணக்குகளை எழுத ஆரம்பிச்சேன். ஒரு மாசம் முடிஞ்சி அடுத்த மாசம் பொறக்கும்போது, முதல் மாசம் எழுதி வெச்ச வரவு செலவு கணக்குகளை பார்ப்பேன். எதுல அதிகமா செலவழிக்கிறோம். எது தேவையான செலவு? எது தேவையில்லாத செலவுன்னு யோசிக்க ஆரம்பித்தேன். அதுக்கப்புறம் தேவையில்லாத செலவுகளை குறைக்க ஆரம்பிச்சேன். மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். நோட்டுல எழுதி வெச்சா காணாம போயிடும்னு அதுக்குப் பிறகு 1954ம் வருஷத்துல இருந்து டைரியில முறைப்பஐ எழுத ஆரம்பிச்சேன். முதல்ல வீட்டு வரவு செலவு கணக்கு மட்டும் எழுதுவதற்காகத்தான் டைரி எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் வீட்டு நடப்பு, பசங்க பொறந்தது, வளர்ந்தது இப்படி எல்லா விஷயங்களும் என் டைரியில அடக்கம். அதுவும் ஒரே மாதிரி ஒரே அளவுள்ள டைரியிலதான் எழுதிக்கிட்டு இருக்கேன்.
டைரி அளவுக்கு ஏதும் காரணம் உண்டா?
அப்படியெல்லாம் சொல்லிக்கிற மாதிரி காரணம் கிடையாது. அளவு ஒரேமாதிரி இருந்தா, அலமாரியில அடுக்கி வைக்கறதுக்கும். வருங்காலத்துல என் பேரப்பிள்ளைங்க எடுத்து படிக்கறதுக்கும் வசதியா இருக்கும் இல்லியா. தாத்தா எப்படி இருந்துருக்காருன்னு வியப்பாங்க இல்லியா? அதுக்காகத்தான். நான் நினைச்சது எல்லாம் இப்போ என் கண்முன்னாடியே நடக்கறத பார்க்கற நேரத்துல, நாம எழுதுனது வீண் போகலன்னுதான் நினைக்கத் தோணுது. முக்கியமான கல்யாண பத்திரிகை, வீட்ல வாங்கின பொருள்களுக்கான பில், ரசீதுன்னும் 50 வருஷமா சேர்த்து வச்சிருக்கேன். இது 50 வருஷத்துக்கு முன்னாடியிருந்த கலாசாரத்தையும், வரவு, செலவில் இருந்த ஏற்ற இறக்கத்தையும் நடப்புல தெரிஞ்சுக்கலாம் இல்லியா அதுக்காகத்தான் இதையும் பத்திரமா பராமரிச்சுக்கிட்டு வர்றேன்.
டைரி மட்டுமில்ல விவசாய அக்கவுண்டும் கிட்டத்தட்ட 43 வருஷமா பராமரிச்சிக்கிட்டு இருந்தேன்.
விவசாய அக்கவுண்ட் எப்போ ஆரம்பிச்சீங்க..?
விவசாய அக்கவுண்ட் 1957வது வருஷம் ஆரம்பிச்சேன். எங்க ஊர்ல பேங்க் கிடையாது. பக்கத்துல இருக்கிற திட்டுவிளைக்குத்தான் போகணும். பெருசா எதுவும் படிக்கல. எஸ்எல்சியோட படிப்பை முடிச்சிட்டு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். விவசாய வரவு செலவைப் பார்க்கறதுக்கும், லாப நஷ்டத்தைப் பார்க்கறதுக்கும் திட்டுவிளை ஐஓபி பேங்க்ல விவசாய அக்கவுண்ட் ஆரம்பிச்சேன். என்னோட அக்கவுண்ட் நம்பர் ஒண்ணு.
இந்த மகசூல்ல வர்ற பணத்துல, வீட்டுச் செலவுக்கான பணத்தை எடுத்துக்கிட்டு மிச்சப் பணத்தை விவசாய அக்கவுண்ட்ல போடுவேன். அந்தப் பணத்துலதான் அடுத்த வருஷத்துக்கு நடவு செலவு ஆரம்பித்து, உரம், விவசாயக்கூலி, அறுப்புச் செலவு வரைக்கும் எல்லாத்துக்கும் அந்தப் பணம்தான். நான் எல்லாச் செலவுக்கும் எடுத்துப் போக மீதிப் பணமும் சேமிப்புல இருந்துக்கிட்டே இருக்கும். நடவு செய்பவர்களுக்கு கூலி, உரம் வாங்கிய செலவு இப்படி எல்லா விஷயத்தையும் நான் டைரியில எழுதி வச்சிருக்கேன். அந்த காலத்துல விவசாயம் ரொம்ப லாபம் தந்துச்சீங்க... 1950வது வருஷத்துல ஒரு நாளைக்கு நடவுக்கு வர்றவங்களுக்கு கூலி வெறும் அஞ்சு ரூபாய்தான். ஆனா இப்போ 250 ரூபாய். அப்போ வயலுக்கு போடக்கூடிய உரத்தின் விலை 18 ரூபாய்தான். ஆனா, இப்போ 400 ரூபாய். நினைச்சுப் பார்க்க முடியாத விலையேற்றம்.
ஆனா, அப்போ வருமைக்கோட்டிற்கு கீழே இருந்தவங்க ரொம்ப பேர். ஆனா, அந்த நிலைமை இப்போ குறைஞ்சிருக்கு. அதேபோல விவசாய நிலங்களும் அழிஞ்சுப் போச்சு. நான் பார்த்து நல்ல விளைஞ்சுக்கிட்டு கிடந்த நிலங்கல்லாம் கட்டடமா நிக்குது. அப்போ வேலைக்கு தகுந்த கூலி இல்லை; இப்போ கூலிக்கு தகுந்த வேலை இல்லீங்க.
அப்போ அஞ்சு ரூபா கூலிக்கு நடவுக்கு வர்றவங்க சூரியன் அடையற வரைக்கும் வேலை பார்ப்பாங்க. ஆனா, இப்போ 400 ரூபாய் கூலி கொடுக்கிறோம். ஆனா, வேலை அந்த அளவிற்கு விசேஷம் இல்லை. எல்லாமே எதிர்மறையா இருக்கு. என் கண்ணுக்கு தெரிஞ்சு எங்கப் பகுதியில விவசாயம் அழிஞ்சிக்கிட்டு வருது. இதை உடனடியா சரிசெய்யலன்னா வருங்கால சந்ததிகளுக்கு விவசாயம்னா என்னன்னு தெரிஞ்சுக்குவாங்களான்னே சந்தேகமா இருக்குன்னு சொல்லும்போதே அவரில் கண்களில் வருத்தம் தெரிந்தது.
இப்பவும் அந்த விவசாய அக்கவுண்டை பராமரிக்கறீங்களா?
இல்ல சார் 2000 வருஷத்தோட அந்த அக்கவுண்டை குளோஸ் பண்ணிட்டேன். மனசு ரொம்பவும் வேதனையா இருந்துச்சு. விவசாயத்துல இப்போ தொடர்ந்து நஷ்டம். எவ்வளவு செவு செஞ்சாலும், விளைச்சலும் இல்லை. விளைச்சலுக்கான லாபமும் இல்லை. முந்தியெல்லாம் சேமிப்பைக் காட்டிக்கொண்டிருந்த சேமிப்புக் கணக்கு, கடன் தொகையையும், நாம் கட்ட வேண்டியத் தொகையையும்தான் காட்டிக்கொண்டிருந்தது.நஷ்டத்தையே காட்டிக்கிட்டு இருக்கற இந்த சேமிப்புக் கணக்கு எதுக்குன்னு, வேண்டாம்னு நிறுத்திட்டேன்.
இந்த விவசாய சேமிப்பு கணக்கால ஏதாவது பிரயோஜனம் இருந்துச்சா?
எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செஞ்சோம்னா கண்டிப்பா அதற்கு நல்ல பலன் உண்டு. என்னோட வரவு செலவு என்னோட வீட்டுச் செலவை மட்டுமில்லாம, நாட்டோட விலையேற்றத்தையும் தெரிஞ்சுக்க வச்சது. விவசாயம் சம்பந்தமான வணிக ரீதியான விஷயங்கள், லாப நஷ்டங்கள் குறித்த அறிக்கை செய்திகள் அளிப்பதற்காக பத்திரிகை நிருபர்கள் முதல் விவசாய அலுவலர்கள் வரை என்னை தொடர்பு கொண்டு விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், நான் எழுதி வந்த டைரியும், நான் பராமரித்து வந்த விவசாய சேமிப்புக் கணக்கும், என் வீட்டு வரவு செலவை தீர்மானம் செய்தது. அதோடு, என் பிள்ளைகளும் சேமிப்பை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இன்று அவர்கள் என்னைப்போல் வரவு செலவு கணக்குகளை எழுதி வருகிறார்கள் என்று பெருமிதப்படும் ராகவன் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள். ஒருவர் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினராகவும், இன்னொருவர் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் பேராசிரியராகவும், மகள் வெட்னரி மருத்துவராகவும் பணியாற்றுகிறார்கள்.
இந்த வரவு செலவு கணக்குத்தான் என் குடும்பத்தை இந்தளவிற்கு உயர்த்தி இருக்கிறது. வரவு செலவை புரிந்து வாழ கற்றுக்கொண்டால், வீடு மட்டுமல்ல நாடும் உயரும் என்பது ராகவன் பிள்ளையின் கருத்து.
இதுகுறித்து ராகவன் பிள்ளையின் மகன்களின் ஒருவரான திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பி.வி.சிவசுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு, அப்பாவின் இந்த கட்டுக்கோப்பான வாழ்க்கைதான் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். அவர் பராமரித்து வந்த விவசாய சேமிப்பு கணக்கு அவருக்கு சாதாரணமாக தெரிந்தாலும், அது மிகப்பெரிய விஷயம். அப்பாவைப் பார்த்துதான் நானும் டைரி எழுத ஆரம்பித்தேன். இருபது வருஷமா எழுதிக்கிட்டு இருக்கேன். இன்னொரு முக்கியமான விஷயம். அப்பா இத்தனைக் காலங்கள் பராமரித்து வந்த விவசாயக் கணக்கை ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்து இருவர் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார்கள் என்றார்.
வாழ்வு நடப்புக்களை டைரி எழுதும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், விவசாய சேமிப்புக் கணக்கு இத்தனை வருடம் பராமரித்தது, அதிசயக்கத்தகுந்த விஷயம்தான். ஆனால், விவசாய நாடான நம் நாட்டில் விவசாயம் அழிந்து வருவதும், விவசாயப் பொருள்களும், உரங்களும் விலையேற்றமும் அதற்கு எதிர்மறையாக விளைப்பொட்களுக்கான சரியான விலை விவசாயிகளுக்கப் போய் சேராததும் சாபக்கேடு என்று சாதாரணமாய் சொல்லிவிட முடியாது. அரசு உற்றுநோக்கிப் பார்க்க வேண்டிய வாழ்வாதாரப் பிரச்னை இது. பொறுத்துக்கொள்ள காலம் இல்லை. இன்னும் பொறுமை காத்தால், கண்முன்னால், இருக்கும் மிச்ச மீதி விளைநிலமும் காணாமல் போய்விடும். விவசாய நிலமும், விவசாயமும் அழிந்து போகிறதே என்பது ராகவன்பிள்ளையின் ஆதங்கமும் மட்டும் இல்லை; நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் மனக்குறையும் அதுதான்.
விடியல் பிறக்குமோ விவசாயத்தில்?

Friday 9 July 2010

1936ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட பீல்ட்ஸ் மெடல்தான் கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1982ம் ஆண்டு முதல் கணிப்பொறி அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு நவலீனா மெடல் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு காஸ் மெடல் அப்ளைட் மேதமெட்டிக்கலிற்காக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
அதேபோல இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலக அளவிலான கணிதவியல் மாநாட்டில் செர்ன் மெடல் விருது வழங்கப்படவிருக்கிறது. கணதத்தில் மிகத் திறமையான தனிமனித சாதனை செய்த சாதனையாளருக்கு வாழ்நாள் சாதனை விருதாக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது முதல் முறையாக ஹைதராபாத்தில் நடக்கும் உலக கணிதவியல் மாநாட்டில் வழங்கப்படுவதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்த விருது ஷிங் ஷென் செர்ன் என்ற சீன கணிதவியலாளர் நினைவாக வழங்கப்படவிருக்கிறது. இவர் மாடர்ன் ஜாமென்டரி, குளோபல் டிப்ரன்ஷியல் ஜியாமன்டரியில் தனி முத்திரை பதித்தவர் ஆவர். வாழ்நாள் சாதனையாளரான இவர் பெயரில் இந்த விருதை வழங்கப் பெருமைப்படுவதாக செர்ன் மெடல் பவுன்டேஷன் தெரிவித்துள்ளது.இந்த விருதின் மதிப்பு 5 லட்சம் அமெரிக்க டாலர்.
இப்படி உலகப் புகழ்பெற்ற கணிதவியல் மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுவது நமக்கு பெருமையான விஷயம்தான். ஆனால், அதே நேரத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இந்த விருதைப் பெற்றவர்கள் பட்டியலில் விருது பெற்ற கணிதவியலாளர்களில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவருக்குத்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது. ராமானுஜம் முதற்கொண்டு மிகப்பெரிய கணிதவியலாளர்கள் பிறந்த நம் நாட்டில் கணிதத்திற்கான சர்வதேச விருது தனிப்பட்ட இந்தியருக்கு இந்த விருது கிடைப்பது எப்போது?

சர்வதேச கணித மாநாடு

ஒவ்வொரு துறைக்கும் உலகளாவிய விருதுகளை சர்வதேச சமூகம் வழங்கி வருகிறது. கலைத்துறைக்கு ஆஸ்கார் விருதுகள், அறிவியல், கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு, எழுத்துக்கு புட்கர் பரிசு இப்பஐ சர்வதேச அங்கீகாரத்தின் பட்டியலில் கணிதத்தில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்க சர்வதேச அளவில் விருதுகளை வழங்கி வருகிறது.
இன்டர்நேஷனல் மேதமெட்டிக்கல் காங்கிரஸ் என்ற அமைப்பு நான்கு வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடைபெறும் கணித மாநாட்டில் உலகளவில் கணிதத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்த விருது கணிதப் பாடத்திற்கான நோபல் விருது என்று வர்ணிக்கப்படுகிறது.
இப்படி உலக அளவில் பிரபலமான இந்த சர்வதேச கணித மாநாடு முதல் முறையாக இந்தியாவில் ஹைதராபாத்தில் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. 113 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த கணித மாநாடு, முதல் முறையாக இந்தியாவில் நடக்கவிருப்பதால், சர்வதேச கணித சமூகத்தின் பார்வை தற்போது இந்தியாவின் மீது இருக்கிறது.
இப்படி கணிதப் பாடத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த விருது வந்த வரலாறே சுவராஸ்யமானதுதான்.
1890ம் ஆண்டு கணிதவியலாளர்களுக்கான மாநாடு ஒன்று சிகாகோ நகரில் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெர்மன் கணிதவியலாளர்கள் பெலிக்ஸ் கெலின் மற்றும் ஜார்ஜ் கேண்டர் என்பவர்கள், கணிதத்தில் சிறந்து விளங்கும் நபர்களை கௌரவிக்க விருதுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். அந்தக் கோரிக்கை 1893ம் ஆண்டு நடைபெற்ற கணிதவியலாளர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த விருதுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உலகளவிலான கணிதவியலாளர்களை ஒன்றினைத்து சர்வதேச கணித மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. உலகளவில் கணிதத்திற்காக நடைபெற்ற முதல் மாநாட்டில் 16 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 208 கணிவியலாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 12 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 7 பேர். மற்றவர்கள் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த மாநாட்டின் போது பல்வேறு கணித சமன்பாடுகளில் உள்ள சர்ச்சைகள், சந்தேகங்கள் தீர்க்கப்படும். அந்த மாநாடு ஒப்புதல் கொடுத்த எளிய கணித முறைப் பாடங்கள் இன்றும் நம் கணிதப் பாடத்தில் படித்து வருகிறோம்.
பின்னர் இரண்டாவது சர்வதேச கணித மாநாடு 1900ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றத. இந்த மாநாட்டின்போது டேவிட் ஹில்பர்ட் என்ற ஜெர்மன் நாட்டு கணிதவியலாளர் புகழ்பெற்ற தீர்க்கப்படாத 3 கணக்குகளுக்கு தீர்வு சொன்னார். அவர் சொன்ன தீர்வுகள்தான் நாம் இப்போது ஹில்பர்ட் சமன்பாடுகள் என்று படிக்கிறோம்.
கணிதத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் நபருக்கு இந்த மாநாடு பீல்ட்ஸ் மெடல் என்ற விருதை வழங்குகிறது.இப்பரிசுதான் கணிதத்தின் நோபல் என்று கருதப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட, இரண்டு, மூன்று அல்லது நான்கு கணிதவியலாளர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருது கனேடியக் கணிதவியலாளரான ஜோன் சாள்ஸ் பீல்ட்ஸ் என்பவரால் 1924ம் ஆண்டு முன்மொழியப்பட்டதாகும். கனடாவிலுள்ள டொராண்டோவில் 1924ல் பன்னாட்டு கணித மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தலைவராக இருந்தவர் பீல்ட்ஸ். மாநாட்டை நடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் செலவு போக மீதமிருந்ததை கணிதத்தில் உலகம் போற்றும் சாதனை செய்தவர்களுக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக இருக்கட்டும் என்று நன்கொடையாக கொடுத்தார். அவர் இறந்த பிறகு 1932ம் ஆண்டு ஜூரிக்கில் கூடிய மாநாட்டில் அந்த நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதல் இரண்டு மெடல்கள் 1936ம் ஆண்டு ஆஸ்லோ மாநாட்டில் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு <உலகப்போரினால், மாநாடு நடத்த முடியாமல் போனது. அதற்கடுத்த மாநாடு 1950ம் ஆண்டுதான் நடந்தது. அதற்குப் பிறகு இந்த கணித மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த விருதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலகக் கணிதவியலாளர்களெல்லாம் சேர்ந்து செயல்பட்டுக் கொடுக்கப்படும் பரிசு இது.
பீல்ட்ஸ் மெடல் என்ற பெயரில் இந்த விருது கொடுக்கப்பட்டாலும், மெடலில் பீல்ட்ஸ் என்ற பெயர் பொறிக்கப்படுவதில்லை.
உலகளவிலான மாநாடு 1897ம் ஆண்டு ஆரம்பித்தாலும், சிறந்த கணிதவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டார்களே தவிர, அவர்களுக்கு விருது மற்றும் மெடல் 1936ம் ஆண்டில் இருந்துதான் வழங்கப்பட்டு வந்தன.

Friday 2 April 2010

சண்டக்காரன்!




கணவனும், மகனும் வீட்டை விட்டு வேலைக்கு கிளம்பியதுமே மனதிற்குள் ஒருவித பய
உணர்வு தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது மீனாட்சிக்கு.
""ஏண்டி... ஈஸ்வரி ஜன்னல் எல்லாத்தையும் நல்ல மூடிடு. இன்னிக்கு அந்தப் பய
வீட்லதான் கெடக்கான். ஏதாவது பிரச்னை பண்ணுவான். அதுவும் ஆள் இல்லாத நேரம்
பார்த்துதான் கத்த ஆரம்பிப்பான், அந்த எழவெடுத்துப் போறவன்...'' என்று மறுபடியும்
கத்த ஆரம்பித்தாள் அம்மா. இந்தளவிற்கு அம்மா கோபப்படுவதற்கான காரணம்
முத்தையா.
எங்க வீட்டுக்கு அடுத்தவீடுதான் முத்தையாவின் வீடு. வேலைக்கு போவான். ஆனா,
எப்போ போவான்னுதான் யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் பக்கத்து வீடுகள்ல
ஆம்பளைங்களாம் வேலைக்கு போன பிறகுதான் தன்னுடைய கதா காலட்சேபத்தை
நடத்துவான்.
எதையாவது காரணத்தை வச்சிக்கிட்டு சண்ட போடுவான். தாறுமாறா கத்துவான். ஏன்
கத்துறான் எதுக்கு கத்தறான்னு அவனுக்கே தெரியுமோ தெரியலையோ தெரியாது.
அவனைப் பார்த்தாலே எல்லாருக்கும் ஒரு வித அலர்ஜி. ஒதுங்கித்தான் போவார்கள்.
நாங்களும் அப்படித்தான்.
எங்கத் தெருவுல முத்தையாதான் பட்டம் சூடாத ரவுடி, தாதா... இப்படி எல்லாம்.
தெருக்குழாயில தண்ணீ வந்துச்சுன்னா முதல்ல அவன் பொண்டாட்டிதான் எடுக்கணும்.
இல்லாட்டி அவ்வளவுதான்... ரணகளம் பண்ண ஆரம்பிச்சுடுவான் முத்தையா.
ரணகளம்னா... வேட்டியை கழற்றி போட்டுக்கிட்டு, டவுசரோடு இங்கிருந்து அங்கே
ஓடுவான். அங்கிருந்து இங்கே ஓடுவான். பாக்கறதுக்கே கர்ண கொடூரமா இருக்கும்.
பொம்பளைங்க எல்லாம் கண்ண மூடிக்குவாங்க. அதனாலையே முத்தையா வீட்ல
இருந்தான்னா, தெருவே அமைதியா இருக்கும்... பொம்பளைங்க வெளியவே
வரமாட்டாங்க.
அவன் அப்பப்ப கட்டை, கம்பு, கத்தி அருவாள்னு எல்லாத்தையும் வீராவேசமா
துõக்குவான். கொடுவா மீசை வச்சிக்கிட்டு பார்க்கறதுக்கு பயங்கரமா இருக்கறதுனால,
வீட்டு ஆம்பளைங்களும் எதுக்குடா வம்புன்னு அவனை எதிர்த்துகூட பேசறதுல்ல.
அண்ணனுக்கு அவனைப் பார்த்தாலே கோபமா வரும். "என்ன ஆனாலும் சரி; அவனை
அடிக்காம விடக்கூடாது'ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலைஞ்சான். ஆனா, அப்பா
வாத்தியார்ங்கறதால... வாத்தியார் பையனும் இப்படி அடாவடி பண்றானேன்னு
ஊருக்குள்ள சொல்லிடக்கூடாதுன்னு, அப்பா அடக்கி வச்சிட்டார். அதனால அவனும்
வாயை திறக்கல.
முத்தையா சுத்திமுத்தி எல்லா வீடுகள்லயும் சண்ட போட்டுட்டான். அவன் சண்ட
போடாதது எங்க வீட்ல மட்டும்தான்.
ஆனா, என்னிக்கு வேணாலும் சண்டைய இழுத்துருவான்னு அம்மா பயந்துக்கிட்டே
இருந்தாங்க.
""ஏண்டி சொல்லிக்கிட்டே இருக்கேன்... காதுலையே வாங்காம அப்படி என்னதான்
யோசிச்சிக்கிட்டு இருப்பியோ''ன்னு சொல்லிக்கிட்டே வந்து ஜன்னல் ரெண்டையும்
பளார்னு மூடும்போதுதான் நிஜம் நினைவுக்கு வந்தது.
அம்மா இன்னமும் புலம்பிக்கிட்டுத்தான் கிடந்தாள்.
""இன்னிக்கு மத்தியானம் என்னம்மா பண்ணிருக்க...''
""இத மட்டும் நல்லா கேளு... கூடமாட ஒத்தாசைக்கு ஒரு வேல பாக்காத...''
""என்னம்மா எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்க... மத்தியானம் என்னதும்மா
சொல்லு...''
""புளிக்குழம்பு வச்சி, துவையல் அரைச்சிருக்கேன்.''
""ஏம்மா... நானே ஹாஸ்டல்ல காரக்குழம்பு சாப்ட்டு சாப்ட்டு நாக்கே
செத்துப்போச்சேன்னு சொல்லிக்கிட்டு கிடக்கேன். அதப் போய் வச்சிருக்கியே... பேசாம
இதுக்கு செமஸ்டர் லீவுல ஊரு பக்கம் வராம அப்படியே ஹாஸ்டல்லேய
உட்கார்ந்திருக்கலாம்.''
""இப்ப என்னடி வேணும்...''
""ஒரு ஆம்லட் மட்டும் போடும்மா...''
""சரிடி... போட்டு தொலைக்கறேன்...'' அம்மா கடுகடுத்தப்படியே செல்ல,
வெளியிலிருந்து முத்தையாவின் குரல் ஓங்கி கேட்க ஆரம்பித்தது.
""வீட்ல மனுஷன் குடியிருக்கணுமா... வேண்டாமா... எப்படி நாறுது. ஏய் வெளிய
வா...'' என்று குரல்.
""ஏம்மா.. முத்தையா கெடந்து கத்தறான். யாரம்மா ஏசறான்...'' என்று கேட்க,
""ஸ்ஸ்ஸ்...'' அமைதியா இருக்குமாறு அம்மா எச்சரித்துவிட்டு, கதவோரமாய் காதை
வச்சிக்கிட்டு நின்றிருந்தாள்.
""ஏய்... நான் கெடந்து கத்திக்கிட்டு கிடக்கேன்... ஏதாவது வெளிய வருதா பாரு... குளிக்கற
தண்ணியா, இல்ல கழுவுற தண்ணியா தெரியல... யம்மா... என்னா நாத்தம்...'' என்று
மூக்கை பொத்தியபடியே பேச ஆரம்பித்தான்.
அவன் மூக்கைப் பொத்திக்கொண்டு பேசியது... எனக்கு குபுக்கென்று சிரிப்பை
வரவழைத்தது.
""பெரிய வாத்தியானாம்... இவன் வீட்டுக்குள்ள சாக்கட போச்சுன்னா இவன்
ஒத்துப்பானா...?''
""அம்மா... அவன் நம்மள பத்திதான் பேசறான்...'' எனக்கு சட்டென்று கோபம் வந்தது.
""பொறுடி... அப்பா வேற வீட்ல இல்ல... எதையாவது கத்தி தொலைச்சிக்கிட்டு
போறான். பேசாம வாய மூடிக்கிட்டு உட்காரு.'' அம்மாவும் இப்போது அணிச்சையாய்
கையை வைத்து வாயை பொத்திக்கொண்டு நின்றிருந்தாள்.
""நான் என்ன லுõசுப் பயலா... தனியா நின்னு கத்திக்கிட்டு நிக்கறதுக்கு... இப்ப வெளிய
வரல... அவ்வளவுதான், நான் என்ன பண்ணுவேன்னே எனக்குத் தெரியாது'' என்று
சொல்லி முடிக்கவும், வீட்டுக் கதவில் "டமார்'னு ஒரு சத்தம்.
""அம்மா... அவன்தான் கல்லைத் துõக்கி வீசறான். கதவத் திறம்மா... என்னன்னு
கேட்ருவோம்.''
""ஏய்... நீ உட்காரு. நான் வெளிய போய் கேட்டுட்டு வர்றேன்...'' என்று சொல்லும்போது
அம்மாவின் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்திருந்தது.
அம்மா கதவைத் திறந்துகொண்டு வெளியே நிற்க...
""ஏம்மா... இவ்வளவு கத்துறேன்... காது ரெண்டும் அவிஞ்சு போச்சா... இங்க பாரு...''
என்று அவன் கை நீட்டிய திசையை பார்த்தபோது எங்கள் வீட்டு சாக்கடை, லேசாக
உடைந்து சாக்கடைத் தண்ணீர் அவன் வீட்டு வாசலில் லேசாக தேங்கி நின்றது.
அம்மா அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.
அம்மா எதிர்த்துப் பேசாதது அவனுக்கு ஒருபுறம் வசதியாய்போனது. வாய்க்கு வந்தபடி
கத்த ஆரம்பித்தான். அவன் பேசிய பேச்சு காது கூசியது. என்னால் சுத்தமாய் கேட்க
முடியவில்லை. நான் மெதுவாக வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன்.
துõரத்தில் அண்ணன் வருவது தெரிந்தது.
அப்பாடா... ஒருவழியா அண்ணன் வந்துட்டான் என்று மனசு கொஞ்சம் நிம்மதியானது.
அம்மாவை அவன் சகட்டு மேனிக்கு காட்டுக் கூச்சலில் கத்த, பக்கத்து வீட்டுக்காரங்க
எல்லாம் அவங்கவங்க வீட்டு முன்னாடி நின்னுக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு
இருந்தாங்க. யாரும் விலக்கு புடிக்கல.
அண்ணன் பக்கத்துல வந்துட்டான்.
அம்மாவை... முத்தையா திட்டுறதப் பாத்த அண்ணன் பதறிப்போனான்.
""என்னம்மா ஆச்சு...?'' என்று அண்ணன் அம்மாவின் தோளைத் தொடவும், அம்மா
தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அண்ணனுக்கு விர்றுன்னு கோபம் வந்தது.
""ஏய்... உனக்கு என்னடா வேணும்?''னு சட்டுன்னு முத்தையா சட்டைய புடிச்சுட்டான்.
இத... முத்தையா மட்டுமல்ல நாங்களும் எதிர்பார்க்கல. அம்மா அப்படியே வாயடைத்துப்
போய் நின்றாள்.
""பொடிப்பய... நீ என் மேல கைய வச்சிட்டியா..'' என்று நாக்கை மடித்து முறைக்க,
சட்டென்று முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் அண்ணன். அவ்வளவுதான்... ""ஏய்...
அடிச்சிட்டில்ல.. இன்னிக்கு ஒரு கை பார்க்காம விடமாட்டேன்... ஏடி.. அருவாள
எடுத்துக்கிட்டு வா... இன்னிக்கு... இவன...'' என்று சொல்லிக்கொண்டு, சுத்தி சுத்தி
எதையோ தேடினான் முத்தையா.
""என்னடா தேடுத... நாயே... இன்னிக்கு நான் இருக்கணும். அல்லது நீ இருக்கணும்.
ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்...'' என்று அண்ணன் விருட்டென்று வீட்டிற்குள்
ஓடிவந்து, ஓட்டுப்பிறையில் செருகி வைத்திருந்த அரிவாளை எடுத்தான். அப்போது
அவன் கண்கள் ரத்தச் சிவப்பாய் இருந்தது. கை, கால்கள் எல்லாம் லேசாக பதற்றத்தில்
நடுங்கிக் கொண்டிருந்தது. உண்மைய சொல்லப்போனா, அண்ணன் கையில் இருந்த
அருவா... ஒரு வாழைப்பழத்தைக்கூட சரியா வெட்டாது. ஆனா, அண்ணன் அதைப்பத்தி
எல்லாம் கவலைப்படாம துõக்கிட்டு அய்யனார் சாமிகணக்கா நின்னுக்கிட்டு இருந்தான்.
""டேய்... வேண்டாம்டா ராசா... உள்ள வாடா...'' அம்மா கெஞ்சிப் பார்த்தாள்.
""அம்மா...'' என்று ஒரு சத்தம்தான் அண்ணன் போட்டான். இதுவரை அந்தமாதிரி
அண்ணன் கோபப்பட்டு இதுவரை நான் பார்த்ததே இல்லை. டக்கென்று
அமைதியாகிப்போனாள் அம்மா.
ஆனால், அரிவாளை எடுக்க உள்ளே போன முத்தையா, இன்னும் வெளியே
வந்தபாடில்லை.
""டேய் நாயே வெளியே வாடா... நான் தெருவுலதான் நிக்கறேன். தைரியமான
ஆம்பளையா இருந்தா வெளியே வாடா...'' என்று அண்ணன் குரல் கொடுத்தான்.
எதிர் முனையில் எந்த சத்தமும் இல்லை. ஒரே நிசப்தம்... மையான அமைதி என்பார்களே,
அதேபோல் இருந்தது.
அண்ணன் முக்கால்மணிநேரமா அரிவாளோடு நின்று பார்த்தான். ஆனால், முத்தையா
வெளியே வந்தமாதிரி இல்ல... இப்போ அவன் வீட்டு முன்கதவு சாத்தப்பட்டிருந்தது.
""டேய்... உள்ள வாடா... அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு...'' என்று
அம்மா கண்ணீர் வடிக்க, வேறு வழியில்லாமல் வீட்டிற்குள் வந்தான் அண்ணன்.
அண்ணனைப் பார்த்து எனக்கு இப்போ பிரம்மிப்பா இருந்தது. இவ்வளவு பெரிய ரவுடிய
ஒத்த ஆளா நின்னுக்கிட்டு அண்ணன் எப்படி சமாளிச்சான்னு மனசுக்குள்ள ஒரு பூரிப்பு.
சாயங்காலம் அப்பா வந்தார். அப்பாவிடம் நடந்ததையெல்லாம் ஒவ்வொன்றாய்
சொன்னாள் அம்மா. அண்ணனைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்தார் அப்பா.
இப்போதும் முத்தையாவின் வீட்டுக் கதவு மூடிதான் இருந்தது.
""இவன் நமக்கு ஒத்தைக்கோர் பிள்ளை... அவன் பாட்டுக்கு எடுத்தோம் கவுத்தோம்னு
அவன்ட்ட சண்டை போட்டுட்டான். நாளைக்கு இவன் ஒத்தசெத்தையா எங்கேயாவது
போய்ட்டு வரநேரத்துல அந்தப் பய வெட்டி போட்டுட்டான்னா, நமக்கு பிள்ள
கிடையாதுடி.''
""அப்படியெல்லாம் சொல்லாதீங்க...''
""உண்மைய சொல்லுதேன்... கசக்கத்தான் செய்யும். இவன பேசாம மதுரையில உங்க
அண்ணன் வீட்டுக்கு ரெண்டு மாசம் அனுப்பி வை. போய் இருந்துட்டு வரட்டும்.
அதுக்குள்ள... முத்தையாவப் பாத்து நான் சமாதானம் பேசிப் பாக்கறேன்'' என்று அப்பா
அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது, எனக்கு காதில் விழுந்தது. ஆனால், அண்ணன்
எதுவும் பேசாமலே துõங்கிப் போனான்.
மறுநாள் காலை...
அம்மா வழக்கம்போல் முற்றத்தை சானம் போட்டு தெளிக்க வெளியே சென்றாள். நானும்
துணைக்கு வெளியே போனேன். அங்கு நான் கண்ட காட்சி எனக்கு அடக்க முடியாத
சிரிப்பை வரவழைத்தது. எங்க வீட்டு சாக்கடையை ரொம்ப பொருப்பா மண்வெட்டியை
வைத்து வெட்டி ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான் முத்தையா.

Tuesday 30 March 2010

மடக்கலாம்... கையில் துõக்கிச் செல்லலாம்!




வீடுகளில் பாதி இடத்தை சைக்கிள், பைக்கே ஆக்ரமித்துக் கொள்ளும். ஊர் வழிக்கு போவது என்றால், இதை பாதுகாப்பது என்பதே தர்மசங்கடமானது. இதற்கு ஒரு புது ஐடியாவைத்தான் கண்டுபிடித்திருக்கிறார் ஜப்பான் ஆராய்ச்சியாளர் மகோடா ஆசாவா. இவர் கண்டுபிடித்த சைக்கிளை வழக்கமான நாம் ஓட்டும் சைக்கிளைப் போலவே ஓட்டலாம். வீட்டுக்கு வந்தாச்சா... டக்குன்னு சைக்கிள் பெடல் அருகில் உள்ள லிவரை அளுத்தினால், முன் வீல் அப்படியே மடங்கி பின் சக்கரத்தோடு இணைந்துகொள்ளும். பின்னர் அதை அப்படியே துõக்கி வீட்டு பரணில் ஏற்றிக்கொள்ளலாமாம். இந்த அட்டகாசமான சைக்கிளின் விலை ரூ.21,400. ஜப்பானில் மிகப் பிரபலம் அடைந்த இந்த சைக்கிள் கூடிய விரைவில் இந்தியாவிலும் தலைகாட்டவிருக்கிறது.

வந்துடுச்சு சூப்பர் குடை!




மழை, வெயில் போன்ற சீதோஷன நிலைக்கு நாம் குடை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், திடீரென்று பலத்த காற்று அடித்தால், குடை சட்டென்று வளைந்து மேல்நோக்கி துõக்கிக்கொள்ளும். அந்தநேரத்தில் சாலையில் நடந்து செல்லும் நமக்கு கொஞ்சம் அவமானமாக இருக்கும். இதுக்கு ஒரு விடிவுகாலம் வராதா என்று யோசித்து இருப்போம். படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த குடை மழை, வெயில், காற்று, பனி என்ற எதுக்கும் அசைந்து கொடுக்காதாம். இந்த குடையை நீங்கள் மாட்டிக்கொண்டு இரண்டு கைகளையும் வீசி வீசி நடக்கலாம். செல்போன் பேசலாம். ஏன்.. டீ கூட குடிக்கலாம். வழியில் செல்லும் மற்ற நபர்களை பதம் பார்க்காது. இந்தக் குடை காற்றில் மேல் நோக்கி துõக்காது. மழை பெய்தால் தோள்பட்டைக்கூட நனையாது. காற்றடித்தால் உங்கள் முடி கலையாது. இப்படி பல்வேறு நல்ல விஷயங்களை கொண்ட இந்த குடையை, கையில் பிடித்து செல்லவேண்டாம். மாறாக ஹெல்மட் டைப்பில் மாட்டிக்கொண்டு செல்ல வேண்டும்.

பற்பசை மிஷின்:



மாசக் கடைசி ஆனாலே பல நடுத்தர வீடுகளில் பற்பசை பிரச்னை வந்துடும். பற்பசை டியூப்பில் கடைசி சொட்டு பசை வரை, முடிந்தமட்டும் பலம் கொண்டு பிசுக்கி எடுப்போம். கடைசியில் மனமில்லாமல்தான் அந்த டியூப்பை கடாசி எறிவோம். அப்போதும்கூட இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா, ரெண்டு நாளைக்கு பல் தேய்க்கலாம் என்ற நினைப்பு வரும். உங்களின் இந்த எண்ண ஓட்டம்தான், ஒரு புதுவித ஐடியாவுக்கு வித்திட்டு இருக்கிறது, ஜப்பான் ஆராய்ச்சியாளர்களுக்கு. அவர்கள் கண்டுபிடித்த ஐடியாதான் படத்தில் நீங்கள் பார்ப்பது. உங்கள் வீட்டு பற்பசையை இந்த மிஷினின் க்ளிப்பில் மாட்டிவிட்டு ஓரத்தில் இருக்கும் ஸ்க்ரூ போன்ற அமைப்பை திருக்கினாலே போதும், உங்களுக்கு தேவையான பற்பசை உங்களுக்கு வந்துவிடும். அதோடு, டியூபில் இருக்கும் கடைசி சொட்டு பசை வரை இந்த மிஷின் விட்டு வைக்காதாம். எப்பூடி...?

Sunday 28 March 2010

என்ன செய்யப் போகிறோம்...?



கடந்த மார்ச் 15ம் தேதி... பாராளுமன்றத்தில் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல் செய்யப்படவிருந்து, பின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், மசோதா தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இதுவும் சிவில் அணுசக்தி ஒப்பந்தந்தைப்போல் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கையெழுத்தானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அது என்ன... அணுவிபத்து நஷ்டஈடு மசோதா...? அமெரிக்கா சார்பில் இந்தியாவில் அணுமின் நிலையம் ஆரம்பிப்பார்கள். ஆனால், அணுமின் நிலைய கட்டுமான குறைகளாலோ, அல்லது ஏதாவது விஷவாயு கசிவால் இந்தியாவில் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்கு எவ்விதமான நஷ்டஈடும் அமெரிக்கா தராது. இதற்கு சம்மதித்து இந்தியா கையெழுத்து இட வேண்டும். இதுதான் அணுவிபத்து நஷ்டஈடு மசோதா.
சில அமெரிக்க நிறுவனங்களின் நலனுக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனை காவு கொடுக்கும் மறைமுகதிட்டம்தான் இது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
2008ம் ஆண்டில் இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பலகட்ட பாராளுமன்றம் ஒத்திவைப்பு, போராட்டங்களுக்கு இடையே கையெழுத்தானது. மசோதா மட்டுமே கையெழுத்தானது. ஆனால், இது நடைமுறைக்கு வரவேண்டுமானால்,
அணுவிபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல் ஆக வேண்டும்.
பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அணு உலைகளை அமைத்திருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அந்த நாடுகள் இம்மாதிரியான ஒப்பந்தங்களை நிறைவேற்றச் சொல்லி எந்த ஒரு நிபந்தனையையும் இதுவரை விதிக்கவில்லை.
ஆனால், அமெரிக்கா மட்டும் நிபந்தனை விதிப்பது, இந்தியாவின் தார்மீக உரிமையில் கையை வைப்பதற்காகத்தான் என்பது நடுநிலையாளர்கள் கருத்து.
மிக அரும்பாடுபட்டு சிவில் அனுசக்தி ஒப்பந்தத்தை பல பேராட்டங்களுக்கு இடையே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நிறைவேற்றியுள்ளது. அதேபோல அனுசக்தி நஷ்டஈடு மசோதாவையும் நிறைவேற்ற அவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள். ஏனென்றால் இது அவர்களுக்கு தன்மானப் பிரச்னை. இதை நிறைவேற்றாவிட்டால்,
அமெரிக்கா முன் இவர்கள் அவமானப்பட்டு நிற்கவேண்டியதிருக்கும்.
இவர்கள் அவமானப்படாமல் இருப்பதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனில் கைவைப்பது எவ்வகையில் நியாயம்? போபால் விஷவாயுவால் இறந்தவர்களின் பட்டியலை மறந்துவிட்டதா நமது மத்திய அரசு?
இந்தப் பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால், கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளின் நிலை என்ன? என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
இலங்கைத் தமிழர் பிரச்னை முதல், காவிரி பிரச்னை வரை முதல்வர் அறிக்கை விடுவதும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதுவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், நம் நாட்டு மக்களுக்கு எதிரான இந்த மசோதா தாக்கல் விவகாரத்தில்
தம்முடைய பலத்த எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய கடமை, நம் முதல்வருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், நடக்கும் சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது, நாட்டுப் பற்றைவிட காங்கிரஸ் பற்றுதான் அதிகமாக இருக்கும்போல் தெரிகிறது. இல்லையென்றால் அவர்கள் சார்ந்த தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் குறைந்தபட்சம் இந்தச் செய்தியையாவது வெளியிட்டு இருக்கலாமே!.
ஒரு சில நாளிதழ்களில் மட்டுமே நாட்டுக்கு எதிரான இந்தப் பிரச்னைக்குறிய செய்தியை வெளியிட்டது. நாட்டு மக்களின் அறியாமையை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நித்யானந்தா விவகாரத்தை துவம்சம் செய்த முன்னணி வார இதழ்கள் கூட இந்தச் செய்தியை வெளியிடாதது, ஏனோ...?

Friday 26 March 2010

குட்டிச்சுவர்!

வழக்கமா காலேஜ் முடிஞ்சு வந்தா, கலையரங்கு பக்கத்துல உள்ள குட்டிச் சுவத்துலதான்
நான், வழுக்கன், செல்வம், கோபால் நாலுபேரும் உட்கார்ந்துகிட்டு அரட்டை
அடிச்சிக்கிட்டு இருப்போம். அப்படித்தான் அன்னைக்கும் எதிர்பார்த்துப் போனேன்.
அந்தச் சுவர் காலியாய் கிடந்தது. எனக்கு ஆச்சர்யம் ஒருபுறம் இருந்தாலும், பசங்க
நம்மகிட்ட சொல்லாம போக மாட்டாங்கேளன்னு ஒரே குழப்பம். கொஞ்ச நேரம் அந்த
குட்டிச் சுவத்து மேல ஏறி உட்கார்ந்திருந்தேன். அந்த வழியா தண்ணி எடுக்கப் போன
அம்பிகா அக்காவும், கோகிலா அக்காவும், ""என்னடே... விக்னேஷ் உன் சேக்காலிங்க ஒரு
பயலுகளையும் காணோம்.''
""தெரியலைக்கா... உங்க தம்பி எங்க போயிருக்கான்? ஏதாவது வீட்ல சொன்னானா?''
என்று கேட்டேன் கோபாலின் அக்கா அம்பிகாவிடம்.
""ஏய்... சும்மா புழுகாதடே... உன்ட்ட சொல்லாததையா என்ட்ட சொல்லிட்டு
போயிடப்போறான். எல்லாப் பயலுகளும் கூட்டுக் களவானிங்கதானடே... ஏதோ நல்ல
பிள்ளையாட்டம் கேக்குற...'' என்று சொல்லிவிட்டு ஊர்க்கதையை அளந்தபடியே
செல்ல, வேண்டா வெறுப்பாய் வீட்டுக்கு வந்தேன்.
""என்ன... மகராசன் விளக்கு வைக்கறதுக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்த மாதிரி தெரியுது.
கூட்டாளிங்க யாரும் இன்னிக்கு கிடைக்கலையோ'' என்று கேலி பேசினாள் அம்மா.
""அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா... செமஸ்டர் லீவு விட்டாச்சுல்ல. எல்லாப்
பயலுகளும் நாகர்கோயிலுக்கு சினிமாவுக்கு போயிருப்பானுக. நீதான் உள்ளூர்
தியேட்டருக்கே, அப்பாவதான் துணைக்கு கூட்டிட்டு போகணும்னு சொல்லுவ. அந்தால
தனியா நாகர்கோயில் வரைக்கும் சினிமாவுக்கு ஒத்தையில பசங்க கூட விட்டுட்டாலும்...
உலகம் அழிஞ்சுடாது'' என்று பதிலுக்குச் சொன்னேன்.
""ஏல... ராசா அந்த காவாலிப் பசங்களையெல்லாம், அவனுக அம்மாமாரு தலையில
தண்ணிய தெளிச்சு அனுப்பிட்டாங்க. நீ அப்படியால..., நீ எங்களுக்கு ஒத்தைக்கோரு
பிள்ள... எங்க ராசாடா நீ. அந்த காவாலிப்பயலுகக் கூட சேர்ந்து சுத்தறது கொஞ்சம் கூட
அப்பாவுக்குப் பிடிக்கல. இருந்தாலும், நீ சந்தோஷமா இருக்கீயேன்னுதான் நானும் விட்டு
வச்சிருக்கேன்'' என்றாள் அம்மா.
அம்மாவின் அர்ச்சனைகள் தொடர்ந்தாலும், எனக்கு இந்தப் பயலுக எங்க
போயிட்டாணுங்க... என்று கேள்விக் கணைகள் தலையைக் குடைந்தது.
மறுநாள்...

காலை விடிஞ்சதும்தான் தாமதம். வழுக்கன் வீட்டிற்கு ஓடினேன். அவன் பேரு பெருமாள்.
முன் நெற்றி ஏறியிருக்கும். அதனால்தான் அவனுக்கு வழுக்கன் என்ற பட்டபேரு. அவன்
அம்மா கூட அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்.
""அம்மா... வழுக்கன் இருக்கானா...?'' என்று முற்றம் தெளித்துக்கொண்டிருந்த அவன்
அம்மாவிடம் கேட்டேன்.
""இல்லையேப்பா... காலையிலேயே உன் சேக்காலிங்க எல்லாம் வந்து, பெருமாளை
கூட்டிக்கிட்டு போயிட்டாங்களே. நீ போகலையா..?''
""எங்கம்மா...?'' என்று புரியாமல் கேட்டேன்.
""உனக்கு விஷயமே தெரியாதா... நம்ம ஊருக்கு புதுசா குங்பூ சொல்லிக்கொடுக்கற
மாஸ்டர் ஒருத்தர் வந்திருக்காரு. அவருக்கிட்ட குங்பூ கத்துக்கிடறதுக்காகத்தான் இவனுக
எல்லாம் போயிருக்காணுங்க'' என்று சொன்னதும், எனக்கு கஷ்டமாய் போனது. இந்த
விஷயத்தை எதுக்காக என்னிடம் இருந்து மறைக்கணும் என்ற கோபம். வரட்டும்...
அவனுங்ககிட்ட கேட்காம விடக்கூடாது. வழுக்கன் வீட்டு வாசலிலேயே நின்று
கொண்டிருந்தேன்.
பத்து மணி இருக்கும், வழுக்கன், கோபால், செல்வம் எல்லாரும் ஆளுக்கொரு சைக்கிளில்
வந்தார்கள். என்னைப் பார்த்ததும், ""பாருல... வீட்டு வாசல்ல சுடலை மாதிரி நிக்கான்''
என்று வழுக்கன் சொல்ல, ""லேய்... ஏதோ ஒரு காட்டத்துலதாண்டே நிக்கறான்'' என்றான்
கோபால்.
""என்னடே விக்னேஷ்... எப்போ வந்த...?''
""ஏல பேசாத. நீங்க எல்லாம் ப்ரண்ட்ஸாடே... ஒரு வார்த்தை என்ட்ட சொல்லாம நீங்க
மட்டும் குங்பூ கத்துக்கப் போயிருக்கீங்க.''
""ஆமா... சொன்னா மட்டும் அந்தால புள்ள வந்துடுவான். இப்ப வரைக்கும், உங்கம்மா
முந்தானையை புடிச்சுக்கிட்டுத்தான் அலையற... சும்மா பேசாதடே'' என்று கோபால்
சொல்ல, மூன்று பேரும் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தான்.
நான் ஒத்தைக்கு ஒரு பையன் என்பதால், வீட்டில் விளையாடக்கூட அதிகம் வெளியே
என்னை விடமாட்டார்கள்.
""கோபால்... மாஸ்டர் எப்படிடே... நல்லா சொல்லித் தாறாரா?'' என்று கோபத்தை ஒதுக்கி
வைத்துவிட்டு ஆர்வத்துடன் கேட்டேன்.
""சும்மா சொல்லக்கூடாது விக்கி, சும்மா ஜாக்கி சான் மாதிரி இருக்கார்டே... ஒரே நேரத்துல
6 பேரை அடிக்கார். நாங்கல்லாம் மிரண்டுட்டோம். அவரு முடியப் பார்த்தேன்னா...
அவ்வளவு நீளம் இருக்குடே...'' என்று கோபால் புகழ்ந்து தள்ள, ""ஏல விக்கி...
இன்னொரு முக்கியமான விஷயம்... குங்பூ கத்துக்கிடருத்து நேரடியா சீனாவுக்கே
போயிட்டு வந்திருக்காருடே...''
""எதை வச்சு இவ்வளவு கரெக்ட்டா சொல்லுத...?'' என்று அப்பாவியாய் கேட்டேன்.
""ஜாக்கிசான் கூட நின்னு போட்டோ எடுத்திருக்காருன்னா... அது பொய்யாடே'' என்று
அகல கண்களை விரித்தான் வழுக்கன். அவர்கள் சொல்ல சொல்ல மனதுக்குள் பொறாமை
எழுந்தாலும் அடக்கிக்கொண்டு, ஆற்றாமை தாங்காமல் அவர்களிடம் இருந்து
விடைபெற்று வீட்டிற்கு வந்தேன்.
இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும்.
கோபால், வழுக்கன், செல்வம் மூன்று பேர்களின் நடை, உடை பாவனையே
மாறியிருந்தது. நீளமாய் முடி வளர்ப்பதும், டைட்டாய் டீ சர்ட் போடுவதுமாய் எப்போது
பார்த்தாலும் குங்பூ மாஸ்டரைப் பற்றி புகழ்வதுதான் அவர்களின் வேலையே
என்பதுபோல் ஆகிவிட்டது.
இதற்கிடையில் குங்பூ மாஸ்டருக்குப் பிறந்தநாளாம். ஊர் முழுக்க இவனுங்களே செலவு
செய்து போஸ்டர் எல்லாம் ஒட்டியிருந்தார்கள். இதுபோக உள்ளூர் தியேட்டரில் ஆறு
பேரை ஒருத்தராய் நின்று அடித்து துவம்சம் செய்வது போல் சிலேடு வேறு. எனக்கு
எரிச்சலாய் வந்தது. இப்போதெல்லாம் கலையரங்கு குட்டிச்சுவர் காலியாய் கிடந்தது.
அவர்களுடனான அரட்டை முற்றிலும் குறைந்துபோய் இருந்தது. இது என் அம்மாவுக்கு
மகிழ்ச்சிதான் என்றாலும், எனக்கு கஷ்டமாய் இருந்தது.
மூன்றாவது மாதம் ஆரம்பம். ஒரு நாள் மாலை... பால் வாங்குவதற்காக கலையரங்கம்
பக்கம் போயிருந்தேன். எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மூஞ்சை
தொங்கப்போட்டுக்கொண்டு, மூன்று பேரும் குட்டிச்சுவரில் அமர்ந்திருந்தனர். எனக்கு
தாங்க முடியாத மகிழ்ச்சி.
""என்னடே... இன்னிக்கு மூணுபேரும் குங்பூ கிளாஸ்க்கு போகலையா...?'' என்று
சிரித்துக்கொண்டே கேட்டேன்.
""ஏல... இவன் தெரிஞ்சிக்கிட்டே நம்மள கிண்டல் பண்ணுதான்'' என்றான் கோபால்.
எனக்கு ஒன்றும் புரியலை. ""என்னடே சொல்லுதீங்க... என்னடே விஷயம்...'' என்று
சீரியஸானேன்.
""ஏல... உனக்கு உண்மையிலேயே விஷயம் தெரியாதா...?''
""என்னடே விஷயம்... சத்தியமாய் தெரியாது சொல்லுங்கடே'' என்றேன்.
""எங்க மாஸ்டரை ஆஸ்பத்திரியிலே வச்சிருக்காங்க...'' என்று தலையை குனிந்தபடியே
சொன்னான் பெருமாள்.
""என்னடே சொல்றீங்க...?'' எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
""நேத்தைக்கு சாயங்காலம்... கிளாஸ் முடிஞ்சி நாங்கல்லாம் வந்துட்டோம். அப்போ அந்த
வழியா நம்ம காலேஜ் பொண்ணுங்க ரெண்டுபேர் போயிருக்காங்க... எங்க மாஸ்டர்,
அந்தப் பொண்ணுங்களை ஏதோ கிண்டல் பண்ணாராம். உடனே அந்தப் பொண்ணுங்க...
வீட்லபோய் விஷயத்தைச் சொல்ல, அந்தப் பொண்ணுங்களோட தம்பி, ரெண்டு மூணு
பேர் வந்து மாஸ்டரை நையப் புடைச்சிட்டாங்களாம். இப்போ மாஸ்டர் காயத்தோட
ஆஸ்பிட்டல்ல கிடக்கார்'' என்று மூஞ்சை தொங்கப் போட்டுக்கொண்டே பதில்
சொன்னார்கள் நண்பர்கள் மூவரும்.
""ஆறுபேரை ஒத்தையில நின்னு சமாளிக்கக்கூடியவர ரெண்டு பேரு எப்படி வந்து
அடிச்சிட்டுப் போனாங்கன்னு புரியவே இல்லை...'' என்று வழுக்கன் சோகமாய்
சொல்லிக்கொண்டே முகவாயைத் தடவ எனக்கு குபுக்குன்னு சிரிப்பு வந்தது.

Thursday 25 March 2010

1. ஆரஞ்சு 2. ஆப்பிள் 3. வாழைப்பழம். 3. இளநீர் 5. அன்னாசி 6. பப்பாளி 7. மாம்பழம் 8. கறுப்பு திராட்சை 9. சீதாப்பழம் 10. பேரிக்காய்.
உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பழம், இந்தப் பட்டியலில் இருக்கிறதா? அப்படீன்னா, உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. படிச்சுப் பாருங்க... குணத்தை தெரிஞ்சிக்கோங்க.

பழத்தைச் சொல்லுங்க; குணத்தைச் தெரிஞ்சிக்கோங்க...

2. ஆப்பிள்:




ஆப்பிள் பழத்தை அதிகமாக விரும்பும் நீங்கள், ஊதாரித்தனம், முன்யோசனை இல்லாத உளறுவாயனாக இருப்பீர்கள். அடிக்கடி சம்பந்தமில்லாமல் முறுக்கிக்கொள்வீர்கள். ஆனால், ஒரு குழுவின் தலைவரை தயார் செய்வதில் நீங்கள் கில்லாடி. எல்லா விஷயத்தையும் நேர்மறையாக எண்ணுவீர்கள். பெரும்பாலான நேரங்களில் தடாலடியான முடிவுகளை எடுப்பீர்கள். அளவுக்கு மிஞ்சிய பயண விரும்பியாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் இருக்கும்போது மிகவும் பந்தாவாக தன்னைக் காட்டிக்கொள்வீர்கள். வாழ்க்கையில் பல விஷயங்களில் ஆர்வம் காட்டினாலும், பல உங்களுக்கு பொருந்தாமலே இருக்கிறது.

1. ஆரஞ்சு:




ஒரே வார்த்தை; ஒரே சொல் என்று பேசும் தன்மையுள்ள நீங்கள், தன்னம்பிக்கையுள்ள மனிதர். மெதுவாகச் செய்தாலும், மற்றவர்களைவிட தெளிவாகவும், குறைபாடு இல்லாமலும், நேர்த்தியாகவும் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும் தன்மை கொண்டவர்கள். அமைதியான குணம் கொண்ட நீங்கள், மிகவும் நம்பத்தகுந்த ஆட்களை மட்டுமே நட்பாக்கி கொள்வீர்கள். உங்களிடம் கலை ஞானமும், நகைச்சுவைத் தன்மையும் நிறையவே இருக்கும். உங்கள் எண்ணத்தையும், உங்கள் நலனையும் அக்கறை கொண்டவரைத்தான் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வீர்கள். எல்லா விஷயங்களிலும் முரண்பட்டு நிற்பதை மட்டும் தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருப்பீர்கள்.

3. வாழைப்பழம்:




வாழைப்பழத்தை தேர்வு செய்துள்ள நீங்கள், மென்மையான, பாசமுள்ள, வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் மனிதர். பல நேரங்களில் தன்னம்பிக்கையற்று, கோழைத்தனமாகவே இருப்பீர்கள். எதையும் சட்டென்று நம்பிவிடுவீர்கள். உங்களுடைய இந்த சுபாவத்தை மற்ற மனிதர்கள் அடிக்கடி தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வார்கள். நீங்கள்தான் இப்படி என்றால், நீங்கள் தேர்வு செய்த வாழ்க்கைத் துணையும் உங்களைப்போலவே இருப்பார்.

4. இளநீர்:




மனதில் சரியென்று பட்டதை டக்கென்று செய்யும் நீங்கள், பெரிய சிந்தனைவாதி. பிடிவாதமுள்ள நபர்தான். இருந்தாலும் எல்லா விஷயங்களிலும் அப்படி இருக்க மாட்டீர்கள். எப்போதும் விவேகமும் முன்னெச்செரிக்கையுடனேயே ஒவ்வொரு விஷத்தையும் அணுகுவீர்கள். நல்ல அறிவும், வாழ்க்கையை ரசிக்கும் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வீர்கள்.

5. அன்னாசிப்பழம்:




அன்னாசிப்பழத்தை விரும்பும் நீங்கள், மற்றவர்கள் ஒரு விஷத்தை தீர்மானிக்கும் முன்னரே, அதை நீங்கள் செயல்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர்கள். எதிர்காலத்தில் ஒரு நல்ல பயன்தக்க ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்றால், இப்போது இருக்கும் நிலையை உடனடியாக தைரியமாக மாற்றிக்கொள்வீர்கள். ஒருவரை நண்பராக சேர்த்துக்கொள்ள அவ்வளவு யோசிக்கும் நீங்கள், ஒருவரை நண்பராக ஏற்றுக்கொண்டீர்களானால், வாழ்நாள் முழுவதும் அந்த நட்பைத் தொடர்ந்துகொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை எப்போதும் உங்கள் திறமையை மெச்சிக்கொண்டே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்.

6. பப்பாளி:


.




வாழ்க்கையில் எதைப் பார்த்தும் என்ன நடந்தாலும், பயப்படாதவர்கள் நீங்கள். உங்களுக்கு அதீத நகைச்சுவை உணர்வு உண்டு. இந்த நகைச்சுவை உணர்வு நிறைய எதிர்பாலினரை உங்களை கவரச் செய்யும். எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பதில் நீங்கள்தான் வல்லவர். புதிய மக்களையும், புதிய இடங்களையும் பார்ப்பது என்றாலே உங்களுக்கு அலாதியான சுகம்தான். மொத்தத்தில் சொல்லப்போனால், நீங்கள் ஒரு படுபயங்கரமான வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த ஜாலி பேர்வழி!

7. மாம்பழம்:






மாம்பழ ராசிக்காரர்களே... சிரிப்புன்னாலும், அழுகைன்னாலும் எதிலுமே நீங்கள் எக்ஸ்ட்ரீம்தான். ஆனால், இடம், பொருள் தக்கப்படி அதை அடக்கிக்கொள்வீர்கள். புதிர் போன்ற விளையாட்டுக்களில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் காட்டுவீர்கள். வாழ்க்கை துணையுடன் இருக்கும்போது நீங்கள் ஒரு பூனைக்குட்டிதான். அதாவது வாழ்க்கையில் எல்லோரையும் அனுசரித்து, ஒத்துப்போவீர்கள்.
9. சீதாப்பழம்:

நீங்கள் பணிவுள்ள, அடக்கமான மனிதர்தான். இருந்தாலும், சில நேரங்களில் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக நடந்துகொள்வீர்கள். நீங்கள் பெரிய சிந்தனைவாதிதான். இருந்தாலும், சில நேரங்களில் செய்யும் விஷயங்கள் முட்டாள்தனமாக அமைந்துவிடும். மற்றவர்கள் ஒருவரை குறை கண்டுபிடிக்கும் முன்பாக அவரை கணிப்பதில் வல்லவர்.

10. பேரிக்காய்:

நீங்கள் பெரும் குழப்பவாதி. பல எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு, அதில் வெற்றியடையவேண்டும் என்று நினைத்து ஆர்வமுடன் உழைப்பீர்கள். ஆனால், உங்களுடைய திடபுத்தியில்லாத காரணத்தால், நீங்கள் நினைத்த எண்ணம் தொடக்க நிலையிலேயே கிடக்கும். முயற்சிக்கு உடனடியாக வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். ஆனால், உடனடியாக உணர்ச்சிவசப்படுவீர்கள்

8. கறுப்புத் திராட்சை!




நீங்கள் மிகவும் நாகரிகமான மற்றவர்கள் ரசிக்கத்தக்க ஒரு மனிதர். ஆனால், உங்களுக்கும் திடீரென்று கோபத்தின் உச்சிக்கு செல்வீர்கள். அதேபோல் உடனடியாக சகஜ நிலைக்கும் வந்துவிடுவீர்கள். உங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. நீங்கள் உண்மையானவர்; கூடிவாழும் எண்ணம் கொண்டவர். ஆதலால், பிரபலமாக இருப்பீர்கள். அல்லது விரைவில் பிரபலமாவீர்கள். வாழ்க்கையை நல்ல ரசித்து, ருசித்து வாழவேண்டும் என்று நினைப்பீர்கள். அது நீங்கள் அணியும் உடை அலங்காரங்களில் இருந்து மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். மொத்தத்தில் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வாழத் தெரிந்தவர்கள் நீங்கள்.

Wednesday 17 March 2010

அச்சடிக்க அட்டகாசமான மிஷின்:



பத்து பக்கத்தை எடுத்துட்டு ஜெராக்ஸ் கடைக்குப்போனா, அரைமணி நேரம் கால் கடுக்க நிற்க வேண்டியதிருக்கு. பிரிண்ட் அவுட்டை கையில் வாங்கிப் பார்த்தால், கருப்பாக இருக்கும். பவுடர்னு சொல்றாங்க லிக்விட்னு சொல்றாங்க. ஒண்ணும் புரியலை... ஆனா, இதுக்கு மட்டும் விடிவு காலம் வந்துடாதான்னு புலம்பத் தோணும். ஆனா, உண்மையிலேயே விடிவுகாலம் வந்துடுச்சு பிரிட்டிஷ் பொரியாளர்கள் கண்டுபிடித்த இந்த எக்ஸ்பிரஸ்ஸோ புக் மெஷினானது, ஒரு நிமிஷத்தில் 105 பக்கங்களை பிரிண்ட் போட்டு தந்துவிடுமாம். சிடியை மட்டும் கொடுங்க; அட்டையில் இருந்தே பிரிண்டை ஆரம்பிச்சுடும் எங்க மிஷின். அப்புறம் ஒவ்வொரு பக்கமாய் எந்தவித குழப்பமும் இல்லாமல் வரக்கூடிய பிரிண்ட், சரியாக கோர்த்து, சேர்த்தே தந்துவிடுமாம் இந்த மிஷின். இந்த மிஷின் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல உலகம் முழுவதும் புத்தக உற்பத்தியாளர்களுக்கு மத்தியில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்திடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறார்கள் பொறியாளர்கள்.

சாப்பாடு தயாரிக்க புது மிஷின்!




குழம்புல உப்பு அதிகமா இருக்கு. பொரியல்ல எண்ணெய் ஜாஸ்தியா இருக்கு. இப்படியே போனா ஹெல்த் என்ன ஆகறது? இது எல்லார் வீட்டிலும் கேட்கக்கூடிய புலம்பல். உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் சரியா கணக்குப் பண்ணி போட்டாக்கூட எண்ணெய் கொஞ்சம் ஜாஸ்தியா ஆயுடுது. என்னதான் பண்றது புரியலை. ஸ்பீடா சமையல் பண்றதுக்கு குக்கர், மைக்ரோஓவன் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கார். ஆனா, அவரு நாக்குக்கும், உடம்புக்கும் ஏத்த மாதிரி சமைக்க மட்டும் முடியல... இது இல்லத்தரிசகளின் புலம்பல். இந்த ஒட்டுமொத்த குறைகளையும் தீர்க்கறதுக்காக புது சமையல் எந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் மார்சிலோ கோலோ, அமித் ஷோரான் என்ற இரண்டு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள். "கார்னுகோபியா 3டி புட் பிரிண்டர்' என்று பெரிடப்பட்டுள்ள இந்த உணவு தயாரிப்பு மெஷினில் நாம் என்ன சமைக்கப் போகிறோமோ அதை அதில் உள்ள பாத்திரத்தில் போட்டுவிட்டு அதில் சேர்க்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட சமாசாரங்களை டைப் செய்தாலே போதும். தேவையான நிறம், மணம், திடம், எண்ணெய் சமாசாரங்களை எல்லாம் சரி விகிதத்தில் அதுவே கலந்து, சாப்பாட்டை தயார் செய்து தந்துவிடுகிறது. இதனால், காரம், உப்பு, புளிப்பு, அதிக எண்ணெய் போன்ற பிரச்னைகள் வராது. உணவில் உள்ள சத்தும் பாதுகாக்கப்படுகிறதாம்.

ஒரு மரம் = 20 கார்!




பூமிப்பரப்பில் கார்பன்டைஆக்ஸைடின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதனால் துருவப் பகுதியில் பனிப்பாறை உருகுதல். பருவநிலை மாற்றம். குறைந்த மழை, அதிக வெப்பம். இப்படி மிரட்டிக்கொண்டிருக்கிறது குளோபல் வார்மிங். என்னச் செய்யப்போகிறோம் என்று உலக நாடுகளே பயந்துகொண்டிருக்க, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புதிதாக செயற்கை இழையிலான மரத்தை (படம்) உருவாக்கியுள்ளார்கள். இயற்கையான மரத்தில் உள்ள குணாதிசயம் நமக்குத் தெரியும். கார்பன்டை ஆக்ஸைடை உட்கிரகித்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியேற்றும். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மரமும் அப்படித்தான். ஆனால், அதிலும் ஒரு படி மேலப்போய் மரத்தைவிட 1000 மடங்கு விரைவாக கார்பன்டை ஆக்ஸைடை உட்கிரகித்துக் கொள்ளுமாம். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டன் கார்பன் டை ஆக்ஸைடை உட்கிரகிக்குமாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் 20 கார்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடை ஒரு செயற்கை மரம் உட்கிரகித்துக் கொள்ளும். இந்த மரங்களை நாடு முழுவதும் நட்டால், புவி வெப்பமயமாதல் பிரச்னை போயே போச் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனா பாருங்க... இந்த ஒரு மரத்தை தயாரிக்க மட்டும் 13 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவாகுதாம்.

Friday 12 March 2010

ராங் நம்பர்!





அன்றைக்கு வீக்கெண்ட். பேச்சுலரான நானும், பேமிலி மேனான ராஜேஷûம் திக்கஸ்ட் பிரண்ட்ஸ். ரெண்டு பேருமே ஒரு பத்திரிகையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம்.
எனக்கு சொந்த ஊர் மதுரைப் பக்கம் அருப்புக்கோட்டை. ராஜேஷûக்கும் மதுரைதான். அதுதான் எங்கள் நட்புக்கான அடித்தளம்னு கூட சொல்லலாம்.
ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு நாலு மணிக்கெல்லாம் நானும், ராஜேஷûம் ஆபீஸிலிருந்து வெளியே வந்தோம். “டேய் கண்ணா... அப்படியே மயிலாப்பூர் வரை ஒரு எட்டு போய்ட்டு வந்துருவோமா...”
“யாரு... மூர்த்திய பார்க்கறதுக்கா...”
“ஆமாண்டா...”
“அட போங்கண்ணே... உங்களுக்கு ஒரு வேலையே கிடையாது. அவன் எப்பவாவது நம்மளத் தேடி வர்றானா...? ஏண்ணே... நீ மட்டும் இப்படி இருக்க?”
“டேய்... மதுரையிலிருந்து பொழைக்க வந்திருக்கோம். நாலு பேரை தெரிஞ்சி வச்சிக்கிட்டாத்தாண்டா நம்ம பீல்டுக்கு கரெக்ட்டா இருக்கும். கோழி கெடையில கிடக்கறமாதிரி எப்பப் பார்த்தாலும், ரூமிலேயே அடக்காத்து கிடக்கக்கூடாது. இப்படி நாலு பிரண்ட்ஸ பார்த்தாதான் பழக்கம் கிடைக்கும்.”
“அடப் போங்கண்ணே... இப்படியேத்தான் சொல்லிக்கிட்டு திரியறீங்க... இன்னிக்கு வரைக்கும் ஒருத்தரையும் கண்ல காட்டமாட்டேக்கறீங்க... மூர்த்தி அவனத் தெரியும் இவனத் தெரியும்னு சொல்றானேத் தவிர ஒருத்தனையாவது இன்னிக்கு வரைக்கும் கண்ல காட்டிருப்பானா... அவன் மூஞ்சே எனக்குப் பிடிக்கலண்ணே... பிராடுக்காரனா தெரியறான்.” “சரிடா கண்ணா... இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் அவனைப் போய் பார்த்துட்டு வருவோம். கொஞ்சம் டைம் பாஸ் ஆகும் இல்ல...”
“டைம் பாஸாகிறதுக்கு பதினைஞ்சு ரூபா செலவழிக்கணும்மாண்ணே...” என்று தலையில் அடித்துக்கொண்டேன்.
அரைமணி நேரம் பஸ் பயணத்திற்கு பிறகு மயிலாப்பூர் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பத்து நிமிஷம் நடந்தால் மூர்த்தி ஆபீஸ். கழுகுக்கு மூக்குல வியர்க்கற மாதிரி எப்படித்தான் தெரியுமோ தெரியல... கரெக்ட்டா வாசலிலேயே நின்றுகொண்டிருந்தான் மூர்த்தி.
“யேய் வாப்பா ராஜேஷ்... வீக்கெண்ட் ஏதாவது ஸ்பெஷல் உண்டா?” என்று கண்ணடித்தான் மூர்த்தி. அவனைப் பார்க்க பார்க்க எனக்கு பத்திக்கொண்டு வந்தது. ஆனால், இதுவரை மூர்த்தி எனக்கு எந்தவித கெடுதலோ, துரோகமோ செய்துவிடவில்லை. இருந்தாலும், என்னவோ தெரியல. என்ன மாயமோ தெரியல... அவனப் பார்த்தாலே எனக்கு ஆகறதுல்ல.
“இல்ல மூர்த்தி சும்மாத்தான் வந்தோம். நீ வேற எங்கயும் வெளியே போறீயா...?”
“இல்லப்பா... வீட்டுக்குத்தான்...”
“டீ சாப்ட்றீங்களா...”
நான் வேண்டாம் என்று தலையாட்டுவதற்குள், ராஜேஷ் “வாங்குப்பா” என்று முந்திக்கொண்டான்.
எனக்கும் சேர்த்து மூர்த்தி மூன்று டீக்கு ஆர்டர் கொடுத்தான். மூர்த்தி எங்களுக்கு மெட்ராஸுல தெரிஞ்ச ஒரே நண்பன் நீதான். ஏதாவது பெரியாட்கள் பழக்கம் இருந்துச்சுன்னா... எங்களையும் கொஞ்சம் அறிமுக படுத்தி வெச்சேன்னா... பின்னாடி எங்களுக்கும் கொஞ்சம் வசதியா இருக்கும்...” என்று ராஜேஷ் லேசாக பிட்டைப் போட்டான்.
“உமா மகேஷ்வரன் தெரியுமா... பெரிய ரைட்டர். நம்ம பிரண்டுதான். ஏற்கனவே எங்க பத்திரிகையில சப் எடிட்டரா இருந்தவர்தான். போய் பார்த்துட்டு வர்றீங்களா...? நல்ல பேசுவாரப்பா... போயிட்டு வாங்க” என்று அவர் செல் நம்பரை எங்களுக்கு தந்ததோடு, அவருக்கும் எங்கள் முன்னாடியே போன் செய்து நாங்க வரப்போறதா சொன்னார்.
எனக்கு அப்போதான் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டுச்சு. உமா மகேஷ்வரன் பெரிய எழுத்தாளர். அவருடைய கதைகள் நிறைய படிச்சிருக்கேன். அவர் மூர்த்தியோட பிரண்டா... நம்பவே முடியலை. இருந்தாலும், அவன் அறிமுகப்படுத்தறேன் என்று சொன்னதும், என்னையும் அறியாமல் அவனிடம் நன்றியைச் சொன்னேன்.
“ஆமா மூர்த்தி அவரு வீடு எங்க இருக்கு...?”
“வடபழனி பக்கத்துலதான்” என்று முழு முகவரியையும் தந்தான். மூர்த்தியிடம் விடைபெற்றுக்கொண்டு, பஸ்சில் ஏறினோம். அப்பவே மணி ஆறை தொட்டிருந்தது. டிராப்பிக்கில் பஸ் மிதந்து கடைசியில் வடபழனியில் போய் சேருவதற்கு எட்டு ஆகிவிட்டது. பஸ்சில் இறங்கியதும் உமாவிற்கு போன் செய்தான் ராஜேஷ்.
“சார்... நாங்க இப்போ வடபழனி பஸ்ஸ்டாண்டில் நிக்கறோம்.”
“அப்படியே நடந்து வெக்காளியம்மன் கோயிலுக்கு வந்துட்டு, அப்படியே ஸ்ட்ரைட்டா வந்திங்கேண்ணா ஒரு முட்டு சந்து வரும். அங்க வந்துருங்க...” என்று எதிர்முனையில் பேசிய எழுத்தாளர் போனை துண்டித்தார்.
நாங்களும் ஒவ்வொருவரிடம் விசாரித்து, வெக்கு வெக்குன்னு நடந்து வெக்காளியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
ரெண்டு பேருக்கும் வியர்த்துக் கொட்டியிருந்தது. எனக்கோ உமாவை பார்ப்பதற்கான ஆர்வம் இன்னும் அதிகமாய் இருந்தது. அவர் எழுதிய நுõல்களை மெல்லமாய் ஞாபகப்படுத்திப்பார்த்தேன். இரண்டு மூன்று நாவல்களின் பெயர்கள்தான் அந்த நேரத்தில் ஞாபகத்திற்கு வந்தது. ஐயய்யோ இப்படி மறந்துபோச்சே... என்று அந்த நேரத்தில் நொந்துகொண்டதோடு என்னவெல்லாம் பேசவேண்டும் என்று ராஜேஷûக்கு தெரியாமல் குறிப்பெடுத்துக்கொண்டேன்.
ராஜேஷ் ஆர்வமாய் போனை எடுத்து ரீடயல் அழுத்தினார். முகத்தில் லேசான கலவரம்...
எனக்கு ஒன்றும் புரியலை. “என்னண்ணே ஆச்சு...” என்றேன் லேசான பதட்டத்துடன்.
“டேய் கண்ணா... போன் சுவிட்ச் ஆப்னு வருதுடா...”
“அண்ணே... ரெண்டு மூணு தடவை உடாம ட்ரை பண்ணுங்கண்ணே கிடைக்கும். நெட்வொர்க் கிடைக்கலன்னாலும் இப்படித்தான் இருக்கும்” நான் ஆறுதல் சொன்னேன்.
ராஜேஷ் விடாமல் ரீ டயல் செய்துப் பார்த்தார்... “இல்லடா கண்ணா... சுவிட்ச் ஆப்தான் பண்ணி வச்சிருக்கான்” என்று எழுத்தாளர் மீதான மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்தது.
அந்தப் பகுதியில் அவரைப் பற்றி விசாரிச்சுப் பார்த்தோம்... யாருக்கும் அவரைப் பற்றி தெரியலை.
அரைமணி நேரம் அந்த இடத்திலேயே வெயிட் பண்ணி பார்த்துவிட்டு, என்னுடைய செல்போனில் இருந்து தொடர்பு கொண்டேன். அதிசயம்... அவர்தான் போனை எடுத்தார்.
“சார்... நாங்க மூர்த்தியோட பிரண்ட்ஸ். நீங்க சொன்ன எடத்துலதான் நிற்கிறோம். எப்படி சார் வரணும்”னு சொல்லி முடிப்பதற்குள்ளேயே...
“யோவ் மண்டையில அறிவில்ல... நேரங்கெட்ட நேரத்துலயா வீட்டுக்கு வர்றது...”
“சார்... உங்ககிட்ட கேட்டுட்டுத்தானே...” என்று இழுத்தேன்.
“படிச்சவன்தானே... வீக்கெண்ட் டைம்ல அர்த்த ராத்திரியிலே வந்தா தொந்தரவு கொடுப்பாங்க...?” என்று டக்கென்று போனை கட் செய்தார்.
எனக்கு இப்போ முன்பை விட வியர்த்துக் கொட்டியது. மணியைப் பார்த்தேன் மணி சரியாக எட்டரை ஆகியிருந்தது. இதுவா இவனுக்கு அர்த்த ராத்திரி... கோபம் கண்களில் சிவப்பு நிறத்தில் தெரிந்ததை, ராஜேஷ் புரிந்து கொண்டார்.
“என்னடா கண்ணா...”
“வாண்ணே போலாம்... நல்லா ஆளாப் பார்த்து அனுப்பி வச்சான் மூர்த்தி.”
“ஏண்ணே... இவனல்லாம் ஒரு படைப்பாளியாண்ணே... வயசு ஆக ஆக பக்குவப்படணும். கட்டிப்போட்ட நாய் மாதிரி குரைக்கறான். நாய்ப்பய...” என்னால் ஆத்திரத்தை அடக்க முடியல.
“என்னடா ஆச்சு...” என்று மெதுவாய் கேட்டார் ராஜேஷ்.
“பின்ன எண்ணண்ணே... அவன்தான நம்மள வரச்சொன்னான். மயிலாப்பூர்ல இருந்து வடபழனிக்கு பஸ்சுல வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு அவனுக்கு தெரியாது. அப்பவே வரவேண்டாம். இன்னொரு நாள் பார்த்துக்கலாம்னு சொன்னா... நம்ம வந்துருப்பமாண்ணே... தீவட்டிப் பய... இவன விடக்கூடாதுண்ணே...”
“சரி... வுடுடா. வீக்கெண்ட்ல தண்ணிய போட்டு மப்புல கெடப்பான். இந்த நேரத்துல வர்றாங்களேன்னு எரிச்சல்ல பேசியிருக்கான் விடுடா...”
ராஜேஷ் அமைதிப்படுத்தினாலும் என்னால் அடக்க முடியலை. இவனை விடக்கூடாது. பெரிய எழுத்தாளன்னா... அவன் திமிரை அவனோட வச்சிக்கணும். என்ன பண்ணப்போறேன் பாரு... என்று மனதுக்குள் உக்கிரம் இன்னும் அதிகரித்தது.
“சரிடா வா போலாம்...”
“இல்லண்ணே... நீ போ... மனசு சரியில்ல நான் மெதுவா வர்றேன்.” என்று ராஜேஷை அனுப்பிவிட்டு வேகவேகமாக அருகில் இருந்த கட்டண கழிப்பிடத்திற்கு சென்றேன். உமா என்ற அவனின் பாதிப் பெயரை எழுதி ‘காண்டக்ட் மீ ’என்று அவனின் செல் நம்பரை எழுதிவிட்டு வந்தேன். அந்த கட்டண கழிப்பிடத்திற்கு நேர் எதிர்புறம் டாஸ்மாக் வேறு இருந்தது. கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அவனை ஏதோ பழிதீர்த்த சந்தோஷத்தில் ரூமிற்கு வந்தேன்.
மறுவாரம்... அதே வீக்கெண்ட். அதே மயிலாப்பூர். மூர்த்தி வழக்கம்போல ராஜேஷிற்காக காத்திருக்க, ராஜேஷ் எழுத்தாளர் செய்த லீலைகள் எல்லாவற்றையும் சொன்னார். மூர்த்தி முகத்திலும் லேசான கலவரம். அவரை திட்டுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள... ‘இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்ற தகவல் வந்தது. மூர்த்தியும், ராஜேஷûம் திருதிருவென்று முழிக்க. எனக்கு எல்லா அர்த்தமும் புரிந்து மனதிற்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

முதுகு வலி குறையணுமா...?



‘பேக் பெய்ன்’ என்ற வார்த்தை இப்போது எல்லாருமே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்னங்க செய்ய... நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்னாடி ஆடாம, அசையாம உட்கார்ந்திருந்தா முதுகு வலி வருமா? வராதாங்க...?
வலி தாங்க முடியலை. மருத்தவரிடம் போனேன். மருந்து கொடுத்தார். ஆனா, அந்த சமயம் நல்லா ரிலீப் கிடைக்கிறது. அப்புறம் மறுபடியும் நரக வேதனைதான்.
இந்த முதுகு வலி பிரச்னையை முழுசுமா குறைக்க முடியாவிட்டாலும், ஓரளவிற்கு சரிசெய்யணுமா...? அப்ப... நீங்க கொஞ்சம் வாயை கட்டியாகணும்!
உங்களுக்கு டீ, காபி, சோடா போன்ற ஐட்டங்கள் விரும்பி குடிப்பீங்களா... அப்படீன்னா உடனடியா நிப்பாடிடுங்க. கேழ்வரகை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடவே கூடாது. இவ்வளவையும் நீங்க தவிர்த்தால், உங்களுக்கு முதுகு வலியிலிருந்து விடுதலை என்று பலபேரிடம் செய்த சோதனையின் மூலம் கண்டுபிடிச்சிருக்காங்க ஆராய்ச்சியாளர்கள்.

பழம் சாப்பிட்டா கல் வராது!



எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம்தாங்க. கிட்னி கல்லடைப்பு என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. ஆனால், கல்லடைப்பு வராம தடுக்கணும்னா, தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுங்கன்னு சொல்றாங்க ஆராய்ச்சியாளர்கள். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் கிட்னியில் கல் வருவதை தடுக்கிறதாம்.
ஒருவாழைப்பழத்தில் 400 மி.கிராம் பொட்டாசியம், 14.8 கிராம் சர்க்கரை, புரோட்டீன் ஒரு கிராம், வைட்டமின் சி மற்றும் பி6, நார்சத்து 4 கிராமும் இருக்கிறது. ஒரு வாழைப்பழம் சாப்பிட்டா நம்ம உடம்புக்கு 110 கலோரி சக்தி கிடைக்கிறது.
கிட்னியில் ஏற்படும் கல்லைத் தவிர நரம்பு தளர்ச்சி, இதயம், எலும்பு, ரத்த சுழற்சி என்று எல்லாவற்றிற்கும் வாழைப்பழம் ஒரு அருமருந்தாம்.

நோய் தீர்க்கும் தண்ணீர்!



காலைல முழிச்சவுடனே தண்ணீர் குடிச்சா ரொம்ப நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, எப்படி எப்போ குடிக்கணும்னு நிறைய பேருக்கு குழப்பம்.
தண்ணீரை மட்டும் சரியா தினமும் குடிச்சிட்டு வந்தோம்னா... 30 நாளைக்குள் ரத்த அழுத்தம், 10 நாளில் வாயுத் தொல்லை, 30 நாளில் சர்க்கரை நோய், 180 நாளில் கேன்ஸர், 90 நாளில் காச நோய் என்று எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.
படி 1: காலையில் எழுந்தவுடன் பல் துளக்குவதற்கு முன் 160 மில்லி பிடிக்கும் 4 கிளாஸ் தண்ணீர் குடிக்கணும்.
படி 2: பல் துளக்கிய உடனே சாப்பிடவோ 45 நிமிடத்துக்குள் தண்ணீரோ அருந்தக் கூடாது.
படி 3: 45 நிமிடம் கழித்து காலை உணவை முடித்துக் கொள்ளலாம்.
படி 4: காலை சிற்றுண்டியை முடித்த 15 நிமிடத்துக்குள் வேறு ஏதும் உணவு சாப்பிடக்கூடாது.

எடுத்த எடுப்பிலேயே 4 கிளாஸ் தண்ணீர் குடிக்க முடியாதவங்க... ஒரு கிளாஸ், அப்புறம் ரெண்டு கிளாஸ்னு குடிச்சுப் பழகுங்க.. அப்புறம் தானாவே பழகிடும். உடம்புலேயும் எந்த நோயும் வராது.

பொரிச்சதும் நல்லதுதான்!




உடலை மிகவும் ஆரோக்கியமாய் வைத்திருப்பவர்களுக்கு எண்ணெய் பலகாரங்களை பார்த்தாலே ஒரு வித அலர்ஜி தொற்றிக்கொள்ளும்தான். ஏனென்றால், அந்த எண்ணெயில் உள்ள கொழுப்புதான் உடல் பலஹீனமாதவதற்கு காரணம் என்பது நம்மில் பலரின் எண்ணமும் கூட.
கொழுப்பில் மட்டுமா உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பு இருக்கிறது, பால் பொருட்களில் ஆரம்பித்து இறைச்சி வரை எல்லாவற்றிலும் கொழுப்பு இருக்கத்தானே செய்கிறது. அப்படியென்றால், இதுவும் கூட உடம்பிற்கு தீங்கிழைக்கத்தானே செய்யும். ஆனால், சில எண்ணெய்களில் பொரிக்கப்படும் உணவானது இதய பாதிப்பு ஏற்படுவதைக்கூட தடுக்கிறதாம்.
தொடர்ந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் பொருள் சாப்பிடுவது கண்டிப்பாக உடலுக்கு தீங்குதான். ஆனால், எப்போதாவது எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது சொல்லப்போனால் நன்மைதான். ஏனென்றால், சில நல்ல ஆரோக்கியமான கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுப்பொருட்களில் இருந்து அதிகஅளவில் நார்ச்சத்து கிடைக்கிறதாம். அப்படியென்றால் இது உடலுக்கு நல்லதுதானே.
உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு... வகையறாக்கள் எண்ணெயில் 360லிருந்து 375 டிகிரி வரை வெப்பப்படுத்தி, பின் பொரித்தெடுக்கும்போது, குறைவாகவே எண்ணெயை பண்டங்கள் உறிஞ்சுகிறதாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறது ஆராய்ச்சி.
அதனால, பொரிச்ச உணவும் உடம்புக்கு நல்லதுதான்... ஆனா, நீங்க தேர்ந்தெடுக்கும் எண்ணெய் தரமான எண்ணெயாக இருக்கணும். அதுதான் முக்கியம்!

பயிற்சியோடு மனசும் வேணும்!



அந்தப் பொண்ணு பேரு மேகலை. கொஞ்ச நாளா அளவுக்கு அதிகமா வெயிட் போட்டுடுச்சு. கவலைப்பட்டுபோய் ஒரு டயட்டீசியனை போய் பார்த்திருக்கிறார். அவர் கொடுத்த அறிவுரைப்படி காலையில் எழுந்து நடைப்பயிற்சி. அப்புறம் கொஞ்சம் டீ, ரெண்டு பிஸ்கட். இரண்டு மணி நேரம் கழித்து காலை உணவாக ஒரு கிண்ணம் அளவுக்கு உப்புமா அல்லது பொங்கல். அப்புறம் சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சி. அப்புறம் கொஞ்சம் ப்ரூட் சாலட். பின் அரைமணி நேரம் கழித்து கொஞ்சம் ஊற வைத்த சுண்டல். அடுத்த இரண்டரை மணி நேரம் கழித்து, இதே மாதிரி ஒரு கிண்ணம் அளவிற்கு பழ வகைகள். இரவு உணவு ரெண்டு சப்பாத்தி, சூப், கொஞ்சம் சாலட்.
டயட்டீசியன் சொன்ன அத்தனையும் செய்து பார்த்தார் மேகலை. ஆனா, ரிசல்ட் என்னவோ பூஜ்ஜியம். ஏனென்றால், முன்பிருந்ததைவிட இப்போது இன்னும் கொஞ்சம் புஷ்டியானாள் மேகலை. இது ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்குத்தான் பதில் கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்.
மேகலை செய்த உடற்பயிற்சி எல்லாமே சரிதான். ஆனால், அவர் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும் செய்தாரா... அப்படி செய்திருந்தால் மேகலையின் உடல் கண்டிப்பாக மெலிந்திருக்கும். ஆனால், வேகம் இருந்த அளவுக்கு ஆர்வம் இல்லை அதன் விளைவுதான் மேகலா குண்டானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமாய் செய்தால்தானே அதற்குண்டான பலன் கிடைக்கும். இது உடற்பயிற்சிக்கும் பொருந்தும் என்பதுதான் ஆராய்ச்சியாளரின் பதில்.

சவ் மிட்டாய்!

அப்போ வயசு 13. நான் எட்டாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். போத்திதான் என்னுடைய நெருங்கிய நண்பன். போத்தியை பொருத்தவரை நான்தான் அவனுக்கு குரு, ஆசான் எல்லாம்.
ஏன்னா, நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவான். சில நேரங்களில் பொய்க்கதைக்கூட சொல்லியிருக்கேன். அதைக்கூட அப்படியே நம்பிடுவான். எங்க ஸ்கூல்ல, வாரத்துல ரெண்டு நாள் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வரலாம். நானும் போத்தியும் எப்போதும் போட்ட டிரஸ்சையேதான் மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு வருவோம். ஆனா, எங்க கிளாஸுல மாரியப்பன்னு ஒரு பையன். ‘செட்டியார் வீட்டு பையன்’னுதான் அவனைச் சொல்வாங்க. அவங்க அப்பா எங்க ஸ்கூல்ல சவ்மிட்டாய் கடை வைத்திருந்தார்.
எனக்கும் சரி; போத்திக்கும் சரி செட்டியார் மீது எப்போதும் ஒரு கண்ணு. அதுக்கும் ஒரு கதை உண்டு. எனக்கும், போத்திக்கும் பாக்கெட் மணியா வீட்ல நாலணாதான் தருவாங்க. ஆனா, இந்த மாரியப்பப் பய எப்போ பார்த்தாலும், டவுசருக்குள்ள கையப் போட்டுக்கிட்டு சில்லரை பைசாக்களை கிலுக்கிக்கிட்டே கிடப்பான்.
சவ் மிட்டாய் வித்தா நாமலும் இப்படி பை நிறைய காசு வச்சிக்கலாம்னு எனக்கும், போத்திக்கும் நினைப்பு. ஒரு கட்டத்துல செட்டியாரை மாதிரி நாமும் ஏன் நிறைய சம்பாதிக்கக்கூடாது என்ற ஆசை. யோசிச்சேன். போத்தியை கூப்பிட்டேன். ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு போற வழியில ஒரு சிதிலமடைஞ்ச ஒரு ரைஸ்மில் உண்டு. அதுதான் எங்க ரெண்டு பேருக்கும் மீட்டிங் ஹால். அங்க போய் உட்கார்ந்தோம்.
“ஏல... போத்தி, மாரிய பாத்தியால... கை நிறைய பைசா வச்சிருக்கான். இதெல்லாம் எப்படி வந்துச்சு... எல்லாம் சவ் மிட்டாய்ல போத்தி சவ்மிட்டாய்.”
“ஆமால முருகா... கரெக்ட்டா சொன்ன. பொறந்தா, மாரிய மாதிரி பொறந்திருக்கணும். எப்போ பார்த்தாலும் கையில பைசா விளையாடுதுல்லா...”
“நம்ம ரெண்டு பேருகிட்டேயும் மாரி மாதிரி காசு வரணும்னா... அதுக்கு ஒரு திட்டம் வச்சிருக்கேன்” என்றதும், “என்னல திட்டம்... சொல்லுடே!” என்று தோளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் போத்தி.
“நாமலும் சவ் மிட்டாய் செஞ்சி வித்தோம்னா... மாரி மாதிரி நம்ம சேப்புலயும் பைசா நிறைய இருக்கும்.”
“அப்படியாடே... உண்மையாவா சொல்லுத...?” என்று வழக்கம்போல வாயைப் பிழந்தான் போத்தி. “ஆனா... சவ் மிட்டாய் செய்றதப் பத்திதான் நமக்கு ஒண்ணும் தெரியாத...” என்று உதட்டைச் சுழித்தான் போத்தி.
“ஏல... அது என்ன பெரிய இதுவா? வீட்ல இருக்கற மண்டவெல்லத்தை தண்ணீரை ஊத்தி காய்ச்சுனா, அது பாகாய்டும். அதுல கொஞ்சம் மாவு போட்டு பிசைஞ்சு காய வச்சுட்டா அதுதான் சவ் மிட்டாய்” என்று நான் சொல்லிய பக்குவத்தை அப்படியே நம்பிட்டான் போத்தி.
“ஏல... ஆமா... நாம பாட்டுக்கு, படிக்காம சவ் மிட்டாய் செய்யுறேன்னு வீட்ல போய் சொன்னோம்னா, எங்க ஐயா என்னை அடிச்சே கொன்னுடுவார்...” என்று அப்பாவியாய் பார்த்தான் போத்தி.
“வீட்ல ஆள் இருக்கற நேரத்துலயா பண்ணப் போறோம். கள்ளிகுளத்துல லட்சுமியக்கா கல்யாணம் அடுத்த வாரம் வருது. அதுக்கு உன் வீட்ல, என் வீட்ல எல்லாரும் போயிடுவாங்க. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. அன்னிக்கு வச்சுக்குவோம்ல நம்ம கச்சேரியை. ஏல போத்தி... எங்களவிட, நீங்க பணக்காரங்க! அதனால நீ நிறைய சவ் மிட்டாய் செய்யலாம். நான்தான் இருக்கற மண்டவெல்லத்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணப்போறேன்னே தெரியலை!”
“ஏல... இதுக்குப் போயா கவலைப்படுவாங்க... நான் போடுற சவ் மிட்டாயை விற்று, வரக்கூடிய காசை நாம ரெண்டு பேரும் பங்கு போட்டுக்குவோம்!” என்று ஐடியாவைச் சொன்னான் போத்தி. அவன் சொன்ன டீலிங்கிற்கு நானும் ஒத்துக்கிட்டேன்.
லட்சுமியக்கா திருமண நாள் வந்தது.
என்னையும், போத்தியையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, என் வீட்டிலும், போத்தி வீட்டிலும் கல்யாண வீட்டிற்கு போய்விட்டார்கள்.
நாங்கள் ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போவது போல் போய்விட்டு, அந்த மீட்டிங் ஹால்ல கொஞ்ச நேரம் பொழுதை போக்கிவிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.
மனசுக்குள்ள, போத்திக்கு போட்டியா சவ் மிட்டாய் செய்யணும்னு எனக்கு ஆசை வந்துடுச்சு. இதை அவன்ட்ட நான் சொல்லலை.
ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தோம்.
“ஏல... முருகா என் வீட்டுக்கு வா; நாம ரெண்டு பேரும் சேர்ந்தே சவ் மிட்டாய் செய்யலாம்”.
“இல்ல போத்தி... நானும் சவ் மிட்டாய் செய்யலாம்னு முடிவு செஞ்சிட்டேன்”னு சொன்னதும் போத்தியின் முகம் மாறிப்போச்சு.
“என்னடே... போட்டிக் கடையா போடப்போற?”ன்னு டக்குன்னு கோவப்பட்டுட்டான்.
“இல்லல... போத்தி! நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா... நிறைய சவ் மிட்டாய் கிடைக்கும். நிறைய காசும் கிடைக்கும்...” என்று நான் சொன்னத, ஏதோ வேண்டா வெறுப்பாய் கேட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
நானும் என் வீட்டிற்குள் வந்து, ஒவ்வொரு டப்பாவாய் தேடி மண்டவெல்லத்தை எடுத்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு செம்பு தண்ணீரையும் ஊற்றி அடுப்பில் வைத்தேன். மண்டவெல்லம் இளக ஆரம்பித்தது. எனக்கு பயங்கர சந்தோஷம். பாட்டிலில் இருந்த தேங்காய் எண்ணெயை தரையில் ஊற்றி மெழுகினேன். அதில்தான் மண்டவெல்ல பாகையும், மாவையும் கலந்து ஊற்ற ஏற்பாடு.
மனதிற்குள் சந்தோஷம். ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. மண்டவெல்லப்பாகு, கொஞ்ச கொஞ்சமாய் இறுக ஆரம்பித்து, ஒருகட்டத்தில் சட்டியில் பிடித்து பழுப்பு நிறத்தில் புகை எழ ஆரம்பித்தது. எனக்கு நெஞ்செல்லாம் படபடக்க ஆரம்பித்தது.
அதற்குள் கல்யாண வீட்டிற்கு சென்றிருந்த என் அம்மா, வீட்டிற்குள் வந்துவிட்டாள். “ஏல... அடுப்புல என்னல பண்ற? வீடு முழுசும் புகையா கீடக்கு...!” என்று சட்டியைப் பார்த்தவள் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள்.
“ஏல... பள்ளிக்கூடத்துக்கு போன்னு சொன்னா... இங்க உக்காந்துகிட்டு வீட்டையா கொளுத்தப் பாக்கற...”னு சுள்ளி விறகால முட்டுக்குக் கீழ அம்மா அடி உறிச்சுட்டா. அதற்குள்... வெளியே திபுதிபுவென்று ஓடுகிற சத்தம். கதவை உடைக்கிற சத்தமும். அம்மாவும் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓட... நானும் வெளியே எட்டிப் பார்த்தேன். எல்லா கூட்டமும் போத்தி வீட்டு வாசலில் நின்று கொண்டு, கத்திக்கொண்டிருந்தனர். எனக்கும், என்னாச்சு என்று பயம் கலந்த ஆர்வம். கூட்டத்தோடு கூட்டமாய் ஓரமாய் நின்றேன்.
போத்தி வீட்டு ஓட்டுப்பிரை வழியாக பழுப்பு நிறத்தில் புகையாய் வந்துகொண்டிருந்தது. எல்லார் முகத்திலும் ஒரு கலவரம். வீட்டுக் கதவைத் தட்டிப்பார்க்கிறார்கள். தள்ளிப் பார்க்கிறார்கள் கதவு திறந்தபாடில்லை. “ஏல போத்தி... கதவைத் திறல...” என்று அவன் அப்பா கெஞ்சலோடு கத்திப் பார்த்தார். ஆனா, போத்தி கதவைத் திறக்கவேயில்லை.
அவன் அப்பா திடீரென்று என்ன யோசித்தாரோ... வீட்டு கொல்லைப்புறம் பக்கம் ஓடினார். கூட்டமும் அவர் பின்னால் ஓடியது. நானும் கூட்டத்தில் ஐக்கியமாயிருந்தேன்.
நல்ல வேளையாக வீட்டு பின் கதவு திறந்துதான் கிடந்தது. எல்லாரும் வீட்டிற்குள் நுழைந்தோம். வீடே புகைமண்டலமாய் இருந்தது. அந்த புகைக்குள் போத்தி கண்ணை கசக்கிக்கொண்டே இன்னும் தீ மூட்டிக்கொண்டிருந்தான். அவன் நிறைய சவ்மிட்டாய் செய்ய பிளான் போட்டிருப்பான் போல. அடுப்புல பெரிய அண்டா இருந்தது. எப்படித்தான் அந்த அண்டாவைத் துõக்கி அடுப்புல வச்சான்னு தெரியல. நான் பிரமிச்சுட்டுப் போயிட்டேன். எல்லாமே சவ் மிட்டாய் தந்த வெறியாத்தான் இருக்கும். நானே கற்பனை செய்துகொண்டேன்.
அவங்க அம்மா... தலையில் அடித்துக்கொண்டு, போத்தியின் அப்பா அடிக்காதவாறு அவனை அணைத்துக்கொண்டாள். “ஏட்டி ஒழுங்கு மரியாதையா அவன வுடு. இல்லாட்டி உன்னையும் கொன்னுபோட்ருவேன்” என்று போத்தி அப்பா விளக்குமாறை துõக்க, பயந்தபடி போத்தியை விட்டு விலகினாள் அவன் அம்மா.
அவ்வளவுதான்... ஒரு அஞ்சு நிமிஷம் மழை பெஞ்சமாதிரி அடி விழுந்தது. போத்தி ‘அய்யோ அப்பா’ என்று கத்தினான். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம்... “ஏ... பிள்ளைய விடு; இப்படிப் போட்டு அடிக்கற... அவன் ஏதோ விளையாட்டுப்போக்கா ஏதோ பண்ணியிருக்கான். அதுக்குப்போட்டு இப்படியா அடிப்பாங்க...” என்று ஊர் சனம் சொல்ல, “எல்லாரும் வாய மூடிக்கிட்டு வெளியப் போங்க...” என்று கத்திக்கொண்டே மறுபடியும் அடிக்க ஆரம்பித்தார். போத்தி அழுது கூப்பாடு போட்டவாறே என்னைப் பார்த்தான். நானும் அவனை சோகமாய் பார்த்தேன். நல்லவேளை சவ்மிட்டாய்க்கு நான்தான் திட்டம் போட்டுக்கொடுத்தேன்னு ஒரு வார்த்தைக் கூட அவன் சொல்லலை.
ஒரு வழியாய் அடித்து முடித்து ஓய்ந்து போனார், போத்தியின் அப்பா.
கருக்கல் நேரம்... நான் வெளியே தனியாய் நின்று பம்பரம் விட்டுக்கொண்டிருந்தேன். “ஏல... முருகா”ன்னு பக்கத்தில் வந்து நின்றான் போத்தி!
அவனைப் பார்க்க பாவமாத்தான் இருந்தது. “முருகா... பாத்தியா... எங்க ஐயா அடிச்ச அடியில முதுகு, கை கால் எல்லாம் வீங்கி போச்சு.” என்று கை, கால் எல்லாம் காட்டினான். உண்மையாகவே வீங்கிப்போய்தான் இருந்தது.
“ஏம்ல... நம்ம செஞ்சது அவ்வளவு தப்பா? சவ் மிட்டாய் செஞ்சி துட்டு சம்பாதிச்சி நாம தனியாவா வக்கப்போறோம். வீட்லதானே கொடுக்கப்போறோம். அது தெரியாம இவங்க ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னே தெரியலை. ஆனா, ஒன்னு முருகா... நாம செஞ்சது எல்லாம் கரெக்ட்தாமுல. ஆனா, என்ன தப்பு செஞ்சோம்னுதான் தெரியல... பாகு சட்டியில புடிக்க ஆரம்பிச்சுடுச்சு; இதை மட்டும் சரிசெஞ்சிட்டோம்னு வையேன். சவ் மிட்டாய் செஞ்சே நாம பணக்காரனா ஆயிடாலாம்ல...” என்று அம்பானி மாதிரி எனக்கு யோசனை சொல்ல ஆரம்பித்தான் போத்தி.