Wednesday 4 July 2012

அழியுமா உலகம்?

திடீரென ஒரு பரபரப்பு உலகின் பார்வையை இருள்மண்டிக்கிடந்த அமெரிக்கக்காடுகளுக்கு திருப்பியது. ஆனால் அந்தப்பார்வையில் ஆழ்ந்து தேடும் தேடலுக்கான அறிகுறியைவிட அஞ்சும் மரணபயமே தென்படுகிறது. ஆம்….அழியுமா உலகம்? இந்தக்கேள்வி தோன்றிய இடத்திலிருந்தே விடையை தேட ஆரம்பித்துள்ளனர்…..
ஸ்பெயின் சிப்பாய்களின் படையெடுப்பால் சின்னாபின்னமாகிப்போன மாயன்களின் மாயதேசத்திலிருந்து உலகிற்கு ஒரு புதியசெய்தி கிடைத்தது அந்த செய்தியை தாங்கி வந்த கல்வெட்டுத்தான் மாயர்களின் நாட்காட்டி. ஆனால் அந்த செய்தியை முற்றுமுழுதாக சரியான முறையில் மொழிபெயர்க்கும் அல்லது புரிந்து கொள்ளும் ஆற்றல் இன்றைய மனிதர்களிடம் மங்கித்தான் போய்விட்டது. ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டப்படி புரிந்துகொண்டார்கள். ஆனால் எல்லோருடைய கருத்துக்களும் ஒரு விடயத்தில் ஒத்துப்போகிறது. அதுதான் நாட்காட்டியின் ஆரம்பகாலமும் முடிவுக்காலமும். கி.மு 20ம் திகதி செப்டம்பர் மாதம் 3113 ஆம் ஆண்டை தொடக்க ஆண்டாக கொண்ட அந்த நாட்காட்டி21ம் திகதி டிசம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. அந்த நாட்காட்டி எம்மவர்களின் நாட்காட்டியிலிருந்து சற்று வேறுபட்டது. நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 கின் = 1 துன்
7200 கின் = 1 கதுன்
144 002 கின் = 1 பக்துன்
1 872 025 கின் = 13 பக்துன்
2 880 025 கின் = 1 பிக்துன்
57 600 025 கின் = 1 கலப்துன்

இப்படியாக விரிகிறது மாயர்களின் நாட்காட்டி. இது இயற்கை மாற்றங்களையும் காலநிலைகளையும் அடிப்படையாகக்கொண்டது. அது மட்டுமன்றி கடவுள்களுடன்பேசுவதாகவும் வேற்றுக்கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்வதாகவும் வரையப்பட்டுள்ள சித்திரங்களும் மாயர்களைப்பற்றி ஒரு புதிய எண்ணக்கருவை உருவாக்குகின்றன.
மாயன்களின் கணிப்புப்படி உலகம் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது உலகம் குறித்த காலத்திற்கு ஒரு முறை புதிப்பிக்ப்படும். உலக வரலாற்றில் நாகரிகம் தோன்றிவளர்ந்து சரித்திரம் படைத்த முக்கிய இடங்களான சிந்துசமவெளி, எகிப்து மக்களிடையேயும் இத்தகைய நம்பிக்கைகள் குடிகொண்டுள்ளன. சிந்துநதியோரம் தோன்றிய எமது நாகரிகத்தில் பிரளய காலம் என குறிப்பிடப்படுவதும் நைல்நதிக்கரையோலம் நடைபயின்ற எகிப்திய நாகரிகத்தில் Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் காலமென குறிப்பிடப்படுவதும் இவ்வாறானதொரு மாற்றமேற்படும் காலம்தான்.

மாயர்களின் வானியல் அறிவுக்கு அவர்களுடைய சூரியக்கடவுளுக்கான கோயிலிலுள்ள சூரியனின் தட்சணாயன, உத்தராயண கால மாற்ற நாளில் மட்டும் ஒளிபுகக்கூடிய மண்டபமே சாட்சி. அதுமட்டுமன்றி மந்திர மாயங்களிலும் கைதேர்ந்து விளங்கிய மாயர்களின் கணிப்பை இலகுவில் புறந்தள்ளமுடியாது. மாயர்களின் நாட்காட்டியுடன் ஒத்தூதும் வண்ணம் விஞ்ஞானிகளும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளனர். விண்கல் ஒன்று பூமியுடன் மோதலாம் என்றும் சூரியப்புயல் புவியை தாக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கட்டியம் கூறுகின்றனர். பூமியின் மின்காந்தப்புலங்களின் திசை மாற்றமடையலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அதேசமயம் உலகப்புகழ்பெற்ற தீர்க்கதரிசி நஸ்ரடோமஸ் இன் கணிப்புக்கள் 2012 ஐயும் தாண்டி நீள்வதால் 2012 டிசம்பர் 23 உலக அழிவுக்குரிய நாளல்ல எனக்கொள்ளலாம்.

உலகஅழிவைப்பற்றிய செய்திகள் வந்ததிலிருந்து ஒப்பிட்டு பார்க்கையில் மாயர்களின் நகரப்பகுதி சுற்றுலாப்பயணிகளால் நிறைந்துவிட்டது. நல்ல வருமானம் கொழிக்கும் துறையாக சுற்றுலாப்பயணத்துறை அரசுக்கு காசை அள்ளிக்கொட்டுவதாக தகவல். சரியான சமயம் பார்த்து வெளிவந்த 2012 உலக அழிவு தொடர்பான திரைப்படமும் சக்கைப்போடு போட்டு தயாரிப்பாளருக்கு பணமழை பொழிந்ததும் அறிந்ததே. அதெல்லாவற்றையும் தூக்கிவிழுங்கும் சம்பவங்கள் இலங்கையின் சில பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. சாதாரண மனித பலவீனத்தை பயன்படுத்தி மதம் மாற்றும் முயற்சிகள் இடம்பெறுவது வேடிக்கையானது. பல இடங்களில் சுவரொட்டிகளாகவும் சில இடங்களில் வீடுவீடாக பிரச்சாரமாகவும் இவ்வாறு முழங்கப்படுகிறது.

”உலக அழிவிலிருந்து உங்களைக்காக்க ********** ஆல் மட்டுமே முடியும், ஆகவே விரைவாக  ********** இனுடைய பாதத்தை பற்றிக்கொள்ளுங்கள்.”

இதே கூட்டம் 2000 ம் ஆண்டு (மிலேனியம்) ஆரம்பத்தின்போதும் இதே முறையை பயன்படுத்தி கூட்டம் சேர்த்தது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.
இப்படியாக ஒன்றுமே இல்லாத விடயத்தை சுயலாபங்களுக்காக ஊதிப்பெரிதாக்குவதாக வாதிடும் தரப்பின் கருத்துக்களையும் வெறுமனே ஒதுக்கிவிடமுடியாது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் உலகில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதே தவிர சூரியமண்டலத்திலிருந்து சுற்றும் பூமி காணாமல் போய்விடும் என்ற அளவிற்கு யோசிக்கத்தேவையில்லை.

மாயன் நாகரிகம்

1839ம் ஆண்டு…அதிகாலைப்பனிவேளை…அமெரிக்க மத்திய அடர்காட்டுக்குள் சூரிய ஒளி மெல்ல எட்டிப்பார்க்கிறது. அந்த மங்கலான செவ்வொளியில் இரு மனித உருவங்கள் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன. திடீரென தேடியது கிடைத்த சந்தோசம் ஆயிரம் மின்னல்களின் பிரகாசமாய் அந்த முகங்களில்…. அந்த பிரகாசமே அவற்றை அடையாளம் காட்டுகின்றன. ஆம் அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John Lloyd Stephens ம் அவரது உதவியாளரும்தான் அவர்கள். எதைத்தொலைத்தார்கள் அந்த அடர்வனத்தில்? எதைக்கண்டுபிடித்தார்கள் அங்கு?......
மாயன்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி மறைந்த ஒரு சமூகத்தின் வாழ்க்கைத்தடங்கள் காட்டுக்கொடிகளோடு கதை பேசியவாறே காலத்தின் சரித்திரப் பதிவுகளில் இருந்து காணாமல்போய்விட்டன. அந்த இனம் ஒன்றும் சமான்யப்பட்டதல்ல என்று தொடர்ந்த அகழ்வாராய்வுகள் கட்டியம் கூறின. பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிவியலிலும் கட்டுமானத்திலும் உச்சத்தில் இருந்த ஒரு சமுகம் உலகிலிருந்து அடியோடு மறைந்து விட்டது. அவர்கள் நிர்மாணித்துக்கொண்டிருந்த சில கட்டுமானங்கள் பாதியிலேயே பாழடைந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை.
அந்த இனம்தான் மாயன் இனம். மனித வரலாற்றில் நாகரிகம் தோன்றிவளர்ந்து விண்ணை முட்டிய வரலாற்றுக்காவியம் அவர்களது வாழ்க்கை முறை. ஆனால் அந்த வரலாற்றை காலத்தின் வேகம் காற்றில் கரைத்து விட்டது.

மாயன் இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அடியோடு அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அக்னிபகவானுக்கு இரையாக்கப்பட்டன.
மாயன்
இன்று எத்தனையோ அறிவியல் வளர்ச்சியை கண்டுவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் எங்களது கட்டுமானங்களை விட அவர்களது கட்டுமானங்கள் காலத்தைவென்று கம்பீரமாக இன்றும் உள்ளன. பெரிய அளவிலான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றத்தக்க கலைத்திறன்களாகும்.
தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர்.

எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறன. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர்.ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.

மாயன்
மாயன் நகர பகுதியில் காணப்படும் Stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் Heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.  மாயன்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.
Bonamak என்ற இடத்தில் அமைந்த  மாயன்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள்  மாயன்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் .

மாயன்
மாயன்கள் இவ்வுலக ஆரம்பத்தில் Itzam Na எனப்பட்ட கடவுளும் கடலும் ஆகாயமும் மட்டுமே இருந்ததாக நம்பினார்கள். Itzam Na மனிதர்களை களிமண்ணிலிருந்து தயாரிக்க முயன்றார் ஆனால் அது கைகூடாததால் மரத்திலிருந்து மனித படைத்தார்.ஆனால் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டதால் மனிதனுக்கு சிந்திக்கவோ கதைக்கவோ முடியாதிருந்தது. நீண்ட முயற்சியின் பின் Itzam Na நீரையும் சோளத்தையும் பயன்படுத்தி இன்றைய மனிதர்களை படைத்தார் என நம்பினார்கள். மாயர்கள் உலகை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என பிரித்திருந்தனர். மாயர்களின் வானியல் ஒரு மரமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. மரத்தின் மேற்பகுதி சொர்க்கமாகும். அது இறைவனின் வசிப்பிடமாகும். மரத்தின் வேர்ப்பகுதி பாதாள உலகமாகும். சூரியன் இரவில் பாதாள உலகிற்கு சென்று ஓய்வெடுக்கிறான். (மாயர்களின் மொழியில் Xibalba -பாதாள உலகம் , Cab -சொர்க்கம் , Caan - புவி, Yakche – அண்டத்தை குறிக்கும் மரம்.)
ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்தினார்கள். அவர்களது ஆலயங்களுள் சுவரில் தேவதைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.. Guatemala பகுதியில் சூரிய சந்திர்யளுக்கான கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Chichen ItzaTikal கோயில் , Inscription கோயில் என்பனவும் பிரசித்தமானவை.


 

மாயன்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது.
1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.

மாயர்கள் 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன்
ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை  மாயன்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள்  மாயன்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.

900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில்  மாயன்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம்  மாயன் நகரப் பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான்.
இதன் பின் ஆராய்ச்சியாளர்கள்,  மாயன்களின் வம்சாவழியினர் மெக்ஸிகோ, குவதிமாலா பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள்  மாயன்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மாயன்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். ஆனால் ஸ்பானியர்களின் படையெடுப்பும் மாயர்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மண்ணோடு மறைந்த  மாயன்களின் வாழ்க்கைமுறை இன்றும் புதிராகவே உள்ளது. அந்த புதிரின் விடை இன்னமும் ஆராய்ச்சியாளர்களால் தேடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆவிகள் அட்டகாசம்

1987 ம் ஆண்டு உப்புக்காற்று உரசிச்செல்லும் புங்குடுதீவில் அந்த வீட்டில் இனம்புரியாத அமானுஷ்யங்கள் நடமாடிக்கொண்டிருந்தன…. வீட்டிலிருந்தவர்களின் முகங்கள் இருண்டுபோயிருந்தன. அவர்களது உடல்கள் பயத்தால் உறைந்து போயின… என்ன காரணம்?… ஆவிகளின் அட்டகாசம் அவர்களது வீட்டில் ஆரம்பமாகியிருந்தது.
ஆவி
திடீர் திடீரென்று கல்மழை அவர்கள் வீட்டில் பொழியத்தொடங்கியது. வீட்டுக்கூரை மீதும் வீட்டின் உள்ளேயும் கற்கள் வந்து விழத்தொடங்கின. அந்த வீட்டுக்கு சொந்தக்காரி கதவைத்திறந்து வெளியேவந்து ”யாரது?” என்று குரல் கொடுத்துப்பார்த்தாள். கல்மழை அதிகரித்ததே தவிர யாரும் இருப்பதற்கான அடையாளத்தை காணவில்லை. தென்னைமரவட்டிலிருந்து எரிந்து கறுத்துப்போன கற்கள் வந்து விழுந்தன. பதிலுக்கு அவளும் ஒரு கல்லை எடுத்து தென்னை மரத்தை நோக்கி எறிந்து பார்த்தாள். சடசடவென கற்கள் அவளைநோக்கி எறியப்பட்டன. பயத்தால் ஓவென கத்தியபடி வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.வீட்டிற்கு முன்னாலிருந்த அவர்களது கடையில் வீட்டு உரிமையாளர் பொருட்களை நிறைபார்த்தவண்ணம் நின்றுகொண்டிருந்தார். கற்கள் அவரது தராசுத்தட்டிலும் வந்து விழுந்தன.
ஆறே மாதமான ஆண்குழந்தையும் இரண்டரை வயதுள்ள பெண்குழந்தையையும் வைத்துக்கொண்டு அவர்களால் எதையும் செய்யமுடியாமல் தத்தளித்தார்கள்.

தகவல் உறவினர்களுக்கிடையிலும் சுற்றத்தாருக்கிடையிலும் காட்டுத்தீயாய் பரவியது. ஊரெங்கும் ”எறிமாடனை ஏவிவிட்டுட்டாங்கள்” என்ற கதையாய் இருந்தது. அனைவரது சந்தேகக்கண்களும் பின் வீட்டில் குடியிருந்த கிழவனின்மேல்தான் படிந்தது. அந்தக்கிழவனுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் கடையில் கடன் வாங்கியது தொடர்பாக தீராத பிணக்கு இருந்ததென்னவோ உண்மைதான். அந்தக்கிழவனுக்கு மந்திர தந்திரங்களில் திறமை இருப்பதாகவும் அவனது உறவினர்கள் மட்டக்களப்பில் பிரசித்தமான மந்திரவாதிகள் என்றும் வதந்திகள் பரவின. ஆனால் நேரடியாக எதுவும் செய்யமுடியாத நிலை.
ஆவி
உள்ளூர் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தவண்ணம் வீட்டை சுற்றிவந்தார்கள். எலுமிச்சம்பழங்களை உருட்டிவிட்டார்கள். போதுமான அளவுக்கு பணத்தையும் கறந்துகொண்டார்களே தவிர பலன் எதுவும் இல்லை. மேலும் மேலும் கல்லெறி அதிகமானதேயொழிய குறையவில்லை. திடீரென்று முற்றத்தில்நின்ற கார் கண்ணாடியின்மீது பாதிச்செங்கல் அளவுள்ள கல்லொன்று வந்து விழுத்தது ஆனால் கார்க்கண்ணாடி உடையவேயில்லை. வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தையின் மார்பிலும் கற்கள் வந்து விழுந்தன ஆனால் குழந்தையின் தூக்கம் கலையவில்லை. தாய் குழந்தையை மடியில் வளர்த்தியவண்ணம் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்யத்தொடங்கினாள் மனதிற்கு ஒரு ஆறுதலைத்தந்த கந்தசஷ்டி கவசம் பிரச்சினைக்கு தீர்வைத்தரவில்லை. விடயம் முல்லைத்தீவிலிருந்த தாயின்சகோதரிக்கு தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்த ஒரு மாந்திரிகரின் உதவியை நாடிய சகோதரிக்கு நாடிநரம்பையெல்லாம் ஒடுக்கும் செய்திதான் கிடைத்தது. அவர் வெற்றிலையில் மையை தடவி குறி சொல்ல ஆரம்பித்தார்.

உனது பிறந்தகத்தில் மாட்டுத்தொழுவத்தில் ஒரு கபில நிறப்பசு கட்டப்பட்டுள்ளது.

ஓம் கறுப்பியின்ர கன்று

அடுப்பில் பானையில் பால் கொதித்துக்கொண்டிருக்கிறது….முற்றத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க தடித்த ஒரு ஆள் கிடுகு பின்னிக்கொண்டிருக்கிறார்…..சரியா

இருக்கலாம்..அவர்தான் என்ர அப்பா……. தங்கைச்சியின் வீட்டுப்பிரச்சினை…..

இருக்குது….அங்க உண்மையிலேயே ஆவிகளின் தொல்லை இருக்குது. கவனமாயிருக்கவேண்டும் பிள்ளைகளை கிணற்றுக்குள் தூக்கிப்போடும் அளவிற்கு அவற்றின் தொல்லை அதிகரிக்கும்.

ஆனால் தொலைதுரம் என்பதால் வீட்டிற்கு வந்து பிரச்சினையை தீர்த்துவைக்க அவர் மறுத்து விட்டார். கடைசி நம்பிக்கையும் மறைந்து போனது. உடனடியாக புங்குடுதீவுக்கு பயணமானாள் சகோதரி.



விநாசித்தம்பி
அவள் புங்குடுதீவை அடைந்தபோது நேரம் பின்னேரம் ஆறு மணி. தங்கையின் கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஆவேசம் வந்து ஆடத்தொடங்கினான். வீட்டில் அங்கங்கு நிலத்தை கிளறி படையல், கழிப்பு செய்த பொருட்களை எடுக்கத்தொடங்கினான். பிரச்சினை கையை மீறிப்போவதை உணர்ந்த அவர்கள் மறுநாள் அவர்கள் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனின் அருளாசி பெற்ற அருட்கவி விநாசித்தம்பிஐயாவை சந்திக்க பயணமானார்கள். விநாசித்தம்பி ஐயா கடையில் வேலைசெய்து கொண்டிருந்த இளைஞனை வீட்டைவிட்டு அனுப்பச்சொல்லி இருவிதமான திருநீறை மந்திரித்து கொடுத்து ஒன்றை குடும்பத்தவர்கள் அனைவரும் தரித்துக்கொள்ளுமாறும் மற்றையதை கரைத்து வீட்டைச்சுற்றி  தெளிக்குமாறும் கொடுத்தார். அவர் மந்திரித்துகொடுத்த திருநீறும் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க கொடுத்த எலுமிச்சம்பழங்களும் ஒரேநாளில் ஆவிகளின் கொட்டத்தை அடக்கின. அதன்பின்னர் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அந்தக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவருகிறது.

ஊடகங்களின் "முன்ஜென்ம' வியாபாரம் - இறைவி


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுவதென்பது இன்றைய நாளில் தவிர்க்கவே முடியாத ஒரு செயலாக ஆகிவிட்டது. அதுவும், பெண்கள் என்றால் அவர்கள் அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும், வேலைக்குச் செல்லாமல்
வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்களில் நேரத்தை வீணடிப்பதில் சிறிதுகூட கவலைப்படுவதோ, வெட்கப்படுவதோ இல்லை. பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களில் பலரும் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
எந்த அளவிற்கு இந்த நிலைமை சென்று கொண்டிருக்கிறது என்றால், ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களை பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின்போது வீட்டில் உள்ள கேபிள் இணைப்புகளை நீக்கவும், தொடர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் என்று சொல்லி கேட்டுக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டது.
சரி, தொடர்களின் பிடியில் மாட்டக்கூடாது என்ற உறுதியுடன் அரசியல் விவாதங்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள், நாட்டு நடப்புச் செய்திகள், அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்றால், அவற்றிலும் கூடுமானவரை மூடநம்பிக்கைகளைத் திணித்து, ஆசைகளை விதைத்து, அருவெறுப்புகளை வளர்க்கும் வண்ணம்தான் நிகழ்ச்சிகள் இருக்கின்றன. தொடர்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றால், குப்புறத்தள்ளிய குதிரை, குழியையும் பறித்தது போல, மடமைச் சேற்றில் தள்ளுவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன நிகழ்ச்சிகள். அந்த வரிசையில், முன்ஜென்மம் என்ற பெயருடன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் கூத்து மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது.
நடிகர் அஜய் ரத்தினத்தின் முன் உரையுடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சி பைபிள், குரான், கீதை போன்றவற்றைத் துணைக்கழைத்தது மட்டுமன்றி அறிவியல் ஏற்றுக்கொண்ட ஹிப்னாடிசம் மூலமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப் பெறுகிறது என்றவுடன் அதனைப் பார்க்கும் ஆர்வம் இயல்பாகவே உந்த ஆரம்பிக்கிறது.
சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட்டும், அவரது அக்கா வளர்மதியும் அக்கா மகனும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தன்னை ஷீர்டி சாய்பாபாவின் பக்தன் என்றும், தாம் சரியான வாய்ப்புகளை நடிப்புத் துறையில் பெறாத பொழுதெல்லாம் தனது அக்கா சாமியாடி அருள்வாக்குச் சொல்லி தமக்கு நம்பிக்கை அளித்ததாகவும், அரசியலில் ஒரு பெரிய தலைவரின் கீழ் பணியாற்றும் மிகச் சிறப்பான வாய்ப்பும், அவர் கதை வசனத்தில் நடிக்கும் வாய்ப்பும் தமக்கு ஷீர்டி சாய்பாபாவின் அருளால் கிடைத்தது என்றும் புளகாங்கிதமடைந்த அவர் தனது குணங்களாக எல்லோரையும் நேசிப்பவன் என்றும், முன்கோபம் உடையவன் என்றும், சிறுவயதில் திருவிழாகடை ஒன்றில் கைக்கடிகாரம் ஒன்றைத் திருடிவிட்டு பின் பயந்து அதனைத் தூக்கி எறிந்ததாகவும், இசுலாமிய நண்பர்கள் பலர் உள்ளதாகவும், பலருக்கு நன்றிக்கடன் பட்டவராகவும் தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.
அவரை ஹிப்னடைஸ் செய்யும் மருத்துவராக வந்த வேதமாலிகா அவர் பங்குக்கு முன்ஜென்மம் என்பது கதையோ அல்லது கற்பனையோ இல்லை. இதன் தாய்வீடு இந்தியா என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமையளிப்பதாகவும், ஆதிசங்கரரின் புனரபி ஜெனனம் முதல் திருவள்ளுவரின் எழுபிறப்பின் தீயவை தீண்டா வரை அனைத்தையும் துணைக்கழைத்து அமெரிக்காவில் இதனை நிரூபித்துள்ளார்கள் என்று நீண்ட புளுகு உரையுடன் போஸ் வெங்கட்டை நினைவுத் தூக்க (ஹிப்னாடிசம்) நிலைக்கு அழைத்துச் சென்றார்.
முதலில் இந்த ஜென்மத்தில் (0-வயது) அம்மா வயிற்றில் அவர் இருந்த நிலைக்கு அழைத்துச் சென்றதாக கூறி - அவரிடம் நீங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார். போஸ் வெங்கட் இல்லை என்றும் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறுகிறார்.
பிறகு, அதிலிருந்து முந்தைய ஜென்மத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூற போஸ் தான் ஒரு போர்வீரனாக சண்டையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். உடனே மருத்துவர் எந்த நாட்டுடன் சண்டை எனக் கேட்க அவர் வேறு நாட்டுடனல்ல, ஜாதிச் சண்டை என்கிறார். ஓ ஜாதிச் சண்டையா எந்த நாடு எனக் கேட்க நான் சீனாவில் போர்வீரனாக இருக்கிறேன் என்கிறார். பின் என்னவாயிற்று என்று கேட்க நான் இறந்துபோய்விட்டேன் என நினைக்கிறேன். வெள்ளை தாடி, பூமாலை சின்னப் பசங்க எல்லாம் குதித்து ஆடுவதுபோல் தெரிகிறது என்கிறார். ஓ நீங்கள் இறந்துவிட்டீர்கள். என்ன வயது என்று தெரிகிறதா எனக் கேட்க வயது 40-45க்குள் இருக்குமென நினைக்கிறேன் என்கிறார். அதற்குப் பிறகு மருத்துவர் அதற்கு முந்தைய ஜென்மத்திற்குச் செல்வதாகக் கூறுகிறார். அதில் பச்சை வயல்கள் நிரம்பிய ஊரில் மதகுருவாக மசூதி ஒன்றில் இருப்பதாகக் கூறுகிறார். வயது என்ன என்று கேட்க 70-க்கு மேல் என்கிறார். எந்த நாடு என்று மருத்துவர் கேட்க மலைகள் நிறைய இருக்கிறது. ஈரான் அல்லது ஈராக்காக இருக்கலாம் என்கிறார். அந்த வாழ்க்கையில் மிகவும் திருப்தியாக இருந்து இறந்ததாகக் கூறுகிறார்.
அடுத்து வேறொரு ஜென்மத்திற்குள் செல்ல அதிலும் முஸ்லிமாக இருப்பதாகவும் மலைப்பகுதியில் உள்ள தாஜ்மகால் போன்ற அமைப்பில் ஒரு இந்து கோவில் ஒன்றில் திருடச் செல்வதாகவும், ஆனால் அங்கு எதையும் திருடி வரவில்லை என்றும் கூறுகிறார்.
முடிவாக மருத்துவர் அவர் கடந்த எந்தப் பிறவியிலும் திருமணம் ஆகாதவராகவே இருந்திருக்கிறார் என்றும் அப்படி இருந்தது வாழ்க்கை முழுமையடைந்ததாகாது என்றும், எனவே அப்பா, அம்மா, அன்பான அக்கா, மனைவி குழந்தையுடன் வாழ்ந்து, விட்டுப்போன கடமைகளை முடிக்கவே இந்த ஜென்மத்தில் அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றிருப்பதாகவும், அனைவருக்கும் உதவும் நல்ல குணமுள்ளவராக இருப்பதாகவும் கூறி நிகழ்ச்சியை முடிக்கிறார்.
இந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முழுமையாகக் கூறக் காரணம், சீனாவின் போர் வீரனாக ஜாதிச் சண்டையில்(!?) ஈடுபட்டு இறந்ததையும், பசுமையான ஊராக(!?) ஈரானிலோ அல்லது ஈராக்கிலோ மதகுருவாக இருந்ததையும், தாஜ்மகால் போன்ற மொகலாய கட்டட அமைப்பில் இந்து கோவில்(!?) ஒன்றையும் பார்த்ததாகக் கூறுவதை நம்புவோம் என்று நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அனைவரையும் வடிகட்டிய முட்டாளாக ஆக்கும் எண்ணத்துடன் செயல்படும் ஹிப்னாடிசம் செய்யும் மருத்துவரையும், நிகழ்ச்சியை வழங்கும் நடிகரையும் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்வதற்காகத்தான்.
இதே போன்றுதான் அடுத்த வாரத்தில் வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிஷா, ஆண் மயிலாக ஒரு ஜென்மத்திலும், பசுமாடாக ஒன்றிலும், கேரளப் பெண்ணாக பாம்பு கடித்து இறப்பவராக ஒன்றிலும் இருந்ததாக கதையளக்கப்பட்டது. இவரும் இந்த ஜென்மத்தில் அம்மா வயிற்றில் இருந்தபோது மகிழ்ச்சியாக இல்லை என்றார். வாரத்திற்கு இருமுறையாவது சென்னை கபாலீசுவரர் கோவிலுக்குச் செல்லவில்லையென்றால் தனக்கு நிம்மதியாக இருக்காது. அந்த அளவிற்குப் பக்தி உள்ளவள் என்று தம் பெருமையைக் கூறினார்.
தொலைக்காட்சித் தொடர்களில் பார்ப்பனப் பெண்மணியாக நடித்து வரும் லட்சுமி என்ற நடிகை ஒரு ஜென்மத்தில் மைசூர் அரண்மனை நாட்டியக்காரியாகவும், அடுத்த ஒன்றில் காஞ்சிபுரத்தில் சிங்கப்பெருமாள்கோவில் அருகே இருக்கும் அக்கிரஹாரத்தில் உலாவும் ஆவியாகவும், திருப்பதி மடத்து(!) தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சியாக ஒன்றிலும், மற்றொன்றில் பார்ப்பனக் குடும்பத்தில் காயத்ரி என்ற பெயரில் இளம்பெண்ணாக இருந்ததாகவும் தண்ணீரில் விழுந்து இறந்த தனக்கு எல்லாக் காரியங்களும் செய்ததாகவும் கூறினார். காஞ்சிபுரத்தில் மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகக் கூறிய இவர் நினைவுத் தூக்கத்தின்போது காஞ்சிபுர கோவில் தெருக்களைச் சரியான முறையில் கூறி வேதம் புதிது படத்தில் வரும் கதையையும் சேர்த்துக் கதையளந்தார்.  அடுத்தடுத்த வாரங்களிலும் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் பாபிலோனா, தொலைக்காட்சித் தொடர் நடிகைகள் காவேரி, அபிதா போன்ற அனைவரையும் இந்த மாதிரியே பல ஜென்மங்களில் பிச்சைக்காரியாக, ராணியாக, புறாவாக என பலவிதமாக இருந்ததாகக் கூறி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மணிநேர வியாபாரத்தை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். சாதாரண நிலையில் உள்ள பொதுமக்களில் யாரையாவது அழைத்து வந்து இந்த நிலைக்கு உட்படுத்த நினைக்காமல் நடிகர், நடிகையாகவே பார்த்து நடிக்க வைத்திருப்பதே இந்த நிகழ்ச்சியின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றது. அப்போதுதானே அடுத்து வருபவர்களுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று பயிற்சியளிக்க முடியும்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முன்னுரையுடன் மறுபிறப்பு பற்றி புத்த மதத்தில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டாக்டர் பிரைய்ன் வெய்ஸ் இப்படிச் செய்தார். பைபிளில் ஏசு இப்படிச் சொன்னார்; ஏதோ ஒரு நாட்டில் எட்கர் கேஸ் இப்படிக் குணப்படுத்தினார் என்று நிகழ்ச்சியைப்  பார்க்கும் மக்களை ஏதோ மருத்துவ முறைப்படிதான் நிகழ்ச்சியை நடத்திச்  செல்வதாக ஏமாற்றும் இந்தக் கயமையை நாம் எப்படி ஆதாரபூர்வமாக மறுப்பது? இப்படிப்பட்ட பேய், பில்லி, ஆவி, மறுபிறப்பு மூடநம்பிக்கைச் சவால்களை அறிவியல்பூர்வமாக எதிர்கொண்ட மனநல மருத்துவர் கோவூர் அவர்கள் தமது நூல்களில் இவற்றைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறார். டாக்டர் கோவூர் அவர்களின் வளரும் நாடுகளும் மடமை நம்பிக்கைகளும் என்ற கட்டுரையில் ஹிப்னாடிசம் (நினைவுத் தூக்கம்) மூலமாக இப்படிப்பட்ட கற்பனைக் கனவு காணும் உணர்வுகளை உந்திவிட முடியும். முற்பிறப்பில் நம்பிக்கையுள்ள ஓர் இந்து அல்லது பவுத்தரை இப்படி ஹிப்னாடைஸ் (மயங்க) செய்தால், அவர் உடனே தமது முந்திய பிறவி பற்றிக் கதையளக்கத் தொடங்குவார். சொர்க்கம் நரகம் இவற்றை நம்புகின்ற ஒரு கிறித்தவர் அல்லது ஒரு முஸ்லிம் இப்படி ஹிப்னாடிசத்துக்கு உள்ளாக்கப்பட்டால் அவர் சொர்க்கத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டால் உடனே அதைப்பற்றி வருணிக்கத் தொடங்கிவிடுவார். இப்படி ஓர் அரைமயக்க நிலையில் இருப்போரிடமிருந்து உண்மைகளை வரவழைப்பதாகச் சொல்வது முட்டாள்தனமாகும். மனோதத்துவ (உளவியல்) மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இது ஆராய்ச்சிக்கு உதவலாம் என்றும்,
படிப்பறிவில்லாத பாமரர்கள் தங்கள் அறியாமையால் மூடக்கற்பனை காணும் நோய்வாய்ப்பட்டு ஏதாவது சொன்னால், அவர்களுக்குப் பைத்தியக்காரர்கள் என்ற பெயரைச் சூட்டி மனநோய் மருத்துவ விடுதியில் சேர்த்து விடுகிறோம். ஆனால் படித்தவர்கள் இந்த நோயாளராகும்போது நிலைமை முற்றிலும் முரணாகிறது. சாதாரணப் பாமரப் பைத்தியத்தைவிட இவர்கள்தாம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர்கள், மானிட மனத்தூய்மையில் கலப்படும் செய்து கெடுப்பவர்கள்.
வேதியியல், ரசாயனம், தாவர இயல், விலங்கியல், பொறியியல், மருந்தியல், நிலநூல், வரலாறு, வான இயல் ஆகிய பல்வேறு அறிவியல் துறைகளைப்பற்றி ஆராயும் அறிவாளிகள் படைக்கின்ற நூல்கள் சிந்தனைக் கருவூலங்களாகத் திகழ்பவை. ஆனால் ஈசாப்புக் கதைகள், அராபிய இரவுக் கதைகள் (1001) ஒடிஸ்ஸி, இராமாயணம், பாரதம், குரான், பைபிள் போன்ற ஆபாசக் கற்பனைக் கதைகள் புராணிகர்களின் புளுகுமூட்டைகளாக விளங்குகின்றன.
மனிதனுடைய அறிவுபூர்வமான ஆக்கச் சிந்தனையின் விளைவாகத்தான் இன்றைய விஞ்ஞான விந்தைகளான அணுசக்தி, வானொலி, வானொளி, நிலவில் இறங்குதல், விண்கோள் செலுத்துதல், இருதய மாற்றுச் சிகிக்சை, இரத்தம் செலுத்துதல், செயற்கை மூச்சு (சுவாசம்) கொடுத்தல், சிறுநீரகம் பொருத்துதல் ஆகியவை சாத்தியமாயின. எந்த மதத்தையும் சார்ந்த பக்தி நூல்கள் எவையும் இம்மாபெரும் அற்புதங்களைக் கண்டுபிடிக்க எள்முனையும் உதவிடவில்லையே! என்று மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.
மேலும் மற்றொரு கட்டுரையில், வாழ்கின்ற மதங்களில் மிகப் பழைமை வாய்ந்த இந்து மதத்தில், எல்லா உயிர் வாழ்வனவும், அழிவில்லாத ஆத்மா படைத்தவை என்று போதிக்கப்படுகின்றது. ஆனால் மாறுபடாத யூத-_கிறித்தவ_இசுலாமிய மதங்களில், மனித ஆத்மா மட்டுமே அழிவற்றது என்று கூறப்படுகின்றது! 2000 ஆண்டுகட்கு முன் இருந்த புத்தர் இந்து மதத்தை எதிர்த்துப் புரட்சி செய்தவர்; இந்தியாவின் சிறந்த சமுதாய - மதச் சீர்திருத்தவாதி; அவர் மனித ஆவிகூட நிலையானதல்ல என்று கூறிவிட்டார். இதுதான் இன்றைய அறிவியல் (விஞ்ஞானம்) கண்டுபிடிப்பும் ஆகும். ஆனால் பிற்காலத்தில் புத்த வேதங்களை எழுத வந்த சிலர், பித்தலாட்டமாகப் புத்தரின் அடிப்படைக் கொள்கைகளையே திரித்துக் கூறிவிட்டனர்! மனித மரணத்துக்குப்பின் அந்த ஆவி நிலைத்திருப்பதற்கு ஏதாவது காரணகாரிய விளக்கம் உள்ளதா? பார்க்கலாம் நாமே!
உயிர் என்பது என்னவெனில், மூச்சு (சுவாச) ஓட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு சக்தியேயாகும். மூச்சின் (சுவாசத்தின்) மூலமாக குளுகோஸ், புரதம், கொழுப்பு ஆகிய சத்துகள் ஆற்றலாக மாற்றப்பட்டு பயன் உள்ளவை ஆகின்றன. ஒரு மெழுகுவர்த்தி எரிவதற்கு இதை ஒப்பிடலாம். மெழுகு உருகிவிடாமல், அல்லது எரிபொருளாக மாறாமல் இருக்குமானால், ஒரே மெழுகுவர்த்தியை எத்தனை தடவை வேண்டுமானாலும் கொளுத்தி, அணைத்து, பயன்படுத்த முடியும்! அதே போல, உயிர் போனபின் மனித உடல் அழுகித் தேய்ந்து குறைந்து மாய்ந்துபோகாமல் இருக்கக் கூடுமானால், அந்த உயிர் அல்லது ஆவியையே மீண்டும் செலுத்தி, மனிதன் சாகாமல் இருக்கச் செய்ய இயலும்.
உயிர் என்பது தங்கியிருக்க எப்போதுமே ஓர் உடல் தேவை! உடலை விட்டுப் பிரிந்து, அது எங்கேயும், எதிலேயும், தங்கமுடியாது! அதேபோல், மனம் என்பது தனியாக இயங்கக் கூடியதல்ல. அறிவியல் பரிசோதனைகளில், மனத்தைச் சார்ந்த உணர்வுகளான காதல், அன்பு, கோபம், வெறுப்பு, கொடுமை, இரக்கம் ஆகியவற்றுக்கு மூளையில் தொடர்புடைய தனித்தனி நரம்புகளை, மின் அதிர்வு செய்ததன் மூலம், உருவாக்கிக் காட்ட முடிந்தது! அதன் வாயிலாக என்ன புரிந்தது? மனித உடலில்தான் உயிர் தங்க முடியும்! அந்த உடலில் உயிர் தங்கி, உடலும் கெடாமலிருக்கும்போதுதான், மூளையிலுள்ள மனம் என்று நாம் அழைக்கும் செயலும் இருக்க முடியும்! உயிருக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டு, ஆத்மா என்றோ, ஆவி என்றோ, ஏதும் கிடையாது! கிடையவே கிடையாது!! என்றும் கூறுகிறார்.
மனித ஆத்மா மட்டும்தான் அழியாதது என்று பிற மதங்களின் நம்பிக்கைப்படிப் பார்த்தால், வண்ணத்துப் பூச்சியாகவும், வண்டாகவும், புறாவாகவும் பிறந்தவர்களின் ஆத்மா எப்படி அழியாமல் இருக்கிறது?
எல்லா உயிர்களுக்கும் ஆத்மா உண்டெனில், செடி, கொடி, புழு, பூச்சி, பூஞ்சை, பாசி வகையறாக்களின் ஆத்மாக்கள் எல்லாம் எங்கே? அவற்றின் மறுசுழற்சிக்கு என்று என்ன விதிகள் இருக்கின்றன?
ஆ... ஊ... என்றால் ஆயிரம் விளக்கங்களைக் கேட்கும் விஜய் டி.வி. நடந்தது என்ன? குழு, விஜய் டி.வி. அரங்கத்துக்குள் நடப்பது என்ன? என்பதை வெளியே கொண்டுவர வேண்டாமா?
ஆக்கபூர்வமான விவாதங்கள் என்று அறியப்படும் நிகழ்ச்சிகளிலேயே அமானுஷ்யங்கள் என்று விவாதிக்கும்போது, உங்கள் அறிவியல் மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பேசுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. அப்படியென்றால் முட்டாள்தான் அங்கு பேச முடியுமா? பகுத்தறிவாளர்கள், அறிவியல் சிந்தனையாளர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளில் விளக்கமளிக்க முடியாத வண்ணம் இருட்டடிப்பு செய்யப்படும் அனுபவத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறார்களே! அப்படியென்றால் அவர்கள் விரும்புவது சுவாரஸ்யத்தை நீட்டித்துக் கிடைக்கும் வியாபாரத்தைத்தானே!
தொடர்கள் மூலமாக மட்டுமல்லாமல் இந்த மாதிரி உளவியல் மருத்துவர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளும் நம் மூளையை மழுங்கடிக்கின்றன என்றால் அறுவை சிகிச்சைக் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்வதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் முட்டாள், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னதில் எள்ளளவாவது பிசகு இருக்கிறதா? மக்களின் மடத்தனத்தைப் பயன்படுத்தி, அதை விரிவாக்கி விற்றுக் காசு பார்க்கும் இந்த மகாமகா அயோக்கியத்தனத்தைத்தான் அத்தனை ஊடகங்களும் செய்து வருகின்றன. இவற்றை அம்பலப்படுத்தி, மக்களைத் தெளிவுபெறச் செய்ய வேண்டியது நம் கடமை.

சனிமூலை

அமானுஷ்யங்கள் என்று நாம் வகைப்படுத்தும் அனைத்திலும் இறையருளின் பெருங்கருணை நீக்கமற நிறைந்திருக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.  இந்த அமானுஷ்யங்களை ஏதோ தற்செயலான காரியம் என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தது இல்லை.  இது எப்படி நடந்தது என்று எதற்கும் எப்போதும் வியந்து நின்றது இல்லை.

இறையருள் துணையிருந்தால் இப்படித்தான் நடக்கும் என்கிற உறுதி எப்போதும் மனத்தில் உண்டு.

மனிதனுக்கு எதிரே நிறுத்தப்படும் அமானுஷ்யங்கள் வழித்தன்னுடைய இருப்பை உறுதி செய்கிறது இறையருள்.    சத்துவ, நிர்க்குண காருண்ய சாகரமாய் விளங்கும் இறைவன் ஏதோ ஒருவகையில், ஏதோ ஒரு வடிவில், ஏதோ ஒரு செயலின் வழியாகத் தன்னுடைய கருணையைப் பொழிகின்ற தயாவாணன்.    பலநேரங்களில் விடை தெரியாக் கேள்விகளாக நமக்கு முன்பு விஸ்வரூபம் எடுக்கும் பல்வகையான அமானுஷ்யமான நிகழ்வுகள் இதனை நமக்குக் காட்ட எத்தனிக்கும்.

என்னுடைய வாழ்க்கையில் பல நேரங்களில் இவை போன்ற அமானுஷ்யங்களை நின்று போற்ற மனம் இல்லாது நகர்ந்து போயிருக்கிறேன்.  ஏதோ ஒருவகையான அலட்சியம் மற்றும் அகந்தை கலந்த என்னுடைய அணுகுமுறை  இறையருளை நோக்கிப் பயணிக்க விடாமல் மடையை மாற்றுவதை உணர்ந்து இருக்கிறேன்.

பல நேரங்களில், பல வடிவங்களில் அமானுஷ்யங்கள் கண்முன் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் அதனை அந்தக் கணம் கண்டு கொள்ளாது பின்னர் ஏதேனும் சந்தர்ப்பத்தில் எங்காவது மலைத்து அமர்ந்து இருக்கும்போது தவறவிட்ட அமானுஷ்யங்கள் மனதுக்கு சிறிது சஞ்சலங்களைத் தந்திருக்கின்றன.

2004ம் ஆண்டு.  புதுடெல்லி இராமகிருஷ்ணபுரத்தில் என்னுடைய அலுவலகம் இருந்தது.   உள்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  

ஒரு காலைநேரம்.  என்னுடைய நண்பராக இருந்த செயல்வீரர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி வந்தது.  அவருடைய இன்னொரு நண்பர் என்னைப் பார்க்க வருவதாகவும் முடிந்தால் ஏதாவது உதவி செய்யுங்கள் என்றும் அந்த நண்பர் கூறினார்.  என்னைப் பார்க்க வருவதாகச் சொன்ன அந்த நண்பர் சிறு வியாபாரம் ஒன்றை செய்து கொண்டிருந்தார்.  பொதுவாக யாவரும் தன்னைத் தொழிலதிபர் என்று அழைப்பதைப் பெரிதும் விரும்புவார்.  சில நிகழ்ச்சிகளின் அழைப்பிதழில் தன்னுடைய பெயருக்குக் கீழ் தொழிலதிபர் என்று   அச்சிடச் சொல்லி அதற்காக அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பணமும் கொடுத்தவர் அந்த மனிதர்.

நண்பருக்கு நண்பர் வீட்டுக்கு வந்தார்.  என்னிடம்   பல விஷயங்களைப் பேசிவிட்டு ஒரு உதவி வேண்டும் என்று ஆரம்பித்தார்.  தன்னுடைய வணிகத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சொன்னார்.  ஒரு வங்கியின் கடன் அட்டை வழியாகப்  பெரும் தொகை ஒன்றைப் புரட்டியதாகவும் அதனைத் திருப்பிக் கட்டுவதற்கு உடனடியாகப் பெரும் தொகை ஒன்றை சரிசெய்தாக வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொன்னார்.  எனவே அந்தத் தொகையை வங்கிக் கடனாக ஏற்பாடு செய்து கொண்டு இருப்பதாகச் சொன்னார்.

பிறகு நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.  நான் அரசு ஊழியனாக இருப்பதால் என்னுடைய ஊதியச் சான்றிதழைக் கொடுத்தால் அந்தப் பெரிய தொகையை சுலபமாகக் கடனாகப் பெற முடியும் என்றும் அப்படிப் பெற்றுத் தந்தால் தன்னுடைய கடன் தொல்லை உடனடியாகத் தீரும் என்றும் சொன்னார்.  நீங்கள் உங்கள் ஊதிய சான்றிதழைக் கொடுத்து ஒரு கையெழுத்துப் போட்டால் போதும்.    நான் ஒவ்வொரு மாதமும் தவணைத் தொகையை உங்கள் பெயரில் திருப்பிக் கட்டி விடுகிறேன்.  உங்களுக்குப் பிரச்னை இருக்காது என்றார்.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.  இந்த மனிதரை என்னிடம் அனுப்பிய செயல்வீரர் வங்கி ஒன்றில்தான் பணிபுரிகிறார்.  அதுவும் அங்கு பெரும் செல்வாக்கோடு இருப்பதாக உலகத்துக்கே காட்டிக் கொள்கிறார்.  அந்த மனிதர் ஏன் உங்களுக்கு உதவக்கூடாது என்று இவரைக் கேட்டேன்.  பரிந்துரை செய்த அந்த மனிதரிடமும் கேட்டேன்.  பார்த்து செய்யுங்கள்.  எதற்கும் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்றார் அந்தச் செயல்வீரர்.

இது விநோதமான பரிந்துரையாகப் பட்டது எனக்கு.

ஒரு பக்கம் கடன் கேட்கும் அந்த நபரிடம் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளலாம்.
இன்னொரு பக்கம் கடன் ஏற்பாடு செய்கிறவனை எச்சரிக்கையும் செய்யலாம்.  அதையும் மீறிக் கடன் எடுத்துக் கொடுத்தவன் அழிந்தாலும் தான் எந்தவகையிலும் பாதிக்கப் போவதில்லை என்ற நல்லெண்ணம்-.

இப்போது இப்படி  எழுதுகிறேனே தவிர அப்போது இதனை எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.  கடன் கேட்டு வந்த நபர் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் என்னிடம் பேசினார்.  என் இடத்தில் யாராக இருந்தாலும் மிகவும் எளிதாக நம்பி இருப்பார்கள்.  அந்த நண்பரின் உரையாடலில் அத்தனை பசப்பு விரவி இருந்தது.

பொதுவாக வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் நான் என்ன பேசுகிறேன் என்பதையோ எங்கள் உரையாடலின் இடையில் வருவதையோ என்றும் செய்யமாட்டாள் என் மனைவி.    எனவே அவளுக்கு இந்த விஷயம் தெரியாது.  அவளிடம் இதைப் பற்றிப் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்தேன்.

அந்த நண்பருக்கு இந்த உதவியை செய்துதான் பார்ப்போமே என்று தீர்மானித்து இருந்தேன்.  கடனுக்கான விண்ணப்பங்களை வங்கியில் இருந்து வாங்கி வருமாறு அந்த நண்பரிடம் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினேன்.
என்னால் இயன்ற உதவியை செய்கிறேன் என்றும் அவரிடம் சொன்னேன்.

என்னுடைய உயர் அதிகாரியைக் கேட்ட போது அரசு ஊழியர்கள் இதுபோன்று வங்கிகளில் பெறப்படும் கடன்களுக்கு அலுவலகம் ஏதும் உத்தரவாதம் அளிக்காது என்றும் சொந்த உத்தரவாதத்தின் பெயரில்தான் கடனை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.  ஆனால் அந்த வங்கியில் இருந்து கடன் பெற்றுக் கொள்வது குறித்து அலுவலகத்தில் சட்டரீதியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொன்னார்-.

அலுவலகத்தில் இருந்து உத்தரவாதம் எதுவும் தேவை இல்லை என்றும் என்னுடைய மாதாந்திர ஊதியச் சான்றிதழ் இருந்தாலே கடன் கிடைக்கும் என்றும் அந்த நண்பர் அன்று மாலை சொன்னார்.

மறுநாள் என்னுடைய ஊதியச் சான்றிதழில் கையெழுத்திட வேண்டிய அதிகாரி அலுவலகத்துக்கு வரவில்லை.  நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்.  மாலை நான் வீடு திரும்புவதற்கு முன்பே என்னிடம் கடன் கேட்ட நண்பர் வாசலில் காத்துக் கொண்டிருந்தார்.  நெருக்கடி அதிகரித்து இருக்கிறது என்றும் இன்னும் இரண்டொரு நாட்களில் அந்தக் கடனைக் கட்டாவிட்டால் பெருத்த அவமானத்தை சந்திக்க நேரிடும் என்றும் பதட்டப்பட்டார்.
 

இந்த அதிகாரி வரவில்லை என்றாலும் சரி.  அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவரிடம் சான்றிதழில் கையொப்பம் பெற்று மறுநாள் நண்பருக்குக் கொடுத்து விடலாம் என்று நினைத்தேன்.   அன்றும் மனைவியிடம் இது குறித்து ஆலோசிக்கவில்லை.

மறுநாள் காலை அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.  வழக்கமாக இராம கிருஷ்ணபுரத்துக்கு, சாணக்கியபுரி காவல் நிலையத்தின் பின்புறமாகச் செல்லும் குறுகிய சாலை வழியாகச் செல்வது என் வழக்கம்.  அந்தச் சாலையில் நுழைந்த போது அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் வாயிலில் இரு ஃபக்கீர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  அவர்கள் அஜ்மீர் தர்காவை சேர்ந்த ஃபக்கீர்கள்.  சூஃபி இறைத்தத்துவத்தில் சொல்லப்படும் தேடலில் இருப்பவர்கள்.

டெல்லியின் பல இடங்களில் அநேகமாக அவர்களைப் பார்க்கலாம்.  பச்சை நிறத்தில் நீளமான அங்கி அணிந்திருப்பார்கள்.  பலவகையான பாசிமாலைகளை அணிந்திருப்பார்கள்.  நீண்ட தாடியும் கூர்மையான பார்வையும் கொண்ட இந்த ஃபக்கீர்கள்   யாரிடமும் சென்று பொருள் இரக்கமாட்டார்கள்.  ஒரு பெரிய பச்சைநிற  வெல்வெட் சால்வை ஒன்றை இருவர் அல்லது நால்வர் ஏந்தி இருப்பார்கள்.  அந்த வெல்வெட் துணியில் யாரும் பணம் போடலாம்.  யாரையும் நெருங்கி  தொந்தரவு செய்யமாட்டார்கள்.  மந்திரம் மாயம் என்று ஏமாற்ற மாட்டார்கள். 


பொதுவாக நான் இவர்களை என்றும் லட்சியம் செய்தது இல்லை.  அவர்களுக்கு என்றும் பணம் தந்தது இல்லை.  எங்கு அவர்களைப் பார்த்தாலும் கடந்து சென்று கொண்டிருப்பேன்.  அன்றும் அதே போல அவர்களைக் கடந்து என் ஸ்கூட்டர் சென்றது.

அன்று எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.  சிறிது தூரம் கடந்ததும் எதையோ மறந்தவன் போல ஸ்கூட்டரைத் திருப்பி அவர்களை நோக்கிச் சென்றேன்.  அவர்கள் சுமந்து சென்ற பச்சைத் துணியில் தன்னிச்சையாக பத்து ரூபாயை ஸ்கூட்டரில் உட்கார்ந்தவாறே எறிந்தேன்.  பணத்தை எறிந்து இடத்தை விட்டு நகருவதற்கு எத்தனித்தேன்.  ஸ்கூட்டரின் கைப்பிடியைப் பிடித்து நிறுத்தினார் ஒரு ஃபக்கீர்.  பார்வையற்ற அந்த மனிதர், பச்சைத் துணி விரிப்பில் இருந்து ஒரு ஒற்றை செண்டு மல்லிப் பூவை எடுத்து என் தலைமீது ஆசீர்வதிப்பது போல வைத்தார்.

எனக்கு அது பிடிக்க வில்லை.  இன்னும் அதிகமாகக் காசு கேட்கிறார் என்று நினைத்துக் கிளம்புவதற்குத் திமிறினேன்.  என் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு உருதுவில் சொன்னார் சீக்கிரம் நீ வேலையை விடப் போகிறாய். உனக்குப் பிடித்த வேலையை செய்யப் போகிறாய்.  யாருக்கும் எதற்காகவும் கையெழுத்துப் போடாதே.  பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்வாய்.’’

அந்த ஒற்றைப் பூவை என் கையில் அழுத்தித் திணித்துவிட்டு மீண்டும் அந்தப் பச்சை விரிப்பை ஏந்திக் கொண்டு நடக்கத் துவங்கினார்.

பளீரென்று அறைந்தது போலிருந்தது எனக்கு.  அலுவலகம் சென்று என்னுடன் மிகவும் நட்புடன் பழகும் என்னுடைய உயர் அதிகாரியிடம் விஷயத்தை சொன்னேன்.  ஃபக்கீர்கள் சொன்னார்கள் என்றால் அதை எக்காரணம் கொண்டும் அலட்சியம் செய்யாதே.  இன்று அஜ்மீரின்  அருளாளர் உன் மீது பெருங்கருணை பொழிந்திருக்கிறார். எதையாவது தவறாக செய்து அவதிப்படாதே என்று சொன்னார்.

பிறகு என்ன செய்திருப்பேன் என்று உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.  இன்று என்னிடம் பெருந்தொகையைக்  கடனாகக் கேட்டு இறையருளால் நான் தப்பித்த அந்த நபருக்குப் பல இடங்களில் கடன் பெற்றுத் தந்து அவதிப்படுபவர்கள்,   வட்டிக்குக் கடன் வாங்கித் தந்து பேரவதிப் படுபவர்கள், அவர் தனக்குப் பணம் ஏற்பாடு செய்து கொள்ள நடத்திய மாதாந்திர சீட்டில் பெரும் தொகை இழந்து மனநிம்மதியைத் தொலைத்தவர்கள் என்று பெரிய பட்டாளத்தையே நீங்கள் டெல்லித் தமிழர்களிடையே நீங்கள் காணலாம்.

இந்தத் தொழிலதிபருக்காகப் பலரிடமும் கடன் வாங்கித் தருமாறு பரிந்துரைத்த செயல்வீரர் மட்டும் எவ்வித பாதிப்பும் இன்றி எவ்விதப் பொருளாதார இழப்பும் இன்றி இயங்கி வருகிறார்  என்பதும்  இன்னொரு நடைமுறை நிஜம்.

இப்போது மீண்டும் இந்தக் கட்டுரையின் முதல் பத்திக்குச் சென்று படித்தீர்கள் என்றால் அங்கு நான் சொல்ல முயற்சித்தது   இன்னும் சற்றுத் தெளிவாகும்.